Home சூடான செய்திகள் உடலால் மட்டுமல்ல உணர்வுகளாலும் இணையுங்கள்!

உடலால் மட்டுமல்ல உணர்வுகளாலும் இணையுங்கள்!

20

cuddle-300x186‘நீ வந்த பின்னாடிதான் என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சது…´ ‘என் உயிரே நீதான்…´ இது புதிதாய் திருமணம் ஆன தம்பதியர் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள்.

இதுவே சில வருடங்கள் கழித்து என்றால் சின்னச் சின்ன ஊடல்களில் தொடங்கி ‘எந்த நேரத்தில என் வாழ்க்கையில நீ வந்தியோ அப்ப இருந்தே எனக்கு நேரம் சரியில்லை´… என்ற வார்த்தையில் வந்து முடியும்.

தம்பதியர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகள்,சச்சரவுகள் ஏற்படுவது வாடிக்கைதான். அதுவே பெரிய பூசலாக மாறி விரிசலை அதிகரித்துவிடக்கூடாது. என்றைக்கு மகிழ்ச்சியாக இருக்க சில விட்டுக்கொடுத்தல்கள் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உண்மையா இருங்களேன்…

புதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தேனிலவு அனுப்புகின்றனர். இது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமல்ல தம்பதியரிடையேயான எண்ணங்களையும், தேவைகளையும் பகிர்ந்து கொள்ளவும்தான். ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொண்டாலே வாழ்க்கைப் பயணத்தின் வெற்றி அங்கேயே தொடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

இப்ப எப்படி இருக்கீங்க?

தம்பதியர் இருவருமே திருமணத்திற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி துருவி துருவி விசாரணை செய்ய வேண்டாம். அது தேவையற்ற சங்கடத்தை ஏற்படுத்தும். திருமணத்திற்கு பின் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோமா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

உடனே அப்டேட் செய்யணும்..

கணவனோ, மனைவியோ உங்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் விசயங்களை அவ்வப்போது உங்களின் துணையிடம் அப்டேட் செய்யுங்கள். அப்பொழுதுதான் சந்தேகம் என்ற விதை முளைக்காது. தாம்பத்யத்திலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதை விடுத்து என்னோட பெர்சனலை ஏன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தால் சந்தோசத்திற்கு சங்கு ஊத வேண்டியதுதான்.

புரிதலும், விட்டுக்கொடுத்தலும்

தம்பதியரிடையே புரிதலும், விட்டுகொடுத்தலும் அவசியம். என் மனைவி இப்படித்தான் என்று கணவனும், என் கணவன் இப்படித்தான் என்று மனைவியும் புரிந்து கொண்டாலே பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் அப்புறம் சண்டைக்கு வழியே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

எப்பவும் புதுசா இருங்க

நமக்கு திருமணமாகி ரொம்ப நாள் ஆயிருச்சே இனி என்ன என்று நினைக்கவேண்டாம். திருமணமான பொழுது எப்படி புதிதாக உணர்ந்தீர்களோ அதேபோல எப்பொழுதும் புதிதாக உணருங்கள். அந்த நினைவே உங்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். எங்காவது வெளியூர், வெளியிடங்களுக்கு சென்றால் சந்தோசமாக ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு செல்லுங்கள். அது உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

எங்கேயும் எப்போதும் மதிக்கணும்

நம்ம கணவர்தானே என்று மனைவியும், நம்ம மனைவிதானே என்று கணவரும் ஒருவருக்கொருவர் அந்நியோன்னியமாய் இருந்தாலும் பொது இடத்திலோ, உறவின் முன்னிலையிலோ ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

எதிர்பார்ப்பு அதிகம் வேண்டாமே

ஒருவர் மீது ஒருவர் கூடுதலான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு அது நிறைவேறாவிட்டால் அப்புறம் சிக்கல்தான். எனவே குறைவான எதிர்பார்ப்புதான் அதிகமான நன்மைகளை ஏற்படுத்தும். எனவே ஒருவரின் வேலையை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேர்மறையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உணர்வால் இணையுங்கள்

தாம்பத்யதில் இதுதான் முக்கியமானது. தம்பதியரிடையே உடல்களின் சங்கமம் மட்டும் முக்கியமில்லை அது உணர்வுப்பூர்வமானதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் உடலில் ஆரோக்கியமான ரசாயனங்கள் சுரக்கும். அது தம்பதியரிடையேயான உறவையும் நீடிக்கச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள்.