Home பெண்கள் தாய்மை நலம் கவனமா இல்லாட்டி கருப்பை இறங்கிடும் !

கவனமா இல்லாட்டி கருப்பை இறங்கிடும் !

18

கருவில் குழந்தையை சுமக்கும் பெண்கள் அனைவருக்குமே சுகப்பிரசவமாக இருக்கவேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருக்கும். சிசேரியன் என்றால் வயிற்றை கிழிப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவாரம் படுக்கையில் இருக்கவேண்டும். 6 மாதத்திற்கு எந்த ஒரு கடினமான வேலையும் பார்க்கக்கூடாது என்று பாடாய் படுத்திவிடும். எனவேதான் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கவனம் தேவை

சுகப்பிரசவம் நல்லதுதான். ஆனா, பிரசவத்துக்குப் பிறகு சில விஷயங்கள்ல கவனமா இல்லாட்டி, கர்ப்பப்பை இறக்கத்தால பாதிக்கப்படற அபாயம் சுகப்பிரசவத்துல அதிகம் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சுகப்பிரசவத்தின் போது, ரொம்பவும் சிரமப்பட்டு, குழந்தையை வெளியேற்றுவது, கஷ்டமான பிரசவம், ஆயுதப் பிரசவம்… இதெல்லாம் இடுப்பெலும்பு தசைகளை தளர்த்திவிடும்.

பிரசவத்துக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும், எடை தூக்கறது, ரொம்பவும் உடம்பை வருத்தற மாதிரியான வேலைகளைச் செய்யறது மூலமாகவும் தசைகள் தளர்ந்து, கர்ப்பப்பை தன்னோட இடத்துலேர்ந்து இறங்கிவிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பப்பை இறக்கம் ஆரம்பக் கட்டத்துல இருந்தா சரி செய்யறது சுலபம். வலை மாதிரியான ஒன்றின் முனையை கர்ப்பப்பையோட பின் பக்கத்துலயும்,இன்னொரு முனையை இடுப்பெலும்புலயும் சேர்த்து தைத்துவிடலாம். இதனால் கர்ப்பப்பை தன்னோட இயல்பான இடத்துக்கே வந்துடும். இந்த சிகிச்சைக்குப் பிறகு எடை தூக்காம இருக்க வேண்டியது முக்கியம்.

கர்ப்பப்பை இறக்கத்தை ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டால் அது தனக்குப் பக்கத்துல உள்ள சிறுநீர்ப்பை, மலப் பைகளையும் சேர்த்து இழுக்க ஆரம்பிக்கும்.சிறுநீர் பை இறங்கத் தொடங்கினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், முழுமையா சிறுநீரை வெளியேத்தாத உணர்வும் ஏற்படும். தவிர, அந்தப் பைக்குள் எப்போதும் சிறுநீர் தங்கி, நோய் தொற்றினை ஏற்படுத்தும். அது சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

இதே மாதிரிதான் மலப்பை இறக்கத்துலயும் பிரச்னைகள் ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பப்பை இறக்கத்தை சரி செய்யும்போது சிறுநீர் பை, மலப் பைகளையும் சேர்த்து தூக்கி வச்சுத் தைக்க வேண்டியிருக்கும் என்கின்றனர் அவர்கள்.

பிரச்சினை தீவிரமாகும்

எதையுமே கவனிக்காமல் விட்டா, பிரச்னை தீவிரமாகி, கர்ப்பப் பையையே அகற்ற வேண்டி வரலாம். பிரசவமான பெண்களுக்கு மட்டுமில்லாம, கல்யாணமாகாத, குழந்தை பெறாத பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கலாம். அவங்களுக்கு கொலாஜன் திசுக்கள் பலவீனமாகி, அதன் விளைவா, கர்ப்பப்பை இறங்கலாம். சிலருக்கு பிறவியிலேயே தசைகள் பலவீனமா இருந்து, இப்படி நடக்கலாம். கர்ப்பப்பை இறக்கத்தை இப்ப லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலமா ரொம்ப சுலபமா சரி செய்ய முடியும் என்றும் ஆறுதலாக தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.