Home குழந்தை நலம் குழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்

குழந்தைகளுடன் பொழுதுபோக்க பெற்றோருக்கு 10 டிப்ஸ்

27

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்கும் டைம்டேபிள் போட்டு நேரம் ஒதுக்கும் நிலை உண்டாகிவிட்டது. எனவே, குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.

* வயிற்றில் கருவாக உருவாகி 20 வாரங்களிலேயே தாயைச் சுற்றிலும் நடக்கும் உரையாடல்கள், சத்தங்களை கரு உணர ஆரம்பிக்கிறது. எனவே, தாய், தந்தையர் இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வயிற்றில் இருக்கும் கருவுடன் பாசிடிவ்வாக பேசுங்கள்.

* குழந்தை பிறந்த பின்னர், ‘அம்மா சமைக்கப் போகிறேன்; சமத்தா தூங்குங்க’ என்றும், ‘அம்மா வந்துட்டே இருக்கேன்; அழாதீங்க’ என்றும் அடிக்கடி பேசிக்கொண்டே இருங்கள். இது, உங்கள் அருகாமையை பிஞ்சுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.

* தூங்கவைக்கும்போது தட்டிக்கொடுத்தும், தாலாட்டுப் பாடியும் தூங்க வையுங்கள், கதைகள் சொல்லுங்கள். இது,தாய்க்கும் சேய்க்குமான பாசத்தை அதிகரிக்கும். தந்தையும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

* பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததுமே, அல்லது நீங்கள் பணி முடிந்து வந்ததுமே, அன்று பள்ளியில் நடந்த விஷயங்களை உற்சாகமாகக் கேளுங்கள். அவர்கள் சொல்வதில் இருந்து கேள்விகள் கேட்டு உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் உணர்த்துங்கள்.

* அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நேரங்கள், ஓரிடத்தில் காத்திருக்கும் நேரங்களில் விடுகதைகள் போடுவது அல்லது வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள். இது, அவர்களின் மொழித்திறனை வளர்க்கும்.

* வாரம் ஒருமுறையாவது மொட்டை மாடியில் பிள்ளைகளோடு இயற்கையை ரசித்தவாறு நிலாச் சோறு சாப்பிடுங்கள். வீட்டுக்குள் சாப்பிடும் நேரத்திலும் டி.வி.யை அணைத்துவிட்டுப் பேசிக்கொண்டே சாப்பிடுங்கள். அந்தப் பேச்சில் உறவுகள், நண்பர்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.

* புத்தாண்டு மற்றும் பிள்ளைகளின் பிறந்த நாட்களில் கடந்த வருடங்களில் குழந்தைகள் கற்றுக்கொண்டதைப் பகிரச் சொல்லிக் கேளுங்கள். இந்த வருடத்துக்கான சின்னச் சின்ன இலக்குகள், புதிய நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் விதையுங்கள்.

* குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களில் மொபைல் கேம்களைத் தவிருங்கள். கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். இது, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

* விசேஷ நாட்களில் குழந்தைகளின் நண்பர்களையும் வீட்டுக்கு அழைக்கலாம். நண்பர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து விளையாடி மகிழுங்கள். அவர்களின் நண்பர்களையும் கருத்துகளையும் நீங்கள் மதிப்பதை உணர்த்துங்கள்.

* வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது குழந்தைகள் மனதில் நினைப்பதைக் கடிதமாக பெற்றோருக்கு எழுதச் சொல்லுங்கள். ஊரில் இருக்கும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா போன்ற உறவுகளுக்கும் அன்பை வெளிப்படுத்தும் கடிதத்தை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.