Home குழந்தை நலம் பச்சிளங்குழந்தையை பராமரிக்கும் முறைகள்

பச்சிளங்குழந்தையை பராமரிக்கும் முறைகள்

26

Captureபச்சிளங் குழந்தை என்பது பிறந்து 28 நாட்களுக்கு குறைவான குழந்தைகளைக் குறிக்கும். மருத்துவத் துறையில் ‘நியோநேட்டாலாஜி‘ என்று அழைக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளை பராமரிப்பதற்காகவே மருத்துவத் துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலங்களில் இந்தப் பிரிவு மிகவும் பிரபலமாகி வருகிறது.

பிறந்த ½ மணி நேரத்திற்குள் தாயிடம் முதலில் சுரக்கும் சீம்பால் கொடுக்க வேண்டும். குழந்தையை தாயுடன் சேர்த்தே பராமரிக்க வேண்டும். தாயையும், குழந்தையையும் தனித்தனியாக பிரிக்கக்கூடாது. கண்டிப்பாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்து வலிப்பு ஏற்பட வழிவகுக்கும். குழந்தையை சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும். குழந்தைக்கு குளிர் வருவதை தடுக்க வேண்டும். சர்க்கரைத் தண்ணீர் (சேனை வைத்தல்), டீ போன்றவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது.

பிறந்த 12 மணி நேரத்துக்குள் கருநிற மலம் கழிக்க வேண்டும். 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் சிறுநீர் கழிக்க வேண்டும். இல்லையென்றால் மருத்துவரைப் பார்க்கவேண்டும்.

2½ கிலோவுக்கு மேல் எடையுள்ள குழந்தைகளை தினமும் ஒரு முறை வெந்நீரில் குளிப்பாட்டலாம். குளிக்கும் போது குழந்தையின் உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எடை குறைவான குழந்தை, குறைமாதக் குழந்தை என்றால் வெந்நீரில் துணியை நனைத்துப் பிழிந்து துடைத்து எடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வேர்க்குரு போன்ற சிவப்புத் தடிப்புகள் இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் முன் அழலாம். முகம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கலாம். குழந்தையின் வாயில் மேல் தாடையில் முத்துப் போன்ற பருக்கள் இருக்கலாம். மூக்கில் வெள்ளை நிற பருக்கள் இருக்கலாம். பெண் குழந்தைகள் என்றால் ஒரு வாரத்துக்குள் தீட்டுப்படுவதும் இருக்கலாம். பிறந்த குழந்தையின் மார்பு சற்று தடித்து பெரிதாக இருப்பது இயல்பான ஒன்றே. அதைத் தவறாக நினைத்து விடக் கூடாது.

பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒன்றே உணவு. வேறு எந்த உணவும் தரக் கூடாது. தாய்மார்கள் பால் கொடுக்கும் காலங்களில் புரதச் சத்து அதிகம் உள்ள கோதுமை, மீன், பயறு வகைகளை சாப்பிட வேண்டும். பிரசவித்த தாய் தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தத்தின் மூலமே குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் காக்க முடியும்.