Home பெண்கள் தாய்மை நலம் ஒரு பெண்ணின் கருச்சிதைவு பதிப்புகள் தெரிந்துகொள்ளுங்கள்

ஒரு பெண்ணின் கருச்சிதைவு பதிப்புகள் தெரிந்துகொள்ளுங்கள்

221

கர்ப்பணிப் பெண்ணின் கருவிலிருக்கும் கரு கலைந்து போவதையே கருச்சிதைவு என்கிறோம். இதனை கருகலைவது என்று பொதுவாகக் கூறுகிறோம். மருத்துவத் துறையில், கருத்தரித்து 24 வாரங்களுக்குள் கரு கலைவதையே கருச்சிதைவு என்று குறிப்பிடுகின்றனர். மருத்துவர்கள் இதனை கரு தற்செயலாக கலைதல் (SAB) என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் கருத்தரித்து 12வது வாரத்திற்குள்ளே கருச்சிதைவு ஏற்படுகிறது.

பல சமயங்களில் தான் கர்ப்பமாக இருப்பது ஒரு பெண்ணுக்குத் தெரியும் முன்பே கூட கருச்சிதைவு ஏற்படுகிறது. எந்த ஒரு பெண்ணுக்குமே, கருச்சிதைவு என்பது மிகவும் பயங்கரமான, கசப்பான அனுபவமாக இருக்கும். இது அவர்களின் மனதைப் பெருமளவில் பாதிக்கக்கூடியதாக உள்ளது.

ஒரு பெண்ணுக்கு ஒரு மாதம் மாதவிடாய் வராமல், அவர் கர்ப்பத்திற்கான சிறுநீர்ப் பரிசோதனை செய்து அவர் கர்ப்பம் என்று முடிவு வருகிறது என்று வைத்துக்கொண்டால், அதில் 6இல் ஒருவருக்கு மட்டுமே கருச்சிதைவு ஏற்படுகிறது. கர்ப்பத்தின் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க, கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.

கருச்சிதைவின் வகைகள் (Types of miscarriage)

கருச்சிதைவு எந்த வாரத்தில் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதனை விரைவான கருச்சிதைவு அல்லது தாமதமான கருச்சிதைவு என்று குறிப்பிடப்படுகிறது.

இதுதவிர, கருச்சிதைவில் சிலவகைகள் உள்ளன:

கருச்சிதைவு அச்சுறுத்தல் – இந்த சூழ்நிலையில் அடிவயிற்றில் வலி இருக்கும், அதோடு பெண்ணுறுப்பில் இருந்து இரத்தம் வரும், கறைபடுதல் இருக்கலாம்
தவறிய கருச்சிதைவு – இதனை தாமதமாகிய அல்லது அமைதியான கருச்சிதைவு என்றும் கூறுவார். கருவிலேயே குழந்தை இறந்துவிடுவது அல்லது வளராமல் நின்று விடுவது இந்த வகையில் சேரும். இந்த வகை கருச்சிதைவு ஏற்பட்டிருப்பவர்களுக்கு கர்ப்பப் பரிசோதனையில் கர்ப்பம் என்று முடிவு வரலாம்.
முழுமையான கருச்சிதைவு – இந்தக் கருச்சிதைவில் கருவும் நஞ்சுக்கொடித் திசுவும் முழுவதுமாக வெளியேறிவிடும்.
கருக்குழாய் கருச்சிதைவு – கருக்குழாய் கர்ப்பம் இருக்கும்போது, அதாவது கரு கருப்பைக்கு வெளியே கரு வளரும்போது (அதாவது கருப்பையைத் தவிர்த்து வேறு பகுதிகளில், குறிப்பாக ஃபெல்லோப்பியன் குழாய்களில் கரு வளருதல்) கருச்சிதைவு ஏற்படுவதை கருக்குழாய் கருச்சிதைவு (எக்டோப்பியன்) என்கிறோம்.
முழுமையற்ற கருச்சிதைவு – இந்தக் கருச்சிதைவில் கருவின் சில பகுதிகள் வெளிவந்துவிடும். முழுமையான கருச்சிதைவின்போது ஏற்படும் இரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருக்கும், அதோடு அடிவயிற்று வலியும் இருக்கும்.
தொடர் கருச்சிதைவு – இதனை தொடர் கரு இழப்பு என்றும் குறிப்பிடுகின்றன. அடுத்தடுத்த இரண்டு அல்லது மூன்று முறை கர்ப்பத்தின் 24 வாரங்களுக்குள் கருச்சிதைவு ஏற்படுவதை தொடர் கருச்சிதைவு என்கின்றனர்.
சிதைந்த கருமுட்டை – இந்தக் கருச்சிதைவில், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் காலியான கரு உறை மட்டும் தென்படும், அதற்குள் கரு இருக்காது. கருமுட்டை வளராமல், காலியான கரு உறை மட்டும் வளர்ந்துகொண்டு வருவதால் இது நேர்கிறது.
கருச்சிதைவுக்கான காரணங்கள் (Causes of miscarriages)

பெரும்பாலும் கருவில் வளரும் குழந்தைக்கு உள்ள ஏதேனும் குறைபாடுகளே கருச்சிதைவுக்குக் காரணமாக இருக்கும். சில சமயம், கருச்சிதைவுக்கான சரியான காரணம் தெரிவதில்லை. பொதுவாக கருச்சிதைவுக்கான காரணமாக மருத்துவர்கள் அடையாளம் காண்பவை:

