Home சூடான செய்திகள் விஜய் அப்பா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஜாக்குவார் தங்கம்

விஜய் அப்பா மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த ஜாக்குவார் தங்கம்

14

தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கம்(52) சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நான் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். சுமார் 800 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளேன். கடந்த திங்கள் அன்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர கூட்டம் தி.நகரில் நடந்தது.

அதில் அண்டை மாநிலங்களில் இருப்பது போல தமிழ்நாடு திரைப்படத் துறைக்கும் தனியாக தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது, நான் இந்தியா என்ற படத்தை தயாரிக்கிறேன். கார்த்தி நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டீர்கள். ஆனால் சிலர் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங் மட்டும் நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் ஷூட்டிங்கை மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை என்று கேட்டேன். இதற்கு ரிஷிராஜ், தமிழ் அரசன், பிரி மூஸ்டர், ராஜி சிற்பி ஆகியோர் என்னை கேவலமாக திட்டினர்.

துப்பாக்கி படத்தை பற்றி பேசினால், நாங்கள் துப்பாகியால் தான் பேசுவோம் என்றனர். தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன் ஆகியோர் என்னை பார்த்து கேவலமாக திட்டினர். மிரட்டி அடிக்க பாய்ந்தனர். கலைப்புலி சேகரன், ராதாகிருஷ்ணன், சுப்பையா, ராகவா, பாலாஜி ஆகியோர் என்னை காப்பாற்றினர். எஸ்.ஏ. சந்திரசேகரன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அதைத் தொடர்ந்து மர்ம போன் மிரட்டல்கள் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அவரது புகார் குறித்து விசாரணை நடத்துமாறு தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமாருக்கு, கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.