Home சூடான செய்திகள் திருமணம் ஆக தயாராக இருப்பவர்களுக்கு இந்த தகவல்

திருமணம் ஆக தயாராக இருப்பவர்களுக்கு இந்த தகவல்

147

சூடான செய்திகள்:திருமணம் பற்றிய நிஜம் ஒன்றை சமூகத்திடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். மனோதத்துவ ஆலோசனைக்கு வரும் திருமணமான பெண்களில் 80 சதவீதம் பேர் கணவர் மீது குறை சொல்கிறார்கள். அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘கணவரோடு மனப்பூர்வமாக சேர்ந்து வாழப் பிடிக்கவில்லை’ என்று புலம்புகிறார்கள். 10 முதல் 15 சதவீதம் பேர், விட்டால் இப்போதே ஓடிவிடுவோம் என்பதுபோல் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறார்கள். 20 சதவீதம் பேர் ‘எல்லாம் முடிந்துவிட்டது.. மீதி காலத்தையும் இவரோடு இப்படியே ஓட்டிவிடுவதை தவிர வேறுவழியில்லை’ என்று விரக்தியோடு சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

இதுபோன்ற விரக்தி எதிர்கால தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படாமல் இருக்க, ‘திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் எப்படிப்பட்ட இணையை தேர்ந்தெடுக்கவேண்டும்? தனது இணையை பற்றி தெரிந்துகொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இறுதி முடிவை எப்படி எடுக்கவேண்டும்?’ என்பதை பற்றி எல்லாம் இங்கு காண்போம்!

திருமணத்திற்கு தயாராக இருப்பவர்கள் இப்போதே நன்றாக ஆலோசித்து சரியான இணையை தேர்ந்தெடுத்தால் அவர்களது எதிர்கால மணவாழ்க்கை சிறப்பாக அமையும். விவாகரத்துக்களும் குறையும். அதை கருத்தில்கொண்டு திருமண விஷயத்தில் பொதுவாக நடக்கும் தவறுகளையும், அதை சரியாக்கும் முறைகளையும் பார்ப்போம்!

தவறான சிந்தனை:

‘தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் இணையை தன்னால் முழுமனதோடு தற்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், திரு மணத்திற்கு பிறகு அவரை திருத்திவிடலாம் என்று நினைக்கிறேன்’ என்ற திருமண சிந்தனை தவறானது.

சரியான வழிமுறை:

இணையின் பேச்சு, செயல், நடத்தை போன்ற குணாதிசய குறைபாடுகள் இருந்தால், திருமணத்திற்கு பின்பு அவரை இயல்பான நடத்தைக்கு கொண்டு வருவது சிரமம். அதனால் அப்படிப்பட்டவரை திருமணம் செய்துகொள்ள முன்வராதீர்கள். திருமண பந்தம் ஆயுள் முழுக்க நீடிக்கவேண்டியது. அதனால் அதில் அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். பெற்றோர்களில் சிலர், மகளை ஒரு சுமைபோல் கருதிக்கொண்டு ‘அவளுக்கு திருமணமானால்தான் நிம்மதி பெருமூச்சுவிடுவேன்’ என்பதுபோல் தீவிரம் காட்டுகிறார்கள். அத்தைகய தீவிரம் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை உணருங்கள். அதிவேக(பயண)ம் ஆபத்து என்பது சாலை விதிக்கு மட்டுமல்ல மணவாழ்க்கை விதிக்கும் பொருத்தமானது. உங்களுக்கு பிடிக்காதவரை பெற்றோர் தேர்ந்தெடுத்தால் தைரியமாக ‘நோ’ சொல்லுங்கள்.

உங்கள் விருப்பப்படி இணை தேடும் முயற்சி நடந்துகொண்டிருப்பதை ஒவ்வொரு கட்டத்திலும் கண் காணியுங்கள். தேர்ந்தெடுக்கப்படுகிறவர் உங்களுக்கு பிடித்தமானவராக தெரிகிறார் என்றால், திருமண முடிவினை எடுப்பதற்கு முன்னால் அவரோடு பேசிப்பாருங்கள். காதல் திருமணத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் ஜாதி, மதம், பொருளாதார சூழல் போன்ற பல விஷயங்கள் இன்று அல்லது நாளை பிரச்சினைக்குரிய விஷயங்களாக மாறும். உங்கள் இருவரிடமும் வற்றாத அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் இருந்தால்தான் அதில் இருந்து உங்களால் மீளமுடியும். எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் கடைசி வரை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்ற நெஞ்சுரம் இருந்தால் மட்டும் காதலை, கல்யாணமாக்குங்கள். ‘தெரியாமல் காதலில் சிக்கிக்கொண்டோமே!’ என்ற எண்ணம் இருந்தால், ஒருபோதும் திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள்.

தவறான சிந்தனை:

‘எனக்கு தலைக்குமேல் வேலை இருந்துகொண்டிருந்தது. நான் மனதளவிலும், உடலளவிலும் திருமணத்திற்கு தயாராகவில்லை. ஆனாலும் என் பெற்றோர் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களது விருப்பத்திற்கு அவர்களே தேர்ந்தெடுத்து தந்த துணை இது. அதுதான் இந்த பிரச்சினைக்கு காரணம்’ என்று, ஆணோ, பெண்ணோ சொல்லும் சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகுவது தவறானதாகும்.

