Home குழந்தை நலம் தாய்மார்களின் கவனத்துக்கு… பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்!

தாய்மார்களின் கவனத்துக்கு… பிறந்த குழந்தையின் கண்களை கவனிப்பது அவசியம்!

29

குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அதன் கண்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

குழந்தைகள் குடும்பத்தின் வரம். அந்த வரங்களை வீட்டிலுள்ள அனைவரும் கவனமாக பார்த்துக்கொள்ள முனைவார்கள். தற்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் எளிதில் காணப்படுகின்றது.

சிசுவாக இருக்கும் குழந்தைகளின் சில குறைபாடுகளை தாய் கருவுற்ற 32–வது வாரத்தில்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனாலும், வயிற்றுக்குள்ளே வைத்து சிசுவின் கண்களுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவாய்ப்பில்லை.

எனவே, குழந்தை பிறந்து 1 வருடத்துக்குள் குறைகளை கண்டறிந்தால், அதனை விரைவில் குணப்படுத்தலாம். அதற்காக, இதை செய்யுங்கள்…

பிறந்தவுடன், வண்ணமயமான விளையாட்டு பொருளை குழந்தையின் பார்வையில்படும்படி கட்டி தொங்கவிடுங்கள். அதன் மூலம் குழந்தையின் கண் இயக்கத்தை தாயால் கண்டறிய முடியும். விளையாட்டு பொருளின் அசைவுக்கு தக்கபடி குழந்தையின் பார்வை திரும்புகிறதா? கவனம் அதில் பதிகிறதா? என்றெல்லாம் பார்க்கலாம்.

பிறந்த இரண்டு வாரத்தில் அடர்ந்த நிறத்திலான ஒரு பொருளை குழந்தையின் முன்னால் காட்டினால், அதன் கவனம் அதை நோக்கி ஒரு நிமிடமாவது திரும்பவேண்டும்.

மூன்று வாரத்தில், வெளிச்சத்தை எதிர்கொள்ள குழந்தையின் கண்கள் தயாராகிவிடும்.

ஒரு மாதத்தில் அம்மாவின் முகத்தை அடையாளங்கண்டு அம்மாவின் முகம் தென்படும்போதெல்லாம் சிரிக்கத் தொடங்கும்.

நான்கு மாதம் ஆகிவிட்டால் தனக்கு எது பிடிக்கிறதோ அதில் குழந்தை முழு பார்வையையும் செலுத்தி கவனிக்கும்.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆன பின்பு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுங்கள். மறைந்திருந்துவிட்டு திடீரென்று தோன்றி குழந்தையை சிரிக்கவைக்கும் இந்த விளையாட்டு மூலம் குழந்தை, குறிப்பிட்ட பொருளுக்கு அப்பால் இருந்து தோன்றுவதையும் பார்க்கத் தொடங்கும்.

9 மாதம் வரை தாய் மீது மட்டுமே பதியும் அதன் பார்வை, அதன் பின்பு தன்னை அடிக்கடி சந்திக்கும் மற்றவர்கள் மீதும் பதியும்.

மாறுகண், புரை ஆகியவை இருந்தால் தொடக்கத்திலே கண்டறிந்தால், இதை ஆபரேஷன் மூலம் சரிசெய்திடலாம்.