Home குழந்தை நலம் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!

கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!!!

21

foetal-developmentகர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, அப்பாவாகும் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் பெண்களின் மனதில் ஓர் ஆசை கட்டாயம் இருக்கும். அதில் குழந்தையின் வளர்ச்சி வாரா வாரம் எப்படி இருக்கும் என்பது தான்.

உண்மையிலேயே வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உங்களுக்கு கருப்பையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் தொடர்ந்து படியுங்கள். இங்கு எந்த வாரத்தில் குழந்தையின் எந்த உறுப்புக்கள் வளர்ச்சியடைந்திருக்கும் என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வாரத்தில்…
கர்ப்பத்தின் எட்டாம் வாரத்தில் குழந்தையின் கண்கள் மற்றும் காதுகள் வளர ஆரம்பிக்கும். இந்த வாரத்தில் குழந்தை 2 செ.மீ நீளத்தில் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் முகமும் வளர ஆரம்பித்திருக்கும்.

12 ஆம் வாரத்தில்…
கர்ப்பத்தின் 12 ஆம் வாரத்தில் குழந்தை 5 செ.மீ நீளத்தில் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் உடல் முழுவதும் வளர்ந்து, அதில் அழகிய பிஞ்சு கைகள், கால்களும் வளர்ந்திருக்கும்.

12 ஆம் வாரத்திற்கு பின்…
என்ன குழந்தை என்பதை 12 ஆம் வாரத்திற்குப் பின் தான் காண முடியும். பொதுவாக குழந்தையின் பிறப்புறுப்புக்கள் 9 ஆம் வாரத்தில் வளர ஆரம்பித்து, 12 ஆம் வாரத்திற்கு பின்பே ஆணா அல்லது பெண்ணா என்றே காண முடியும்.

20 ஆவது வாரத்தில்…
கர்ப்பத்தின் 20 ஆவது வாரத்தில் குழந்தை 18 செ.மீ நீளம் வளர்ந்து, வயிற்றிற்குள் அசைய ஆரம்பிக்கும். இக்காலத்தில் தான் குழந்தைக்கு புருவங்கள் தெரிய ஆரம்பிக்கும் மற்றும் விரல் நகங்களும் நன்கு வளர்ந்திருக்கும்.

24 ஆவது வாரத்தில்…
24 ஆவது வாரத்தில் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிப்பதோடு, பதிலளிக்கும் திறனும் இருக்கும். இக்காலத்தில் குழந்தையின் முகம் மற்றும் உறுப்புக்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

27 ஆவது வாரத்தில்…
27 ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தையால் சுவாசிக்க முடியும்.

28 ஆவது வாரத்தில்…
28 ஆவது வாரத்திற்கு பின் குழந்தையினால் வாசனையை நுகர முடியும். அதாவது இக்காலத்தில் குழந்தையினால் உணவின் வாசனையை நுகர முடியும்.

32 ஆவது வாரத்தில்…
32 ஆவது வாரத்தில் குழந்தை கண்களைத் திறக்கும். மேலும் இக்காலத்தில் குழந்தையின் நிலை மாறி, குழந்தை தலைகீழாக இருக்கும். இந்த வாரத்தின் போது குழந்தை தீவிரமாக தன் கை மற்றும் கால்களால் உதைக்க ஆரம்பிக்கும். முக்கியமாக இக்காலத்தில் குழந்தை 44 முதல் 55 செ.மீ உயரத்தில் இருக்கக்கூடும்.

40 ஆவது வாரத்தில்…
40 ஆவது வாரத்தில், அதாவது 9 மாத காலத்தில் குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைந்திக்கும். இந்த மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு தயாராக இருக்கும். மேலும் இக்காலத்தில் குழந்தையின் எடை 2-3 கிலோ இருக்கும். சில குழந்தைகள் 5 கிலோ எடையுடன் கூட இருப்பார்கள்.