சரியான வழிமுறை:

இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் எத்தனையோ வேலைகள் இருக்கலாம். அதுபோல் திருமணத்தையும் ஒரு வேலையாக எடுத்துக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடாதீர்கள். திருமணத்திற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள். அதற்காக மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகுங்கள். திருமணத்தை பற்றிய தவறான கருத்துக்களோ, தாம்பத்ய தொடர்பு பற்றி தவறான எண்ணங்களோ, பெண் என்றாலே மோசமானவள் (அல்லது ஆண் என்றாலே மோசமானவர்) என்ற முரண்பாடான எண்ணத்தில் ஊறிப்போயிருந்தாலோ அவசரப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்காதீர்கள். தெளிவடைந்து, உங்கள் எண்ணங்களை சரிசெய்த பின்னர் திருமணம் செய்துகொண்டால்போதும். அதுபோல் உடல் கோளாறுகள் ஏதேனும் இருப்பதாக அறிந்தால், அதற்குரிய மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, திருப்தியடைந்த பின்பு திருமணம் செய்து கொள்ள முன்வாருங்கள்.

திருமணத்தில் ஒரு ஆணும்- பெண்ணும் மட்டும் இணைவதில்லை. இருவேறு சூழ்நிலைகளில் இருந்து இரண்டு குடும்பங்கள் அந்த உறவின் மூலம் இணைகின்றன. கணவரை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள பெண் தயாராகவேண்டும். அதுபோல் மனைவியை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொள்ள கணவரும் தயாராகவேண்டும். ஆண் தனது அம்மாவுக்கும், சகோதரிக்கும் எவ்வளவு உரிமைகளை கொடுப்பாரோ அதுபோன்ற உரிமைகளை மனைவிக்கு வழங்க முன்வரவேண்டும். திருமண வாழ்க்கை தோல்வியடைந்தால் அந்த பழியை பெற்றோர் தலையில் சுமத்தலாம் என்ற எண்ணத்தில், பொறுப்பில்லாமல் திருமண முடிவு எதையும் எடுத்துவிடாதீர்கள்.

தவறான சிந்தனை:

பெரும்பாலான ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை பார்க்கும் இடத்திலோ, வெளியிலோ பல்வேறுவிதமான நட்புகள் இருக்கும். அவைகளை அப்படியே திருமணத்திற்கு பின்பும் தொடரலாம் என்று நினைப்பது தவறு.

சரியான வழிமுறை:

நீங்கள் திருமணம் செய்துகொள்ள தயாராகும்போதே, ‘எதிர் காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்’ என்று நினைக்கும் உறவுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுங்கள். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் தொழில்ரீதியான தொடர்பினை மட்டும் வைத் திருங்கள். அதற்கு அப்பால் எந்த உறவையும் கொண்டு செல்ல முயற்சிக்காதீர்கள். கணவரிடம் இருந்து மனைவிக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ, மனைவியிடம் இருந்து கணவருக்கு அன்பு கிடைக்காவிட்டாலோ அதை அலுவலகத்தில் உள்ள மூன்றாம் நபரிடம் இருந்து பெறும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. அந்த அன்பை வீட்டிலே பெறும் வழியை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். உடன் பணிபுரிபவர்களிடமிருந்து உதவிகள் பெறலாம். ஆனால் அது எல்லையற்றதாக இருந்தால், பிற்காலத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு எல்லையை வகுத்திடுங்கள். அலுவலக பிரச்சினைகளை அங்கேயே பேசி முடித் திடுங்கள். வீடு வரை கொண்டு செல்லவேண்டாம். வீட்டில் இருந்துகொண்டு அலுவலக நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் திரு மணத்திற்கு தயாராகும்போதே அதற்கும் முற்றுப்புள்ளிவைத்திடுங்கள். திருமணமான சில மாதங்களிலே பல தம்பதிகள் விவாகரத்தை நோக்கிச்செல்ல இந்தவித அரட்டை காரணமாக இருந்துகொண்டிருக்கிறது.

ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பு வாழும் வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு பின்பு வாழவேண்டிய வாழ்க்கை வேறு. திருமணத்திற்கு முன்பு பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் எவ்வளவு நேரமானாலும் மூழ்கி கிடக்கலாம். திருமணத்திற்கு பின்பும் அதே நிலை தொடர்ந்தால், அது மணவாழ்க்கையை மங்கவைத்துவிடும். அதனால் இப்போதே அதை குறைத்துக்கொள்ள முன்வாருங்கள். உங்கள் இணையை மனதாலும், உடலாலும், உணர்வுகளாலும், அறிவாலும் மகிழ்ச்சிப்படுத்தவேண்டிய கடமை திருமண பந்தத்தில் இணையும் அனைவருக்கும் தேவைப்படுகிறது. அவை இருதரப்பில் இருந்தும் குறைவின்றி கிடைத்தால் மட்டுமே மணவாழ்க்கையை காப்பாற்றி, மகிழ்ச்சியாக வாழமுடியும். இதை மனதில் வைத்துக்கொண்டு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வையுங்கள்.