Home சமையல் குறிப்புகள் தலப்பாகட்டு பிரியாணி – Thalapakattu Briyani

தலப்பாகட்டு பிரியாணி – Thalapakattu Briyani

13

biriyaniபொதுவாக அனைத்து வகை பிரியாணியிலும் வெங்காயம் + தக்காளியினை வெட்டி தான் சேர்ப்போம். ஆனால் இந்த பிரியாணியில் வெங்காயம் + தக்காளி + புதினா , கொத்தமல்லி என அனைத்தையுமே அரைத்து தான் சேர்ப்போம்.

சிக்கன் / மட்டனை குறைந்தது 2 – 3 மணி நேரம் மசாலாவில் ஊறவைத்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
இந்த பிரியாணியினை சீரக சம்பா அரிசியில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.
மிதமான தீயில் ,ஒவ்வொரு பொருள் சேர்த்த பிறகு நன்றாக வதக்கி செய்தால் கண்டிப்பாக இந்த பிரியாணி அருமையாக இருக்கும்.
நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி அனிஸ்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சிக்கன் – 1/2 கிலோ
· பஸ்மதி அரிசி – 3 கப்
· சீரகம் தூள் – 1 மேஜை கரண்டி
· தேங்காய் பால் – 2 கப்
· உப்பு – தேவையான அளவு
தனி தனியாக அரைத்து கொள்ள :
· வெங்காயம் – 1 பெரியது
· தக்காளி – 2 பெரியது
· புதினா + கொத்தமல்லி – 1 கப் சுத்தம் செய்த இலைகள்
இஞ்சி பூண்டு விழுது : (சுமார் 3 மேஜை கரண்டி)
· இஞ்சி – 1 துண்டு
· பூண்டு – 6 பல்
· பட்டை – 1
· கிராம்பு – 2
· ஏலக்காய் – 1
சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க :
· அரைத்த இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
· மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
· தனியா தூள் – 1 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· தயிர் – 1 கப்
· எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு
முதலில் தாளிக்க :
· எண்ணெய் + நெய் – சிறிதளவு
· பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரியாணி இலை
· பச்சை மிளகாய் – 4

செய்முறை :
· சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதினை அரைத்து கொள்ளவும். சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.
· சிக்கனை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைத்தால் நன்றாக இருக்கும். ( சுமார் 2 – 3 மணி நேரம் ஊறவைக்கலாம்.)
· வெங்காயம் + தக்காளி + புதினா கொத்தமல்லியினை தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
· பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
· இத்துடன் வெங்காயம் விழுதினை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
· வெங்காயம் வதங்கியவுடன் அத்துடன் மீதம் உள்ள இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கிய பிறகு புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
· புதினா, கொத்தமல்லி நன்றாக வதங்கி வாசனை மற்றும் கலர் மாறிய பிறகு, சீரக தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் வதக்கவும்.
· இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.
· அதன் பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியினை சேர்த்த் தட்டு போட்டு மூடி நன்றாக வேகவிடவும்.
· பாஸ்மதி அரிசியினை கழுவி சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்தால் போதும். (அதற்கு மேல் ஊறவைக்க தேவையில்லை. )
· சிக்கன் வெந்த , எண்ணெய் பிரியும் பொழுது ஊறவைத்துள்ள அரிசியினை சேர்த்து கிளறிவிட்டு தட்டு போட்டு மூடி 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். (கவனிக்க : தண்ணீர் சேர்க்கவில்லை. சிக்கன் க்ரேவியிலே அரிசியினை சேர்க்கின்றோம்.)
· 2 – 3 நிமிடங்கள் கழித்து தேங்காய் பால் + 3 – 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு , தட்டி போடு மூடி வேகவிடவும். (பிரஸர் குக்கரில் செய்வது என்றால், 1 விசில் வரும் வரை வேகவிட்டால் போதும்.)
· சுவையான பிரியாணி ரெடி. இதனை க்ரேவி, தயிர் பச்சடி, முட்டையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கவனிக்க :
அனைத்து பொருட்களை வதக்கும் பொழுதும் மிதமான தீயில் (Medium Flame) வைத்தே சமைக்க வேண்டும்.
கொடுத்துள்ள அளவு சரியாக இருக்கும்.
சிக்கனில் செய்வதினை விட மட்டனில் செய்தால் சுவையாக இருக்கும்.
அரிசியினை நிறைய நேரம் ஊறவைத்தால் சிக்கனுடன் சேர்த்து வறுக்கும் பொழுது உடைந்துவிடும் என்பதால் 10 நிமிடங்கள் ஊறினால் போதும்.