Home ஆரோக்கியம் பெண்களை அச்சுறுத்தும் நோய்! ஸ்பெஷல் ரிப்போர்ட்

பெண்களை அச்சுறுத்தும் நோய்! ஸ்பெஷல் ரிப்போர்ட்

27

அந்த காலம் போன்று இல்லை, இப்போ எல்லாம் 10 வயதிலேயே பூப்பெய்து விடுகின்றனர் என சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.
ஆம்…10 வயது முதலே சிறுமிகள் பூப்பெய்தி விடுவது இன்றைய காலகட்டத்தில் சகஜமான ஒன்று.

அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள்.

எனவே தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றியும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் பற்றியும் எடுத்துக்கூறுவது அவசியம்.

மேலும் எவ்வாறு பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது, சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வு பாடமும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இல்லையெனில் குழந்தை பேறு தள்ளிப்போதல், கருப்பை வாய் புற்றுநோய் என பலவித வியாதிகள் வந்து தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு.

இதையெல்லாம் விட்டு இன்றோ புதுவித நோய் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

அதுதான் பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(Polycystic Ovary Syndrome) அதாவது கருப்பை நீர்க்கட்டி.

டீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

அறிகுறிகள்

* உடல் பருமனாகிக் கொண்டுபோவது

* மாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.

* அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.

*உதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பது.

*கல்யாணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது.

என்ன காரணம்?

இந்த பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது சினைமுட்டைப் பையில் முட்டைகளைச் சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும்.

ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், பரம்பரையாகவும், மரபணு மூலமாகவும் இப்பிரச்னை ஏற்படுகிறது.

ஒவ்வொரு சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளிவரும் போது தான், விந்துக்களால் தாக்கப்பட்டு கருவாக உருவாகுகிறது.

மீதியிருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன, இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும்.

ஆனால் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது எனில், அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளிவருவதில்லை, அந்தமுட்டைகள் அழிவதுமில்லை.

அவற்றைச் சுற்றி நீர் சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சிகிச்சை முறைகள்

நீர்க்கட்டிகளை தானாகவோ அல்லது அறுவை சிகிச்சைகளின் மூலமாகவோ அகற்றலாம்.

கல்யாணமாகாத பெண்களுக்கு அவர்கள் டீன்ஏஜ் கடந்த பின்பும், பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் ஆறு அல்லது ஒன்பது மாதம் போன்று குறுகிய காலத்துக்கு மருத்துவரின் ஆலோசனைப் பேரில், தகுந்த ஹார்மோன்கள் அளித்த குணப்படுத்தலாம்.

கல்யாணம் ஆன பெண்களாக இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் 40 வயதுக்கு மேல் சென்றால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பெரும்பாலும் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே சிறுவயது முதலே ஓடியாடி விளையாடுவதன் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.