Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் சர்ம அழகை குளிர்காலத்தில் எப்படி பாதுகாப்பது

பெண்களின் சர்ம அழகை குளிர்காலத்தில் எப்படி பாதுகாப்பது

73

பெண்கள் ஆழகு குறிப்பு:குளிர்கால சரும பராமரிப்பு
குளிர்காலத்தில் வழக்கத்தை விட சரும பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சோர்வான முகம், வறண்ட உதடுகள், உலர்ந்த சருமம், தோல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். தண்ணீர் குறைவாக பருகுவதே அதற்கு முக்கிய காரணம். அது சருமத்தின் உள்புறமும், வெளிப்புறமும் உலர்தன்மை அடைவதற்கு வழிவகுத்துவிடும். ஆல்கஹால் சேர்க்கப்படாத கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் பி.எச் அளவை சமநிலையில் பராமரிக்க முடியும்.

குளிப்பதற்கும், முகம் கழுகுவதற்கும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். அதிக சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடலில் எண்ணெய் சிறிதளவு தேய்த்துவிட்டு குளிக்க செல்லலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை சீராக பராமரிக்க வழிவகை செய்யும்.

குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்துவிடும். குளிர்காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும்.

சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

குளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.