தாய்க்கு, முன்பே நீரிழிவுநோய் அல்லது தைராய்டு பிரச்சனை போன்றவை இருந்திருப்பது
தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்
கருப்பைவாய்ப் பகுதி, கருவைத் தாங்கிப்பிடிக்க போதுமான அளவு வலிமையில்லாமல் இருப்பது.
தாய்க்கு ஏற்படுகின்ற அல்லது கருவில் ஏற்படுகின்ற நோய்த்தொற்று குழந்தையைப் பாதிப்பது
கருக்குழியில் வழக்கத்திற்கு மாறான குறைபாடுகள்
மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சிகரமான விபத்து
கரு, கருப்பைக்குள் வெற்றிகரமாக பதியாமல் போவது
புகைபிடிப்பது, போதைப்பொருள் பழக்கம் மற்றும் மதுப் பழக்கம் போன்றவையும் கருச்சிதைவுக்குக் காரணமாக இருக்கலாம்
மிசோப்ரோஸ்டால், ரெட்டிநாய்ட்ஸ், மெத்தோட்ரெக்சேட், NSAIDகள் போன்ற சில மருந்துகள் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளவர்கள் யார்:

வயது: 35 வயதுக்கும் அதிகமுள்ள பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
உடல் பருமன்: அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு குறைவான உடல் எடை கொண்டவர்களை விட கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
முன்னதாக கருச்சிதைவு ஏற்பட்டவர்கள்: இதற்கு முன்பே கருச்சிதைவு ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்பத்தின்போது உடலுறவு கொள்வதும் மிதமாக உடற்பயிற்சி செய்வதும் கருச்சிதைவுக்கு வழிவகுக்காது.

கருச்சிதைவை அடையாளம் காணுதல் (Identifying miscarriage)

கருச்சிதைவு ஏற்படும் முன்பு சில அறிகுறிகள் தென்படும், அவை கர்ப்பம் இயல்பான நிலையில் இல்லை என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஆகும்.

பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு; சிலசமயம் மிக அதிகமாகவும் இருக்கலாம்
கர்ப்பத்தின் வழக்கமான அறிகுறிகள் குறைவது
தசைப்பிடிப்பு வலிகளுடன் கூடிய கடுமையான முதுகுவலி
பெண்ணுறுப்பின் வழியாக, இரத்தக் கட்டிகள் வெளியேறுவது
காய்ச்சல் மற்றும் பலவீனம்
மயக்கம் மற்றும் சூழல் உணர்விழப்பு
கருச்சிதைவின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும். பிரச்சனையைக் கண்டறிந்து தீர்வைப் பரிந்துரைக்க மருத்துவர் உதவி அவசியம்.

மருத்துவமனையில் (At the hospital)

கருவில் உள்ள குழந்தையின் நிலையை ஆய்வு செய்ய மருத்துவர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வார். கர்ப்பமாகி மிகக் குறைவான நாட்களே ஆகியிருந்தால், பெண்ணுறுப்பில் ஸ்கேன் செய்யபப்டும்.

சிலசமயம், மேலும் சில பரிசோதனைகளும் அல்ட்ராசவுண்ட் சோதனைகளும் செய்யும்படி மருத்துவர் கூறலாம். கர்ப்பமாகி மிகக் குறைந்த நாட்களே ஆகியிருக்கும்பட்சத்தில் மீண்டும் இந்த சோதனைகளை செய்யும்படி மருத்துவர் கூறலாம்.

கருச்சிதைவானது உறுதிப்படுத்தப்படும் போது

கர்ப்பம் தொடங்கி மிகக் குறைந்த நாட்களிலேயே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கருப்பையில் இருப்பவற்றை உடலே தானாக வெளியேற்றிவிடும். கர்ப்பமாகி நீண்ட நாட்கள் கழித்து கருச்சிதைவு ஏற்பட்டால், கருவின் எஞ்சிய பாகங்களை மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டியிருக்கலாம்.

இப்படி அறுவை சிகிச்சை மூலம் கருப்பையில் இருப்பவற்றை அகற்றும் முறையை டைலேஷன் அண்ட் கியூரட்டேஜ் (D&C) என்று அழைக்கப்படுகிறது. இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த மருந்துகள் கொடுக்கப்படும், இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறையும். வலி குறையவும் இந்த மருந்துகள் உதவும்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை (You need to know)

கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு பின்வரும் பிரச்சனைகள் இருக்கலாம்

தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்படலாம், சிலசமயம் ஒரு வாரம் வரை இருக்கலாம்.
அடிவயிற்றில் வலி இருக்கும்
கர்ப்பமாகி பல நாட்களுக்குப் பிறகு கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பகங்களில் பால் சுரக்கலாம்
கருச்சிதைவுக்குப் பிறகு? (What after a miscarriage?)

எந்த ஒரு பெண்ணுக்கும், கருச்சிதைவு மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாக இருக்கலாம். அந்த இழப்பு மிகவும் வேதனை அளிக்கக்கூடியது. இந்த நிலையில் ஒரு பெண்ணின் கணவர் மனைவிக்கு மிகவும் ஆதரவாகவும் துணையாகவும் இருந்து ஆறுதலளிக்க வேண்டும். இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. அவருக்கு அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்து மீள அவகாசம் கொடுக்க வேண்டும். வேறெதையும் விட, கணவர் அவரிடம் அன்பாக நடந்துகொள்வதே அவருக்கு மிகுந்த ஆறுதலைத் தரும், அவர் அதிலிருந்து மீள உதவும்.

எதிர்காலத்தில் கருச்சிதைவை எப்படித் தடுக்கலாம்? (How to prevent future miscarriages?)

மீண்டும் கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால், ஆரோக்கியமான பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும், எடை குறைக்க வேண்டும், இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். புகைபிடித்தல் போன்ற கெடுதலான பழக்கங்களைக் கைவிட வேண்டும். மன அழுத்தத்தை அதிகரிக்க விடக்கூடாது. அது கர்ப்பத்தை பாதிக்கலாம். கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் பிறகு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.