Home இரகசியகேள்வி-பதில் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு? டாக்டர் முழு தகவல்

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு? டாக்டர் முழு தகவல்

234

இரகசியகேள்வி-பதில்:நடக்கும்போது, படுக்கும்போது, சாப்பிடும்போது… எப்போதும் கையில் மொபைல் திரை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. வயிற்றுக்கு உகந்ததா என்பதைப் பார்த்த காலம்போய், நாக்குக்கு ருசியாக இருக்குமா என்று பார்த்துக் கண்டதையெல்லாம் சாப்பிடப் பழகிவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், மிகப்பெரும் அழுத்தம் மிகுந்ததாகப் பணிச்சூழல் மாறிவிட்டது. நவீன வளர்ச்சி, புதியதொரு வாழ்க்கையை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட நன்மைகள் நிறைய. ஆனால் இந்த வாழ்க்கைமுறை உடல் ரீதியாக, மனரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம். முக்கியமானது, மலட்டுத்தன்மை. குறிப்பாக, ஆண் மலட்டுத்தன்மை. உலக அளவில் சுமார் 30 சதவிகிதம் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தையில்லாத தம்பதியினர் இந்தச் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பலர் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்கள். சிலர், போலியான கருத்தரிப்பு மையங்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு ஏமாந்து நிற்கிறார்கள். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, 90 சதவிகித மலட்டுத்தன்மையை குணப்படுத்த வாய்ப்புண்டு என்றாலும், அதுகுறித்த விழிப்பு உணர்வு இல்லாததால் பல குடும்பங்கள் நிம்மதியில்லாமல் தவிக்கின்றன. மலட்டுத்தன்மை என்றால் என்ன, மலட்டுத்தன்மை என்பதும் ஆண்மைக்குறை என்பதும் ஒன்றா, மலட்டுத்தன்மை ஏற்படக் காரணங்கள் என்ன, எதையெல்லாம் குணப்படுத்தமுடியும்? அலசுவோம்.

“மலட்டுத்தன்மை என்பது ஒரு குறைபாடு. அதைக் குணப்படுத்த முடியும். மலட்டுத்தன்மை வேறு; ஆண்மைக்குறை வேறு. அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் பாலியல் சிகிச்சை நிபுணர் காமராஜ்.

“பல்வேறு காரணங்களால் ஒருவரது ஆணுறுப்பு எழுச்சியடையாமல் போகலாம். அதன் காரணமாக அவரால் இல்லறத்தில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போகும் நிலையே ஆண்மைக்குறை. ஆனால், மலட்டுத்தன்மை என்பது வேறு. இல்லறத்தில் முழுமையாக ஈடுபட முடியும். ஆனால், அவரால் குழந்தைப்பேற்றைக் கொடுக்க முடியாது. ஆண்மைக்குறை உள்ளவரது விந்துவில் உயிரணுக்கள் இருக்கும். மலட்டுத்தன்மையுள்ளவரின் விந்துவில் உயிரணுக்கள் இருக்காது. ஆண் மலட்டுத்தன்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ஆண்மைக்குறை. தாம்பத்ய உறவின்போது வெளிப்படும் விந்துவில் உயிரணுக்கள் இல்லாமல் இருந்தாலோ, உயிரணுக்கள் உற்பத்தியாகாமல் இருந்தாலோ இருக்கும் நிலையே மலட்டுத்தன்மை.

