Home குழந்தை நலம் குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!

குழந்தைங்களுக்கு இருமலா? மருந்து தராதீங்க!

17

குழந்தைகள் லேசாக இருமினாலே பெற்றோர்கள் பதற்றப்பட்டு இருமல் டானிக்கை ஊற்றுவார்கள். இது தேவையற்ற செயல் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருமல் மருந்துகளால் எந்த பயனும் இல்லை என்கின்றனர் அவர்கள். நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற தூசி, கிருமிகள் போன்றவை நுழைவதை தடுப்பதே இருமல்தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருமல் பாதுகாப்பானது

கண்களில் தூசி விழுந்தால் எவ்வாறு கைகள் தடுக்கின்றனவோ அதுபோல இருமலானது நுரையீரலுக்குள் நச்சுப் பொருட்கள் நுழையாமல் பாதுகாக்கிறது. தேவையற்ற பொருட்கள் உள்ளே நுழைந்தால் காற்று உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் உள்ளே தூசு, நச்சு செல்லாமல் தடுக்கப்படுகிறது.

அளவான இருமல் நல்லது, இதற்ககு மருந்து எதுவும் தேவை இல்லை. இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம், தூக்கம் இல்லாமை, தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய டானிக் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி வெளியேறும்

சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது. ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும். இருமலை நிறுத்தினால் அவை நுரையீரலில் சென்று நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும்.

குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுப்படுத்தக் கூடாது. எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து அதற்கு மருத்துவம் அளிக்கவேண்டும். வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம். தூக்கம் இல்லாமல் இருமுதல், பால் குடிக்க முடியாமல் இருமல், இருமலின் முடிவில் வாந்தி – ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெந்நீர் ஆவி பிடிக்கலாம்

மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல, மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும். இதற்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும். சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர், சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும்.

தொண்டையில் புண் இருந்தால் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும். மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும். வெந்நீரில் ஆவி பிடிக்கவேண்டும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தைகளின் இதயத்துடிப்பு

சளி மஞ்சளாகவோ, பச்சையாகவோ, கெட்டியாகவோ மாறும்போதும், மூச்சு விடும் வேகம் அதிகரிக்கும் இது வயதிற்கு ஏற்ப மாறும். குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும்.

குழந்தையின் இதயத்துடிப்பு அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் மருத்துவரை அணுகவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.