Home சூடான செய்திகள் படுக்கையறையில் பேசக் கூடாத வார்த்தைகள்

படுக்கையறையில் பேசக் கூடாத வார்த்தைகள்

22

images (2)படுக்கையறைதான், கணவன், மனைவி இருவரும் ரிலாக்ஸ் செய்து கொள்ளும் இடம். அன்றைய நாள் முழுவதுக்குமான டென்ஷன், வேலைக்கு போனாலும் சரி, வேலைக்குப் போகாவிட்டாலும் சரி, கணவன் & மனைவி இருவருக்குமே இந்த டென்ஷன் உண்டு. டென்ஷனைப் போக்கி, ரிலாக்ஸ் செய்ய சரியான இடம் படுக்கையறைதான். இது உடல் உறவு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல.. மன உறவு சம்பந்தப்பட்ட விஷயமும்தான். கணவன் & மனைவி இருவரும் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசிக் கொள்ளலாம். இதன் மூலம், மனது லேசாகும். மனது லேசானால் உறவு பலமாகும்.

படுக்கையறையில் பல வார்த்தைகளை கணவன் & மனைவி பகிர்ந்து கொள்ளலாம். படுக்கையறை யுத்தம், முத்தத்தில் தொடங்கி முத்தத்தில்தான் முடிய வேண்டும், அப்போதுதான் கணவன் & மனைவி இருவருக்குமே வெற்றி கிடைக்கும். கணவன் & மனைவி இருவருமே படுக்கையறையில் பேசக் கூடாத வார்த்தை ‘தள்ளிப்படு.’ இந்த வார்த்தை உடல் உறவில் மட்டுமல்ல.. மன உறவிலும் விரிசலை ஏற்படுத்தி விடும். ‘இப்ப வேணாம் ப்ளீஸ்’, ‘டயர்டா இருக்கு’ என்று நாசூக்காக வேறு மாதிரி மறுதலிக்கலாம்.

வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு பல பிரச்னைகள். அதிக உழைப்பு, மேலதிகாரிகளின் ஏச்சு, பணப் பிரச்னைகள் என்று ஏகத்துக்கும் டென்ஷன். ஆனால், உடலுறவு என்று வரும்போது, இந்த டென்ஷன்களை தூக்கி மூட்டை கட்டிவிட்டு ஆண், உடனே தயாராகி விடுகிறான். அன்றாட வாழ்வின் மன உளைச்சலுக்கு மருந்தாக தாம்பத்யத்தை ஆண் கருதுகிறான். ஆனால், பெண்கள் அப்படியல்ல.. பாலுறவை தவிர்க்க விரும்புகின்றனர். ‘தள்ளிப்படுங்க.. தொல்லை பண்ணாதிங்க’ என்று எரிச்சல் படுகின்றனர். அப்படியே சம்மதித்தாலும் மரக்கட்டைப் போல் கிடக்கின்றனர்.படுக்கையறை என்பது யாரோ ஒருவரின் தினவு மட்டும் தீர்வதற்கானதல்ல. கணவன் & மனைவி இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்க வேண்டிய இடம். அதுதான் சரியும் கூட. ஒருவர் மட்டும் இயங்கி, மற்றொருவர் தயங்கினால் அங்கு எரிச்சல்தான் ஏற்படும். உறவில் விரிசல்தான் ஏற்படும்.

பெண்கள் பாலுறவை தவிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெண்கள் உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள், பயன்படுத்தும் கருத்தடை சாதனங்கள் அவர்களின் பாலுறவு விருப்பத்தை குறைத்து விடலாம். வேறு சில பிரச்னைகளுக்காக அவர்கள் மேற்கொள்ளும் மருத்துவமும், உட்கொள்ளும் மருந்துகளும் பாலுறவு ஈடுபாட்டை கட்டுப்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் புரோலாக்டின் எனப்படும் ஹார்மோன் சுரப்பதால் பல பெண்களுக்கு பாலுறவு விருப்பம் முழுவதுமாக குறைந்து விடுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள் பாலுறவில் ஈடுபடும்போது தூங்கி விடுகின்றனர். அன்றாட வாழ்க்கை சிக்கல்கள் அவர்களின் பாலுறவு விருப்பத்தை மழுங்கடித்து விடுகிறது.

பாலுறவுக்கு தேவையான அளவு ஹார்மோன்கள் சுரக்க வேண்டும். அதில் பற்றாக்குறை ஏற்பட்டால் பாலுறவில் விருப்பமின்றி போய்விடுகிறது. சில பெண்களுக்கு தங்கள் உடலைப் பற்றிய, உடல் உறுப்புகளைப் பற்றிய தேவையற்ற அச்சம் இருக்கும். உடலுறவின்போது, அந்த விஷயம் வெளிப்பட்டு விடுமோ என்ற எண்ணமும் பாலுறவு விருப்பமின்மையாக மாறிவிடுகிறது என இப்படி பல காரணங்கள் பெண்களின் பாலுறவு விருப்பமின்மைக்கு சொல்லப்படுகின்றன. கணவன் & மனைவி இருவருமே மனமொத்து உடல் உறவில் ஈடுபடுவதுதான் இன்பத்துக்கு வழி வகுக்கும். யாராவது ஒருத்தருக்கு விருப்பமில்லாவிட்டால், பலவந்த பிரயோகம், துன்பத்துக்குத்தான் வழி வகுக்கும். அது சரியும் அல்ல, முறையும் அல்ல.. சரி.. இந்தப் பிரச்னைக்கு தீர்வு இருக்கிறதா? இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது.