உயிரணுக்கள் உற்பத்தியின்மை

உயிரணுக்கள் உற்பத்தியில்லாமல் இருப்பது வெகுசிலருக்கே ஏற்படும் பிரச்னை. விரைப்பகுதியில்தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும். கருவிலிருக்கும்போது, வயிற்றின் உள்ளே இருக்கும் விரைகள், பிறந்தபிறகு விரைப்பைக்குக் கீழிறங்கி வரவேண்டும். இந்த நிலைக்கு ‘அன்டெசன்டட் டெஸ்டிஸ்’ (Undescended Testes) என்று பெயர். அவ்வாறு கீழிறங்கி வராமல் இருந்தால், விரைகளால் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. இதுதவிர, பிறவியிலேயே குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடுகள், சிறுவயதில் ஏற்பட்ட தீவிர அம்மைநோய்த் தொற்று, காசநோய், வெரிகோஸ் வெயின் என்னும் விரைக்குள் செல்லும் ரத்தக்குழாய்ச் சிதைவு, விரைகள் ஒன்றோடு ஒன்று முறுக்கிக்கொள்ளுதல் (Torsion Testes), கொனோரியா (Gonorrhea) போன்ற பால்வினை நோய்கள், விரைகளில் ஏற்படும் காயம் போன்ற பல்வேறு காரணங்களால் உயிரணு உற்பத்தி பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

உயிரணுக்கள் குறைபாடு

ஆணின் உயிரணுவின் தலைப்பகுதியானது, தீக்குச்சியின் நுனியில் உள்ள மருந்தைப்போல நீள் உருண்டை வடிவிலும், குறுகிய கழுத்துடனும், சாட்டை போன்ற அசையும் வாலுடனும் இருக்கும். உயிரணுவின் தலைப்பகுதியில்தான் ஒருவரது குணங்களைத் தீர்மானிக்கும் டி.என்.ஏ இருக்கும். சிலநேரங்களில் இதன் வடிவமைப்பில் குறைபாடுகள் இருந்தால் கருத்தரிக்கும் திறனை இழந்துவிடும். விந்துவில் குறைவான எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருந்தால், அவற்றால் ஊர்ந்து செல்லமுடியாது. புரோஸ்டேட் சுரப்பியில் (Prostate Gland) நோய்த்தொற்று இருந்தாலும் விந்தணுக்கள் நீந்திச் செல்லும் திறன் பாதிக்கும். அவை கருப்பையை அடையாமல் மலட்டுத்தன்மை ஏற்படும். சுமார் 70 சதவிகிதம் பேருக்கு இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

உடலுறவுக் குறைபாடுகள்

மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்ட உளவியல் காரணங்களால் பெரும்பாலான இளைஞர்களுக்கு உடலுறவு கொள்வதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தகுந்த மருத்துவ ஆலோசனை மூலம் சரிசெய்யலாம்.

உடலியல் குறைபாடுகள்

ஆண்மைச் சுரப்பி என்ற புரோஸ்டேட் (Prostate), சிறுநீர்ப் பையின் அருகே இருக்கும். இதில் சுரக்கும் பசை போன்ற பொருளும் விந்தணுப் பையிலிருந்து உருவாகும் திரவமும் சேரும்போதுதான் விந்தாகிறது. புரோஸ்டேட் பாதிக்கப்பட்டால் அதில் சுரக்கும் பசை போன்ற பொருள் வெளிவராமல் போகலாம். அதனால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை ஏற்படலாம். விரையிலிருந்து உயிரணுக்கள் வெளியே வரும் விந்துநாளங்களில் அடைப்பு இருந்தாலும் மலட்டுத்தன்மை ஏற்படும்.

