Home ஜல்சா உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

40

அவள் மும்பையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கிறாள். வயது 30-ஐ கடந்துகொண்டிருக்கிறது. நிறைய படித்தவள். அழகானவள். பெற்றோரும் அவர்களை சார்ந்த குடும்பத்தினர் பலரும் கற்பித்தல் துறையில் இருப்பதால் பண்பாட்டிற்கும் பெயர்பெற்றவளாகத்தான் இருந்தாள்.

அவளுக்கு 24 வயதில் வேலை கிடைத்தது. அப்போதே பெற்றோர், வரன் தேட முன்வந்தார்கள். அவளோ, ‘உயர்பதவி அடுத்த ஆண்டு கிடைக்கும். அதன் பின்புதான் நான் மனதளவில் திருமணத்திற்கு தயாராவேன்’ என்றாள். அவள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

அடுத்து மின்னல் வேகத்தில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். படித்தவர், நல்லவேலையில் இருப்பவராக தேடினார்கள். ஒருவர் கிடைத்தார். அவர் வெளிநாட்டில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அவளுக்கு தூரத்து உறவினர்.

அந்த இளைஞர் ஒருசில வருடங்கள் மட்டுமே வெளிநாட்டில் இருப்பார். பின்பு தாய்நாடு திரும்பிவிடுவார் என்று, அவரது பெற்றோர் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் திருமண பேச்சுவார்த்தை நடந்தது. வரனும், அவளிடம் பேசி திருமண விருப்பத்தை தெரிவித்தார். அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பேச்சுவார்த்தை வேகமெடுத்துக் கொண்டிருந்த நிலையில் வரன், ‘பெண்ணை நேரடியாகப் பார்த்து பேசவேண்டும்’ என்று, திடீரென்று தாய்நாட்டிற்கு கிளம்பி வந்தார்.

வந்தவர், பெண்ணை பார்த்து பேசும்போது அந்த குண்டை தூக்கிப்போட்டார். ‘நான் வேறுமாதிரியான பாலியல் உறவில் நாட்டம் கொண்டவன். அதனால் உனக்கு தாம்பத்ய வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும்’ என்று கூறி எல்லோரையும் அதிரவைத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.

அந்த அதிர்ச்சியால் வெறுப்படைந்த அவள், அடுத்து சில ஆண்டுகள் பெற்றோர் திருமண பேச்சை எடுத்தாலே எரிந்து விழுந்தாள். அதனால் வயது ஏறிக்கொண்டே போனது.

அவளது 28 வயதில் அடுத்தொரு வரனை தேர்ந்தெடுத்தார்கள். முதலில் கிடைத்த அதிர்ச்சியால் மிகுந்த கவனம் காட்டினார்கள். கோவிலில், எளிய முறையில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அவள் ஆலோசனை சொன்னாள். அதன்படியே கோவிலில் தாலி கட்டிவிட்டு, புதுப்பெண்ணும்- புது மாப்பிள்ளையுமாக உணவருந்தும் மண்டபத்தை நோக்கிவந்தார்கள். மண்டபத்தில் சொந்தபந்தங்கள் காத்திருந்தார்கள். அங்கு முதல் வரிசையில் கண்ணீரும் கம்பலையுமாக ஒரு அழகான இளம் பெண்ணும், அவளை சுற்றி நான்கைந்து தோழிகளும் அமர்ந்திருந்தார்கள்.

மண்டபத்தின் உள்ளே சென்றதும் புதுப்பெண், அழுதுகொண்டிருந்த பெண்ணை பார்த்து குழம்பினாள். புதுப்பெண்ணின் உறவினர்கள், அந்த பெண்ணை சந்தித்து காரணம் கேட்டார்கள். அவள், ‘அந்த புதுமாப்பிள்ளை எனது நான்கு வருட காதலன். என்னை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி பல இடங்களுக்கு அழைத்துச்சென்றார். என்னைவிட இந்த புதுப்பெண் அதிகம் சம்பாதிப்பதால், என்னை மறந்து இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார்’ என்றாள்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம், புதுப்பெண்ணின் உறவினர்கள் பேசிக்கொண்டிருந்த போதே புதுமாப்பிள்ளை மண்டபத்தில் இருந்து நழுவி தப்பிஓடிவிட்டார்.

இரண்டு முறையும் தனது திருமணம் தோல்வியடைந்துவிட்டது அவளுக்கு மிகுந்த மனக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘இனிமேல் திருமண பேச்சையே எடுக்காதீர்கள்’ என்று அவள் கூறிவிட்டு, மும்பை சென்று வேலையில் மூழ்கிவிட்டாள்.

அடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பெற்றோர் அவளை சந்திக்க சென்றார்கள். பொருத்தமான வரன் ஒன்றை தேர்வு செய்துவிட்டு, அது பற்றி பேசி மகளிடம் எப்படியாவது சம்மதம் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு சென்றார்கள்.

தான் அங்கே சொந்தமாக வாங்கி யிருக்கும் வீட்டுக்கு பெற்றோரை வரவழைத்தாள். வீடு சிறியதாக இருந்தாலும் அதிக பண செலவில் உள்ளறை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்காரத்தை பெற்றோர் வியந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து வடஇந்திய இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். சினேகமாக அவர்களை பார்த்து வணங்கினான்.

பெற்றோர் அதிர்ச்சியோடு மகளிடம், அவன் யார் என்று கேட்க ‘நானும், அவரும் இரண்டு வருடங்களாக ஒன்றாக வசிக்கிறோம். நாங்கள் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்கிறோம். என் தோழிகள் சிலரும் இப்படித்தான் வாழ் கிறார்கள். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. தயவு செய்து இந்த வாழ்க்கை பற்றியோ, வேறு திரு மணத்தை பற்றியோ நீங்கள் எதுவும் பேசவேண்டாம். எனது வாழ்க்கையை நானே தீர்மானித்துக்கொள்கிறேன்’ என்றாள்.

அதற்கு மேல் அவர்களுக்கு மகளின் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. சொந்த ஊர் திரும்பி வந்து, இதை வெளியே சொன்னாலும் அசிங்கம் அல்லவா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்!

எது சரி? எது தப்பு? எதுவுமே புரியலைங்க..!