Home பெண்கள் தாய்மை நலம் சுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதா… தாய்மார்கள் அறிவது எப்படி?

சுரக்கும் தாய்ப்பால் குழந்தைக்குப் போதுமானதா… தாய்மார்கள் அறிவது எப்படி?

122

குழந்தை நலம்:அத்தனை பாலூட்டிகளும், இயற்கையாகவே தங்கள் சந்ததிக்கு போதுமான அளவுக்குத் தாய்ப்பால் புகட்டுகின்றன. ஆனால், மனித இனத்தில் மட்டுமே, பல்வேறு காரணங்களால் போதிய அளவுக்குத் தாய்ப்பால் புகட்டுவது தடைப்படுகிறது. அதற்குக் காரணம், தாய்மார்களுக்கு விழிப்புஉணர்வுமின்மைதான்.

தாய்ப்பால் அருந்துவதென்பது குழந்தையின் உரிமை. போதிய அளவுக்குத் தாய்ப்பால் தருவது தாய்மாரின் கடமை. குழந்தைக்கு இதை ஊட்டுவதின் அவசியமும் அதன் மகத்துவத்தையும் தாய்மார்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தாய், தன் குழந்தைக்குக் கொடுக்கும் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவு தாய்ப்பால். குழந்தையின் முதல் நோய்தடுப்பு மருந்தும் இதுதான். இது, மிகவும் சுத்தமான, உயிர்சத்துகள் நிறைந்த உணவு. குழந்தைப் பிறந்தவுடன், முதல் அரைமணி நேரத்துக்குள் குழந்தையைத் தாயின் மார்பகத்துக்குக் கொண்டுசென்று தாய்ப்பால் ஊட்ட வேண்டும். இது, தாய்ப்பால் புகட்டுவதை எளிமையாக்குவதுடன், குழந்தையின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும். மேலும், குழந்தையை விழிப்புடன் வைத்திருக்கும். தாய்ப்பால் தருவதிலுள்ள சிக்கல்களைக் குறைக்க உதவும்.

பிரசவத்துக்குப் பின்னர் தாய்க்குச் சுரக்கும் முதல் பால் சீம்பால். இது, குழந்தை பிறந்து முதல் இரண்டு நாட்கள் சுரக்கும். இதில் குழந்தையின் நோய்எதிர்ப்பு சக்திக்குத் தேவையான `இம்யுனோக்ளோபுலின்’ (Immunoglobulin) நிறைந்திருக்கிறது. இதிலிருக்கும் ஊட்டச்சத்துக் காரணிகள் குழந்தையின் இரைப்பை மற்றும் குடல் முதிர்வுக்கு உதவுகிறது. எனவே தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கட்டாயம் சீம்பால் புகட்ட வேண்டும்.

பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பாலை மட்டுமே குழந்தைக்கு உணவாகத் தரவேண்டும். இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் புகட்டலாம். தாய்ப்பாலின் தன்மையும் அதிலுள்ள ஊட்டச்சத்தும் ஒவ்வொருமுறை பாலூட்டும்போதும் குழந்தையின் தேவைக்கேற்ப மாறுபடும்.

குறிப்பாக, இரட்டைக் குழந்தை பெற்ற தாய்மார்கள் தன் வலது மார்பகத்தில் ஒரு குழந்தைக்கும், இடது மார்பகத்தில் மற்றொரு குழந்தைக்கும் பாலூட்டவேண்டும். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு குழந்தையில் உடல் எடை மற்றும் தேவைக்கேற்ப இரு மார்புகளிலும் வேறுபட்ட தன்மையான தாய்ப்பால் சுரப்பதாக `அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் பீடியாட்ரிக்’ (American association of pediatric) ஆய்வுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல நேரங்களில் பாலூட்டும் தாய்க்கு ஏற்படும் முதல் குழப்பம், `சுரக்கும் தாய்ப்பால் எனது குழந்தைக்கு போதுமானதா?’. அதைத் தாய்மார்கள் எப்படி அறிந்து கொள்வது? எளிய வழிமுறை இருக்கிறது.

* ஒரு நாளில் குழந்தை குறைந்தது எட்டு முறை சிறுநீர் கழித்தல் வேண்டும்.

* குழந்தையின் எடை ஒவ்வொரு வாரமும் 150-ல் இருந்து 200 கிராம் வரை அதிகரிக்க வேண்டும்.

`தாய்ப்பால் புகட்டுவதால் தாய்-சேய்க்கு எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கின்றன.’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு…

* குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.

* தாய்ப்பால் தொடர்ந்து குடிக்கும் குழந்தைகள் குறைந்த அளவிலேயே தொற்று நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

*முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளர்ந்த குழந்தைகளின் அறிவாற்றல் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதல் ஆறு மாதம் முழுமையாகத் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய், மற்றும் புற்றுநோய்கள் அதிகமாகப் பாதிப்பதில்லை.

*குழந்தைகளின் உடல் எடையைச் சீரான முறையில் சமப்படுத்தி உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.

*போதிய அளவு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய் தாக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

தாய்மார்களுக்கு…

* தாய்ப்பாலூட்டும் தாயின் உடலில் `ஆக்ஸிடோசின்’ (Oxytocin) மற்றும் `ஃப்ரோலாக்டின்’ (Prolactin) ஹார்மோன்களின் சுரப்பு காரணமாக பிரசவத்துக்குப்பின் கருப்பை தன் இயல்பு நிலைக்குச் சுருங்கி, ரத்தம் வெளியேறுவதை வேகமாகக் கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன்கள், தாய்-சேய் இடையே பிணைப்பை அதிகரிக்கும்.

* கர்ப்பகாலத்தில் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்கும். முழுமையாகத் தாய்ப்பால் தரும் தாய்மார்கள், விரைவில் தனது பழைய உடல் எடையைப் பெறலாம்.

* முழுமையாகத் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், இதய நோய்கள், சர்க்கரை நோய் பாதிப்புகள் மிகவும் குறைவு.

தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பால் தருவதன் அவசியத்தை உணர வேண்டும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோம்!