Home பெண்கள் தாய்மை நலம் தாய்மார்கள் பிரசவ வலி பற்றி கண்டிப்பாக அறியவேண்டியது

தாய்மார்கள் பிரசவ வலி பற்றி கண்டிப்பாக அறியவேண்டியது

105

தாய் நலம் :கர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி காட்டும். ‘பிரசவ வலிக்கும், பொய் வலிக்குமான வித்தியாசத்தைச் சில குறிப்புகளால் அறியலாம்’. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நிஜ வலி: முதுகுப்புறத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றின் முன்பக்கம்வரை வந்து அடிவயிற்றில் இறங்கி வலிக்க ஆரம்பிக்கும்.

பொய் வலி: வயிற்றின் முன்பக்கம் மட்டுமே வலி வரும்.

வலி நேர இடைவேளை!

நிஜ வலி: குறிப்பிட்ட நேர இடைவேளையில் வலிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். பின்னர் அந்த நேர இடைவேளை குறைந்து, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வலிக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, பிறகு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை என நேர இடைவேளை சுருங்கும். இப்படிச் சுருங்கச் சுருங்க, வலியின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். இப்படியாக நேரம் குறைந்தும், வலியின் அளவு அதிகரித்துக்கொண்டும் வந்து, 10, 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிற வலிகள், தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும்.

பொய் வலி: பொய் வலி சீரான இடைவேளையின்றி, தன் போக்குக்கு வந்துபோகும்.

டிஸ்சார்ஜ்!

நிஜ வலி: பெண்ணுறுப்பில் சளிபோன்ற திரவம் கசியும். இதனுடன் இரண்டு, மூன்று ரத்தத்துளிகளும் வெளியேறும்.

பொய் வலி: டிஸ்சார்ஜ் எதுவும் இருக்காது.

வயிற்றின் அசைவு!

நிஜ வலி: வயிற்றின் மேல் கைவைத்துப் பார்த்தால், கருப்பை இறுக்கமாகி இறுக்கமாகித் தளர்வதை உணரமுடியும். இந்த இயக்கமும்கூட சீரான நேர இடைவேளையில் நடைபெறும். எழுந்து நடந்து பார்த்தாலும் வலியில் மாற்றமில்லாமல் இருக்கும்.

பொய் வலி: பொய் வலியில் கருப்பையின் இயக்கம் இருக்காது என்பதால், வயிற்றில் கைவைத்துப் பார்த்தால் எந்த அசைவும் இருக்காது. வலி வரும் சமயம் எழுந்து நடந்துபார்த்தால் வலி மறைந்துவிடும். ஒருவேளை உண்மையான பிரசவ வலி ஏற்பட்டிருந்தால், அதை எதிர்கொள்ளத் தயாராகச் செய்ய வேண்டியவை இவை…

* காற்றை மூக்கு வழியாக முடிந்தளவு உள்ளிழுத்து, பிறகு வாயைக் குவித்து வாய்வழியாக வெளியேற்றவும். இது பிரசவ வலியின் வேதனையில் இருந்து கவனத்தைத் திசைத்திருப்பும்.

* நடக்கலாம் அல்லது பிடித்தப் படத்தைப் பார்க்கலாம். இவையும் வலியின் வேதனையிலிருந்து மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும்.

* மிதமான வெந்நீரில் குளித்தால் வலிக்கு இதமாக இருக்கும்.

* வலி ஆரம்பித்ததும், அடுத்த வலி வரும் இடைவேளைக்குள் ஓய்வெடுக்கலாம், குட்டித் தூக்கம் போட்டுக்கொள்ளலாம். எதிர்கொள்ளவிருக்கிற பெரிய வலியைச் சமாளிக்க இந்த ஓய்வு உடலுக்குத் தேவை.

* 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வலி வருகிறபோது தாமதிக்காமல் பாதுகாப்பான பயணத்தில் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.’’

உண்மையான பிரசவ வலி வரும்போது, வயிறு கல் போல இறுக்கமாகும். அந்த வலி வராத நேரத்தில், வயிறு கல் போல இல்லாமல் நார்மலாக இருக்கும். ஆனால், பொய் பிரசவ வலி வரும்போது, இறுக்கமாகிற வயிறானது, அரைமணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ அப்படியே இருந்தால், கருப்பையின் உள்ளே குழந்தையுடன் இணைந்திருக்கிற நஞ்சுக்கொடி பிரிந்துவிட்டது என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் கருப்பைக்குள்ளேயே ரத்தப் போக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கும். அது வெளியில் தெரியாது. குழந்தையின் அசைவுகளும் தெரியாது. இந்தச் சமயத்தில் உடனடியாக மருத்துவமனைக்குக் கிளம்பி விடுங்கள். இல்லையென்றால், வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட வாய்ப்பிருக்கிறது, கவனம்.

சில பெண்களுக்கு 7 அல்லது 8-ம் மாதங்களிலேயே நிஜப் பிரசவ வலி வந்து விடும். இந்த வலியை, ‘இன்னும்தான் நாளிருக்கே’ என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அலட்சியப்படுத்தினால், வயிறு இறங்கி, பனிக்குடம் உடைவது, குழந்தைக்கு மூச்சுத்திணறுவது எனப் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.