Home ஜல்சா கள்ளக்காதலுக்கு என் குழந்தையின் உயிரை விலை கொடுத்துவிட்டேன்

கள்ளக்காதலுக்கு என் குழந்தையின் உயிரை விலை கொடுத்துவிட்டேன்

18

hhhகள்ளக்காதலுக்கு தன் குழந்தையின் உயிரை விலை கொடுத்துவிட்டேன்“ என்று போலீஸ் விசாரணையில் நெல்லை இளம்பெண் சித்ரா கதறியபடி கூறியுள்ளார். அந்த குழந்தை தூத்துக்குடியில் கொன்று புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதல்
பாளையங்கோட்டை சாந்திநகர் 28–வது தெருவைச் சேர்ந்தவர், லட்சுமணன் (வயது 32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் என்ற சித்ராவுக்கும் (23) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 3 வயது குழந்தை ஷியாம் ரக்சன்.

லட்சுமணன் வெளிநாட்டில் இருந்து அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி, குழந்தையை பார்த்துச் சென்றார். சித்ரா பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அவருடைய மாமனார் தங்கவேல், சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்றார்.

எனவே குழந்தையுடன் சித்ரா அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் அய்யாத்துரை அடிக்கடி சாந்திநகருக்கு வந்தார். அதாவது, அங்குள்ள காண்டிராக்டர் ஒருவரை அழைத்துச் செல்ல அவர் வந்த போது அய்யாத்துரைக்கும், சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்காதலுடன் ஓட்டம்
இந்த நிலையில் கடந்த மாதம் 8–ந் தேதி சித்ரா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றார். இதுதொடர்பாக அவருடைய மாமனார் தங்கவேல் அளித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தி சித்ராவையும், குழந்தை குழந்தை ஷியாம் ரக்சனையும் தேடிவந்தார்.

விசாரணையில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் அய்யாத்துரையுடன், சித்ரா குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்ற போது அய்யாத்துரை தப்பி ஓடிவிட்டார். சித்ராவை போலீசார் மீட்டனர். அங்கு குழந்தை ஷியாம் ரக்சனை காணவில்லை.

சித்ராவை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சித்ராவின் தாயார் கலாவதியையும் போலீசார் பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

குழந்தை கொலை
குழந்தை ஷியாம் ரக்சன் எங்கே? என்று கேட்ட போது, உறவினர் வீட்டில் விட்டு இருப்பதாக முதலில் கூறிய சித்ரா, அதன்பின்பு உடல் நலம் சரியில்லாமல் குழந்தை இறந்து விட்டதாக கூறியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை ஷியாம் ரக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு தெரியவந்தது.

விசாரணையின் போது சித்ரா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள் பற்றிய விவரம் வருமாறு:–

பாளையங்கோட்டை சாந்திநகர் பகுதிக்கு வந்து சென்ற அய்யாத்துரையை நான் சந்தித்த போது முதலில் சாதாரணமாகத்தான் பழகினேன். நான் வீட்டில் குழந்தையுடன் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர் என்னை சந்திப்பதற்காக அடிக்கடி சாந்திநகருக்கு வர ஆரம்பித்தார்.

தெருக்களில் சந்தித்துக் கொண்ட நாங்கள் பின்னர் போன் எண்களை பறிமாறிக் கொண்டோம். கிடைக்கும் நேரம் எல்லாம் என்னிடம் அவர் போனில் பேசினார். என் மீது அதிக அக்கறை கொண்டவராக நடந்துகொண்டார். அவரது இந்த பேச்சு என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நான் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் என்ற நிலையை மறந்து, அவரை வீட்டுக்கு வரவழைத்தேன்.

நாங்கள் இரண்டு பேரும் தனியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தனிக் குடித்தனம் நடத்துவதற்காக நாங்கள் வெளியூர் சென்றோம். பல ஊர்களுக்கு என் குழந்தையுடன் சென்று சுற்றி விட்டு தூத்துக்குடிக்கு சென்றோம். எங்களது புதுவாழ்க்கைக்கு இடையூறாக என் குழந்தை இருப்பதாக அய்யாத்துரை நினைத்தார். அந்த குழந்தையை அவருக்கு பிடிக்கவில்லை. அவர் அடிக்கடி கோபப்பட்டு குழந்தையை அடித்து துன்புறுத்தினார்.

கண்முன்னே இறந்த குழந்தை
செல்லமாக வளர்த்த என் குழந்தையை அவர் துன்புறுத்தியது என் மனதை மிகவும் பாதித்தது. இருந்தாலும் அய்யாத்துரையா, குழந்தையா? என்று யோசித்த போது, அய்யாத்துரைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். கணவரின் வீட்டில் இருந்து வந்த என்னை இனிமேல் அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள் என்பதால், எப்படி இருந்தாலும் அய்யாத்துரையுடன்தான் இனி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு இரவில் நாங்கள் ஒன்றாக இருந்தோம். அப்போது குழந்தை அழுததால், அய்யாத்துரை குழந்தையை வேகமாக கீழே தள்ளினார். அதில் குழந்தைக்கு பலமாக அடிப்பட்டு துடித்து என் கண்முன்னே இறந்துவிட்டது. அந்த காட்சியைக் கண்டு மிகவும் அதிர்ந்து போனேன்.

குழந்தையின் உயிரை விலையாக கொடுத்தேன்
என் கள்ளக்காதலுக்கு என் குழந்தையின் உயிரை விலையாக கொடுத்துவிட்டேன் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

குழந்தையின் உடலை புதைத்து விட்டு வருவதாக அய்யாத்துரை இரவோடு, இரவாக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். குழந்தையை எங்கே புதைத்தார் என்று என்னிடம் கூறிவில்லை.

குழந்தை எங்கே? என்று யாராவது கேட்டால், “உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டது“ என்று கூறச் சென்னார். அதன்படி நானும் அக்கம் பக்கத்தினரிடம் கூறினேன். குழந்தையின் உடலை சொந்த ஊரான கோவில்பட்டிக்கு எடுத்துச் சென்று புதைத்து விட்டதாக கூறி மற்றவர்களை நம்ப வைத்தேன். எனது தாயின் மூலம் போலீசார் நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் கதறியபடி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

புதைத்த இடம் கண்டுபிடிப்பு
இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய அய்யாத்துரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். தூத்துக்குடியில், பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள மையவாடியில் குழந்தை புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. மையவாடியில் எந்த இடத்தில் குழந்தை புதைக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.