Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் கட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?..

தாய்ப்பால் கட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?..

92

குழந்தை கருவில் உருவானதிலிருந்து சிசுவின் ஒவ்வொரு அசைவினையும் அணுஅணுவாக ரசிக்கத் தொடங்கிவிடுவாள் தாய். குழந்தை பிறந்து தாய்ப்பாலூட்டும் போதும் கிடைக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

பிரசவம் முடிந்து குழந்தைக்கு கொடுக்கும் முதல் தாய்ப்பாலில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அது குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. முடிந்த வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்காதீர்கள்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தாய்ப்பால் கட்டி கொள்ளுதல். சில மணி நேரங்கள் தொடர்ச்சியாக குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை என்றால் பால் கட்டிக்கொள்ளும்.

அப்படி தாய்ப்பால் கட்டிக்கொள்ளும்போது பெண்கள் மார்பில் தாங்க முடியாத வலியை அனுபவிப்பார்கள். அப்படி மார்பில் பால் கட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?…

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, அதிக அளவில் பால் சுரந்து குழந்தை முழுமையாகக் குடிக்கவில்லை என்றாலும்கூட பால் கட்டிக் கொள்ளும். பால் கட்டிக் கொள்ளுதல் போன்ற உணர்வு ஏற்படும் போதே, பாலை கைகளால் அமுக்கி வெளியேற்றிவிட வேண்டும். அதற்கென கிடைக்கும் பம்ப்புகளை கூட உபயோகித்து வெளியேற்றலாம்.

பால் கட்டிக்கொண்டால் தாய்மார்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயத்தில் சுத்தமான துணியை, சுடுநீரில் நனைத்து மார்பகங்களின் மீது வைத்து எடுத்தால், வலி குறைந்து விரைவில் சரியாகி விடும்.

பால் கட்டிக்கொள்ளுதல் இரண்டு மார்பகங்களிலும் சேர்ந்து ஏற்படும் என்பது தவறான கருத்து. குழந்தை ஒரு மார்பகத்தில் மட்டும் பால் குடிக்கும் போதே உறங்கி இருந்தால், ஒரு மார்பகத்தில் மட்டும் கூட பால் கட்டிக் கொள்ளும். அது போன்ற சமயத்தில் பால் கட்டி இருக்கும் மார்பின் மேல்புறமும், மற்றொன்று கீழ்புறமும் இருக்குமாறு படுக்க வேண்டும். இதனால், ஒரு மார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பால் செல்லும். இது பால் கட்டி கொண்டிருப்பதை குறைக்க உதவும்.

பாசிப்பயறு அல்லது துவரம் பருப்பை அரைத்து சுடுநீரில் கலந்து மார்பில் பூசி கொள்வதன் மூலம் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். வலி அதிகம் இருந்தால் மட்டும் இந்த முறையைப் பின்பற்றுவது சிறந்தது. இது பால் சுரப்பை குறைக்க செய்யும். ஒரு முறை மட்டும் உபயோகிக்க வேண்டும். தொடர்ந்தோ அல்லது பல முறையோ இந்த வழியைப் பின்பற்றக்கூடாது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஒரே மார்பகத்தில் கொடுக்காமல், இரு மார்பகங்களிலும் கொடுக்க வேண்டும். ஒரு மார்பில் பால் குடித்தவுடன் குழந்தை உறங்கி விட்டால், அடுத்த முறை பால் கொடுக்கும் போது மற்றோர் மார்பத்தில் பால் கொடுத்தால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

பால் கட்டி கொண்டிருக்கும் சமயத்தில் உணவு மற்றும் தண்ணீர் அதிக அளவில் எடுத்து கொள்வதை தவிர்க்கவும். இது மேலும் பால் சுரப்பை அதிகரிக்கும் என்பதால் குறைத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.