Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பரு சிகிச்சையில் நடக்கும் முக்கியமான தவறுகள்

முகப்பரு சிகிச்சையில் நடக்கும் முக்கியமான தவறுகள்

21

இன்று முகப்பரு என்பது பலருக்கும் காணப்படும் ஒரு சருமப் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக இந்தப் பிரச்சனை பதின்பருவத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாகத் தொடங்குகிறது, ஆனால் பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது. முகப்பருவைப் போக்க பல்வேறு சிகிச்சைகள் உள்ளன, அவை சரியாக சில சமயம் அதிக காலமும் ஆகலாம். அப்படி சரியானாலும், அவை மீண்டும் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். சிறந்த சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், சிகிச்சைகளில் நடக்கும் சில பொதுவான தவறுகளால் முகப்பருப் பிரச்சனை இன்னும் மோசமாகவும் வாய்ப்புள்ளது. அப்படியான தவறுகளில் சில:

போதுமான கால அளவுக்கு சிகிச்சையைத் தொடராமல் விடுவது: முகப்பருவுக்கான சிகிச்சை என்பது நீண்ட கால செயலாகும். முகப்பருக்கள் வேகமாக வந்துவிடும், ஆனால் சரியாக அதிக காலம் எடுக்கும். மருந்துகளின் விளைவு சருமத்தில் மாற்றங்களை ஏற்படுத்த 4 முதல் 6 வாரங்கள் கூட ஆகலாம். புதிய மருந்துகள் மற்றும் லோஷன்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள சருமத்திற்கு சிறிது காலம் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், சிகிச்சை முறையை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
மிக அதிக தயாரிப்புகளைப் பயன்படுத்துவது: முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் விரைவில் பலன் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், மிக அதிக தயாரிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படிச் செய்தால் பலன் எதுவும் கிடைக்காது. சொல்லப்போனால் முகப்பருப் பிரச்சனை இன்னும் மோசமாகவே ஆகும். ஒரே தயாரிப்பை குறிப்பிட்ட காலம் வரை தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதுதான் சரியான முறை.

அளவுக்கு அதிகமாக சுத்தம் செய்தல்: பலர் சருமத்தில் உள்ள அழுக்கினால் தான் முகப்பரு வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள்இதனால் சருமத்தை அளவுக்கு அதிகமாகத் தேய்த்து, சுரண்டி சுத்தப்படுத்துவார்கள். இதனால் சருமம் எரிச்சல் அடைந்து முகப்பருவும் அதிகமாகலாம். நாளொன்றுக்கு இருமுறை சருமத்தைக் கழுவினால் போதும், அப்போதும் லேசாகக் கழுவ வேண்டும். எரிச்சலை ஏற்படுத்தாத, pH சமநிலை கொண்ட க்ளென்சரைப் பயன்படுத்த வேண்டும். வெந்நீரும் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். ஆகவே, எப்போதும் சருமத்தைக் கழுவ வெதுவெதுப்பான நீரையே பயன்படுத்த வேண்டும்.

தவறான தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்: தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, ஆசைப்பட்டு பலர், முகப்பருவைத் தீர்க்கும் என்று நம்பி தவறான தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதுண்டு. சருமத்தில் உள்ள நுண்துளைகளை அடைக்காத தயாரிப்புகளையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அவை ‘நான்கோமிடோஜெனிக்’ (noncomedogenic) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, புதிய தயாரிப்பு ஒன்றைப் பயன்படுத்திப் பார்க்கும்போது, முதலில் அதனை சில நாட்களுக்கு மட்டும் சிறிய அளவில் சருமத்தில் போட்டு சோதனை செய்ய வேண்டும். ஏதேனும் எரிச்சல் அல்லது எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும்.

முகப்பருவைத் தொடுவது அல்லது உடைப்பது: முகப்பருப் பிரச்சனை உள்ளவர்கள், எப்போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தொட்டுக்கொண்டே இருப்பார்கள். முகப்பருவை உடைக்க முயற்சிப்பது அதைவிடப் பெரிய தவறு. முகப்பருக்களைத் தொடுவதும், உடைப்பதும் இன்னும் மோசமாக்கும். அப்படிச் செய்வதால் பாக்டீரியா இன்னும் அதிகமாகப் பரவி காயம் இன்னும் மோசமாகும். இதனால் தழும்புகளும் உண்டாகலாம்.
சருமத்திற்கு போதிய ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளாமல் விடுவது: எண்ணெய்ப்பிசுக்குள்ள அல்லது முகப்பரு வருகின்ற தன்மை கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு, மாய்ஸ்டுரைஸர் தேவையில்லை என்று எல்லோரும் நினைப்பார்கள். இதனால் சருமத்தை முடிந்தவரை உலர்வாகவே வைத்திருக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இதனால் எண்ணெய் உற்பத்தி இன்னும் அதிகரித்து முகப்பருவும் அதிகரிக்கவே செய்யும். முகப்பருக்கள் வரக்கூடிய சருமத்திற்கும் மாய்ஸ்டுரைஸர் அவசியம். அதற்கு, எண்ணெய் இல்லாத அல்லது ஜெல் கொண்ட மாய்ஸ்டுரைஸரைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தின் நுண்துளைகளை அடைக்காது.

சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது: முகப்பருக்கள் வரும் வாய்ப்புள்ள சருமம், சூரிய ஒளியாலும் எளிதில் சேதமடையும். முகப்பரு வரும் தன்மை கொண்ட சருமத்திற்கென்று கிடைக்கும் சன்ஸ்கிரீன் தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும், இவை சருமத்தின் நுண்துளைகளை அடைக்காது. எண்ணெய் இல்லாத, பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் தயாரிப்புகள், சருமம் கருமையாவதைத் தடுக்க உதவும்.
சிகிச்சையை விரைவில் முடித்துக்கொள்ளுதல்: பலர் சருமம் முகப்பருக்கள் நீங்கி சரியானதும் சிகிச்சையை முடித்துக்கொள்வார்கள். முகப்பரு சிகிச்சை என்பது ஒரு நீண்ட கால செயல்முறை அவர்கள் மறந்துவிடுகின்றனர். இது சிகிச்சையின் கடைசி கட்டம் தான். நல்ல பலன்கள் கிடைக்க வேண்டுமெனில், பரிந்துரைக்கப்பட்ட சரியான கால அளவு வரை சிகிச்சையை விடாமல் தொடர வேண்டும். மருத்துவர் இடையில் நிறுத்தக் கூறினால் மட்டுமே நிறுத்தலாம்.