வாழ்க்கைமுறை காரணிகள்

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், போதைப் பொருள்களின் பயன்பாடு, உடல் பருமன், சர்க்கரைநோய், அதிக உடற்பயிற்சி மேற்கொள்வது, மருந்து மாத்திரைகள் உட்கொள்வது போன்றவையும் மலட்டுத் தன்மைக்குக் காரணமாக இருக்கின்றன. மன அழுத்தத்துடன் பணிபுரியும் சூழல், நீண்டதூரம் வாகனம் ஓட்டுவது, ரசாயனத் தொழிற்சாலையில் பணிபுரிவது, பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் இடங்களில் பணியாற்றுவது போன்ற தொழில்சார்ந்த பிரச்னைகளாலும் மலட்டுத்தன்மை ஏற்படும். மொபைல் போன்களில் வெளிப்படும் கதிர்வீச்சு, புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சை போன்றவையும் உயிரணுக்களின் உற்பத்தியைப் பாதிக்கும். பிறவிக்காரணங்களைத் தவிர மற்ற காரணிகளால் ஏற்படும் எல்லா மலட்டுத் தன்மையையும் 90 சதவிகிதம் சரிசெய்ய முடியும். சிகிச்சை பெறுவற்குமுன், என்ன காரணத்தால் இந்தக் குறைபாடு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”என்கிறார் காமராஜ்.

குணப்படுத்த முடியாத மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு?

செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் பற்றியும், யாருக்கு எந்த முறை ஏற்றது என்பது பற்றியும் விவரிக்கிறார் மூத்த ஆண்ட்ராலஜிஸ்ட் (மலட்டுத்தன்மை) மருத்துவர் ஏ.ராஜசேகரன்.

ஐ.யூ.ஐ முறை (Intrauterine Insemination -IUI)

“ஆணின் உயிரணுவை எடுத்து நேரடியாகப் பெண்களின் கர்ப்பப்பையில் செலுத்தும் செயற்கைக் கருத்தரிப்பு முறையே ‘ஐ.யூ.ஐ’ முறை. பாலுறவின்போது ஓர் ஆணுக்கு வெளிப்படும் விந்தணுவில் குறைந்தபட்சம் ஒன்றரைக் கோடிக்கு மேல் உயிரணுக்கள் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் உடலுறவு மூலம் குழந்தை பெறுவது கடினம். ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி வரை உயிரணுக்கள் இருப்பவர்களுக்கு இந்தமுறை ஏற்றது. ஆண்களின் விந்தணுக்களைச் சேகரித்து, அவற்றில் சிறந்த உயிரணுக்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த உயிரணுக்களை, கருமுட்டை வெளியாகும்போது மனைவியின் கர்ப்பப்பையில் செலுத்திவிடுவார்கள். ஒரு சுழற்சியில் கரு உருவாகாவிட்டாலும்கூட குறைந்த பட்சம் மூன்று சுழற்சிகள்வரை செய்து பார்க்க வேண்டும். ஐ.யூ.ஐ சிகிச்சையில் இன்னொருமுறையும் உள்ளது. ஆண்களின் விந்துவில் உயிரணுக்களே இல்லாதபட்சத்தில், இன்னொருவரிடம் உயிரணு தானம் பெற்று, இதே சிகிச்சையைச் செய்யலாம். கணவன், மனைவி இருவரும் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்தச் சிகிச்சை தரவேண்டும் எனக் கருத்தரிப்பு மையங்களுக்குக் கட்டுப்பாடுகள் உண்டு.

ஐ.வி.எஃப் முறை (In-vitro-Fertilization -IVF)

ஐ.வி.எஃப் முறையில் பிறக்கும் குழந்தைகளை ‘டெஸ்ட் டியூப் பேபி’ என்பார்கள். பாலுறவின் போது வெளிப்படும் விந்துவில் ஒரு கோடிக்கும் குறைவான உயிரணுக்கள் இருக்கும் ஆண்களுக்கும், சினைப்பை நன்றாக இருந்தும் கருக்குழாய் வளர்ச்சி சரியில்லாத பெண்களுக்கும் இந்தமுறை பலனளிக்கும். பெண்ணுக்குக் கருக்குழாய் நன்றாக இருந்து, ஆணின் விந்தணு பாயும் திறன் குறைவாக இருந்தாலும் குழந்தை பெறுவது கடினம். இவர்களுக்கும் இந்தச் சிகிச்சைமுறை பலனளிக்கும். ஒரு டெஸ்ட் டியூபில், பெண்களின் கருமுட்டைகளை வைத்து, உயிரணுக்களைச் செலுத்தி ‘எம்ரியோஸ்கோப்பி’ என்ற கருவியில் பாதுகாப்பாக வைக்கப்படும். கருவும் உயிரணுவும் இணைந்து எம்ரியோக்கள் (கரு உருவாக்கம்) உருவானபிறகு ஐந்தாவது நாளில் குறிப்பிட்ட `எம்ரியோ’ மனைவியின் கருப்பையில் செலுத்தப்படும். ஐ.வி.எஃப் முறையிலும் ஒரே சுழற்சியில் வெற்றிகரமாக குழந்தை பிறந்துவிடும் என்று சொல்ல முடியாது. இம்முறையானது, ஆண் மலட்டுத் தன்மைக்கு பெரிதாகப் பலன் தராது.

