Home ஆரோக்கியம் வயிறு பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!

பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!

41

நாம் உண்ணும் உணவுகள் சத்துக்களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாத கழிவுகள் தினசரி வெளியேற்றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித்தம் அகற்றப் படவேண்டும் இல்லையெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள்.

சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்ல, எமது உடலுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அவ்வாறே உட்புறத்திலும் கழிவுகள் சிரமமாக அகற்றப்படுமாயின் 95% நாம் நோய்த்தொற்று என்ற அபாயத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட அதிவேகமாய் நோய்களும் முன்னேற்றம் அடைந்துள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.நமது உடலிலுள்ள கழிவுகள் வியர்வை, சிறுநீர், மலம் என்பனவற்றின் மூலம் அகற்றப்படுகின்றது. ஆயினும் முக்கியமான பெரும் நோய்களுக்கு காரணியாயிருப்பது பெருங்குடலில் அகற்றப்படாதிருக்கும் மலமும், அதனால் உருவாகும் டாக்ஸின் எனப்படும் நச்சுப் பொருளுமே ஆகும். டாக்ஸினால் நம் உடம்பில் உள்ள பல்வேறு பொருட்களும் படிப்படியாக பாதிப்பிற்குள்ளாகின்றன.

உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் டாக்ஸின் பாதிக்கும் போது ஏற்படும் நச்சுத்தன்மையால் நமது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இளமையிலேயே முதுமைத் தன்மை, மூட்டுப்பிடிப்புகளும் நோவும், வெளிறிய கண்கள், வெளிறிய தோல், மந்தமான செயற்பாடுகள் என நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடுகின்றோம்.

உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவது இயற்கையாகவே நடைபெற வேண்டும். நம்மை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் நம் பெருங்குடலை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உண்ணும் உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் உண்ணவேண்டும். நன்றாக மென்று அரைத்து சாப்பிடவேண்டும். நாம் உண்ணும் உணவு தேவையான சத்துகள் அடங்கியதும், நார்ப்பொருட்கள் அடங்கியதுமான உணவாக இருக்கவேண்டும்.

கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தரமான பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். மேலும் நன்மை தரும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ரசாயனங்கள், நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். எனவே கழிவுதானே என்ற அலட்சியமாக இருக்காமல் தினசரி கழிவகற்றல் மூலம் உடலை இளமையாகவும் நோயற்றும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.