Home குழந்தை நலம் குழந்தை பிறந்தது முதல் மூன்று வயது வரை வளர்ச்சியின் நிலைகள்

குழந்தை பிறந்தது முதல் மூன்று வயது வரை வளர்ச்சியின் நிலைகள்

31

Captureபிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்…

குழந்தையின் வளர்ச்சி :

பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. பிறந்த குழந்தையானது…

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்

2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்

3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.

5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.

6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.

7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.

8-வது மாதத்தில் : தவழும்.

9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.

10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.

12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும். அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.

13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.

24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.

36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.

* கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.

* பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.

* ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.