இக்ஸி முறை Intracytoplasmic Sperm Injection (ICSI)

விரைகளில் விந்து வெளியாகும் வாஸ் (Vas) பகுதியில் அடைப்பு ஏற்பட்டிருப்பது அல்லது வாஸ் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால், வெளியாகும் விந்துவில் உயிரணுக்கள் இருக்காது. ஆனால், விரைகளில் உயிரணுக்கள் இருக்கும். இதுபோல, விந்துவில், உயிரணுக்கள் வெளிப்படாதவர்களுக்கும், சுமார் ஐந்து லட்சத்துக்கும் குறைவாக விந்தணுக்கள் இருப்பவர்களுக்கும், உயிரணு அமைப்பில் குறைபாடு உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தரக்கூடியது இக்ஸி முறை. இக்ஸி முறையில், ஒரேயொரு தரமான உயிரணுவை, விரைகளிலிருந்து ஊசிமூலம் வெளியே எடுத்து, சோதனைக்கூடத்தில் (Embryology Laboratory) தயாராக வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் கருமுட்டையுடன் சேர்த்துக் கருவாக்கம் செய்யப்படும். அதன்பிறகு ஐந்தாவது நாளில் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். இந்தமுறை ஆண் மலட்டுத்தன்மைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது” என்கிறார் ஏ.ராஜசேகரன்.

பெற்றோர் கவனத்துக்கு!

ஆணின் அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் (பிறப்புறுப்பின் இரண்டு பக்கங்களில்) இரண்டு விந்துப்பைகள் இருக்கின்றன. சில குழந்தைகளுக்கு இரண்டு விந்துப்பைகளும் (விரைப்பை) அடிவயிற்றிலிருந்து கீழே இறங்காமல் வயிற்றுக்குள்ளேயே தங்கிவிடும். விந்தணு உற்பத்தி சமச்சீரான சீதோஷ்ணநிலையில் இருக்கவேண்டும். அதற்காகவே, உடலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இயல்பாகவே அமைந்துள்ளது விந்துப்பை. ஆண் குழந்தை பெறும் தாய்மார்கள் குழந்தைக்கு விரைப்பை சரியாக இருக்கிறதா, உறுப்பு சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஏதேனும் குறைபாடு தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

உயிரணுக்களுக்கு நவீன கால எமன்!

பெரும்பாலான ஆண்கள் மணிக்கணக்கில் லேப்டாப்பை மடியில் வைத்துப் பயன்படுத்துகிறார்கள். இதனால் விந்துப்பை இருக்கும் பகுதி சூடாகி உயிரணுக்களின் உற்பத்தி குறையும். அதேபோல, இறுக்கமாக ஜீன்ஸ் பேன்ட் அணிவதும் விந்துப்பையைச் சூடாக்கும். அதிகநேரம் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவது, சூடான பகுதியில் நின்று வேலைசெய்வது, தினமும் வெந்நீரில் குளிப்பது போன்றவையும் விந்துப்பையைச் சூடாக்கும். இதனால் விந்து உற்பத்தி பாதிக்கப்படக்கூடும்.