துணையைப் புரிந்து கொள்ளுங்கள்
தாம்பத்ய உறவில் முழுமையான இன்பம் கிடைக்க உடல் சுத்தமும், ஆரோக்கியமும் முக்கியம். அதை விட முக்கியம் மனம் ரிலாக்சாக இருப்பது. பாலியல் விருப்பமின்மைக்கு மருத்துவ காரணங்கள் இருந்தால், அதை டாக்டர்களிடம் போய் சரி செய்து கொள்ளலாம். ஆனால், மனது ரீதியான பிரச்னை இருந்தால் அதை தம்பதிகள்தான் மனம் விட்டுப் பேசி சரிசெய்து கொள்ள வேண்டும்.

பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பது உண்மைதான். அந்த உணர்ச்சி வசப்படுதல் டி.வி.யில் சீரியல் பார்க்கும்போதோ, சென்டிமென்ட் சினிமா பார்க்கும்போதோதான் உடனே வரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தை பார்க்கும்போது கூட சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வரலாம். ஆனால், தாம்பத்ய உறவை பொறுத்தவரை உடல் ரீதியாக தொட்டாலே அவள் உணர்ச்சிவசப்படுவதில்லை. அதற்கு முன்பாக மன ரீதியாக அவளைத் தொட வேண்டும். அதற்கு பின்தான் முன்விளையாட்டுகளை தொடங்க வேண்டும். மன ரீதியாக மனைவியை தொடுவதற்கு நிறைய ஆண்கள் முயற்சிப்பதில்லை. மனைவி என்பவள் தன்னுடைய தனிச்சொத்துதானே, தான் விரும்பிய உடனே அடிபணிவது அவளது கடமையல்லவா என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் என்பவள் ஆணைப் போலவே ரத்தமும் சதையும் கொண்டவள். சக மனுஷி. ஆண்கள் எப்படி மற்றவர்களிடம் மரியாதையையும், மதிப்பையும் எதிர்பார்க்கிறார்களோ, அதே மரியாதையை, மதிப்பை மனைவியிடம் செலுத்த வேண்டும். உடல் ரீதியாக தொடுவதற்கு முன்பு மன ரீதியாக மனைவியை எந்தக் கணவன் தொடுகிறானோ, அவன்தான் தாம்பத்ய வாழ்க்கையில் முழு வெற்றி அடைகிறான். முழுமையான இன்பம் அனுபவிக்கிறான்.

தன் கணவன் ஹீரோவைப் போல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் விரும்புவது இயற்கை. இருபது, முப்பது பேரை சினிமாவில் அடித்து நொறுக்குவதைப் போல அவன் இருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. கவிதை எழுதத் தெரிந்தவன்தான் காதலிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருந்தால், கவிஞர்களுக்கு மட்டும்தான் திருமணம் நடந்திருக்கும். அதே போல், ஹீரோக்கள் தான், தனக்கு கணவனாக வேண்டும் என்று நினைத்தால் நிறைய பெண்களுக்கு திருமணமே ஆகாது. உண்மை நிலை என்னவென்றால், சினிமாக்களில் ஹீரோ, தனது மனைவியிடம் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்தி, அனைத்து விஷயங்களையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளும் தன்மையைத்தான்.. குணத்தைதான் கணவனிடம் மனைவி எதிர்பார்க்கிறாள். இந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாதபோது அவள் ஏமாற்றமடைகிறாள். ‘அந்த நேரத்தில்’ எதிர்ப்பை காட்டுகிறாள். இதைப் புரிந்து கொள்ளாத கணவன், எரிச்சல் அடைகிறான். புலம்பித் தவிக்கிறான்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும், தான் உழைக்கும்போது, தன் சிரமங்களை பகிர்ந்து கொள்ள மனைவி நினைக்கிறாள். சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்றும், அரவணைத்து தலையை கோதி விட கணவன் கைகள் வேண்டும் என்றும் அவள் ஆசைப்படுகிறாள். இதை கணவன் புரிந்து கொள்ளாதபோது அவள் எரிச்சல் அடைகிறாள். அந்த எரிச்சல் படுக்கையறையில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விடுகிறது. கணவன் நொந்து போகிறான்.

கணவன் தன்னை உண்மையாக நேசித்தால், தனக்கு பிடித்தமானது, மகிழ்ச்சி அளிக்கக் கூடியது போன்ற எல்லா விவரங்களும் அவன் தெரிந்து வைத்திருப்பான் என்று மனைவி நம்புகிறாள். இது தெரியாமல், கடமையே என்று கணவன், அவளைத் தொடும் போது, தான் என்ன பாலுறவு சாதனமா என்று வேதனைப்படுகிறாள். இந்த வேதனையை படுக்கையறையில் எரிச்சலாக வெளிப்படுத்துகிறாள்.

கணவன் & மனைவி இடையே தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்கும் ஒரே வழி, இருவரும் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவதுதான். பணம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதையே பிரதானமாக நினைத்து ஓடிக் கொண்டிருந்தால் இளமை கழிந்து விடும். இன்பத்தை இழந்து விடுவீர்கள். தான் நேசிப்பதைப் போலவே கணவன் தன்னை நேசிக்க வேண்டும் என்று எண்ணும் மனைவிக்கு உங்கள் மனதை கொடுங்கள். இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும். அதுதான் இல்லற இன்பம் நீடித்திருக்க ஒரே வழி.