Home ஆரோக்கியம் பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?

பால்வினை நோயைத் தடுப்பது எப்படி?

25

பாலியல் தொடர்பான பல்வேறு விஷயங்களையும், எந்த மாதிரி தருணத்தில், எத்தகைய சூழ்நிலையில் பாலுறவை வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றியெல்லாம் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் பால்வினை நோய் அல்லது எஸ்டிடி
(STDs – Sexually transmitted diseases or Venereal diseases – VD) குறித்து பார்ப்போம்.

பால்வினை நோயானது அனைத்து வயதினருக்கும், ஆண்கள் – பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. பால்வினை நோய் உள்ளவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதால் இந்நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக விடலைப் பருவத்தினருக்கும், இளம் வயதினருக்கும் இந்நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம். எனவே, இந்நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்தல் அவசியம். பால்வினை நோய் என்று தெரிந்த உடனேயே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்தல் அவசியம்.

சிகிச்சை எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், அதுவே ஆண்மையிழப்பு, மலட்டுத்தன்மை போன்ற விபரீத விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தி விடும் வாய்ப்புண்டு. பால்வினை நோயின் அடுத்தகட்டமே ஹெச்ஐவி / எய்ட்ஸ் என்பதாகும். ஹெச்ஐவி / எய்ட்ஸ் போன்றவற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

பால்வினை நோய் இருப்பவர்களுடன் பாலுறவு கொள்வதால் மட்டுமே இந்நோய் பரவி விடுவதில்லை. இந்த தொற்று நோய் இருப்பவர்களுடன் ஸ்கின் டூ ஸ்கின் கான்டாக்ட் எனப்படும் தொடு உணர்ச்சி மூலமாகவும் பரவுகிறது. மேலும் பாலுறுப்புகள் மூலமாக உறவு கொள்ளாமல், வேறுவகையில் செக்ஸ் வைத்துக் கொண்டால் பால்வினை நோய் ஏற்படாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.

பால்வினை நோயை ஏற்படுத்துவது வைரஸ் அல்லது கிருமி என்பதால், உடலில் சிறு கீறல் இருந்தாலும் அதன் மூலம் இந்நோய் பரவி விடும் என்பதே உண்மை. இதில் வேடிக்கை என்னவென்றால் பலருக்கு பால்வினை நோய் இருப்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

அதனால் அவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் மனைவி / கணவனுக்கு அவர்களை அறியாமலேயே எளிதில் நோயை பரப்பி விடுகிறார்கள். வேறு பலர் பால்வினை நோய் இருப்பது தெரிந்தாலும், மற்றவர்களிடம் சொல்வதில்லை.

பால்வினை நோய் வந்த பின் சிகிச்சை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், வரும் முன் காப்பதே சிறந்தது. பால்வினை நோயைத் தடுப்பதற்கு மிகச் சிறந்த வழி ஆணுறை எனப்படும் காண்டம் உபயோகிப்பதே. தவிர, பெண்களாக இருப்பின் அவ்வப்போது மகப்பேறு மருத்துவரிடமும், ஆண்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவரிடமும் பரிசோதனை செய்து, நோய் இருப்பின் அதன் தன்மைக்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.