Home ஆரோக்கியம் பைல்ஸ் (Piles) எனப்படும் மூல நோய்: விரட்ட வழிகள்!

பைல்ஸ் (Piles) எனப்படும் மூல நோய்: விரட்ட வழிகள்!

696

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.
வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.மூலம்…
மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.
அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.
மூல நோய் இரு வகைப்படும் 1. உள் மூலம், 2.வெளி மூலம். உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.
மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
1. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் போது அது மூல வீக்கத்தை ஏற்படுத்தி மூல வியாதியைத் தோற்றுவிக்கும். தமிழ் வைத்தியத்தில் “வயது போக, வயிறு பெருக்க, மூலம் புறப்பட” என்ற சூத்திரம் இருக்கிறது.
2. நீண்ட நாள் மலச் சிக்கல் மூலத்தைப் புடைக்கச் செய்கிறது.
3. உடற்பயிற்சி இல்லாமை, நார் சத்து இல்லாத மாவு உணவு, மூல வாசலில் எரிச்சல் என்பனவும் மூல வியாதியைத் தோற்றுவிக்கின்றன.
4. அதிக நேரம் நின்றபடி வேலை செய்தல் அல்லது அதிக நேரம் உட்கார்ந்த படி வேலை செய்தல் மூல நோய்க்குக் காரணமாகின்றது.
5.மூல நோய் பரம்பரை நோயாகவும் சில குடும்பங்களில் இடம் பெறுகிறது.
6. வயதுவ காலத்தில் முதுமையின் பரிசுகளில் ஒன்றாக மூலவியாதியும் ஏற்படுவது வழமை. இதைத் தவிர்க்க முடியும். கட்டாயமாக முதுமை அடைந்த காலத்தில் மூல நோய் ஏற்படத்தான் மேண்டுமென்ற விதி கிடையாது.
7. கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதி அழுத்தம் ஏற்படுகிறது. மகப் பேற்றின் போது குழந்தையை முக்கி வெளியேற்றும் போது மூலம் புறப்படும். ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மூல நோய் மறைந்துவிடும்.
மூலவியாதி வருவதைத் தடுப்பதற்கு சில வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள வெண்டைக்காய் போன்ற வழுவழுப்பான மரக்கறிகளையும் இலை வகை களையும் உணவாக்க வேண்டும். முதலாம் கட்ட மூலவியாதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இது போதுமானது. நிறையத் தண்ணீர் குடிக்க மறக்கக் கூடாது.
வயதானவர்களுக்கு மூல இரத்தக் குழாய் வீக்கம் கூடுதலாக இருக்கும். பைன்டிங் (Binding ) என்ற சிகிச்சை முறையை மருத்துவ ஆலோசனையுடன் பயன் படுத்தி நன்மை அடையலாம். இந்தக் கட்டம் இரண்டாம் கட்ட மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.மூன்றாம் கட்டம் பற்றி இவ்விடத்தில் பார்ப்போம். அறுவை சிகிச்சை தவிர்ந்த பிறிதொரு மருத்துவ முறையும் மூலவியாதியைக் கட்டுப்படுத்த முடியாதென்ற நிலை தோன்றும் போது அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை அப்படியானவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். இப்போது சில நிமிடங்களில் முடியும் லேசர் அறுவை சிகிச்சை வந்து விட்டது. அதைப் பயமின்றிப் பயன் படுத்தலாம்.
மூல நோய்! விரட்ட வழிகள்!
மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
பாதுகாப்பு முறை: நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.
ரெசிபி
கருணைக்கிழங்கு குழம்பு: கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.
வெந்தயக் கீரை கட்லட்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.
பூண்டு சாதம்: பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
டயட்
உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.
அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும்.
அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.
ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும்.
அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம்.
இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும்.
இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.
மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை
எல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.
எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
இநத்ப் பாட்டிலின் மேல் ‘மாங்கொட்டை சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிடவேண்டும். இது முற்கால பெரியவர்கள் கையாண்ட ஒரு முறை. நல்ல பலன் தரக்கூடியது.
இது உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய கைகண்ட மருந்து. வீட்டில் ஏதாவது உஷ்ண சம்பந்தமான பதார்த்தங்களைச் செய்து சாப்பிட்டு விட்டால், அன்றைய சாப்பாட்டுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு இந்த மாங்கொட்டைச் சூரணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டால், உஷ்ண பதார்த்தம் ஒன்றும் செய்யாது. அதாவது கோழி, பப்பாளிப்பழம், பலாப்பழம், மாம்பழம் இன்னும் பலவிதமான உஷ்ண பதார்த்தங்களைச் சாப்பிட்ட அன்று மட்டும் இதைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அதாவது மூன்று வயதிற்கு மேல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு அரைத் தேக்கரண்டி அளவு கொடுத்தால் போதுமானது.
மூல வியாதியால் கஷ்டப்படுகிறவர்கள் இந்த மாங்கொட்டை சூரணத்தை ஐந்து நாள் காலை மாலை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், ஆசனக் கடுப்பு குணமாகும்.
ஐந்து நாள் விட்டு மறுபடி ஐந்து நாள் தொடர்ந்து மூலம் குணமாகும் வரை சாப்பிடலாம்.
இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அதிக காரம், அதிகப் புளி இவற்றை நீக்கிவிட்டு சாப்பிடவும். அத்துடன் அரைக் கீரை, முளைக்கீரை, பருப்புக் கீரை இவைகளில் ஒன்றைத் தாராளமாக சாப்பிட்டு வந்தால் மூலநோய் பூரணமாகக் குணமாகும்.
மூலச்சூடு, வயிற்றுப் போக்கு, கிராணி, வயிற்றுக் கிருமிகள் ஆகியவை குணமாக மாங்கொட்டை சூரணத்தில் ஒரு அளவு எடுத்துக்கொண்டு அந்த அளவு ஓமத் தூளும் ஓமத்தூள் அளவு சுக்குத்தூளும், சுக்குத்தூள் அளவு கசகசாத் தூளும் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் போட்டு நன்றாக மூடிவிட்டு அதன் மேல் ‘மாங்கொட்டை கூட்டுச் சூரணம்’ என்று எழுதி ஒட்டிவிட வேண்டும்.
மேலே சொன்ன நோய்கள் குணமாக ‘மாங்கொட்டை கூட்டு சூரண’த்தில் ஒரு பாக்களவு எடுத்து அத்துடன் பசு நெய் சேர்த்துக் கலக்கிச் சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு அரைப் பங்கு போதுமானது. – See more at: http://www.marhum-muslim.com/2013/05/blog-post_595.html#sthash.PfpJ2zYA.dpuf