Home உறவு-காதல் கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்

கொஞ்சம் ஊடல்… நிறைய கூடல்… காதலின் சுவாரஸ்யங்கள்

26

சண்டை இல்லாத வீடு உப்பு காரம் இல்லாத சமையல் போல ருசியே இருக்காது. தம்பதியர், காதலர்கள் இடையே அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் இருந்தால்தான் அன்பின் ஆழம் தெரியும், அதை சரியாக புரிந்து கொள்ளவும் முடியும்.

உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா? என்று ஒரு கவிஞன் கேட்டதைப் போல சோற்றில் கரைந்த உப்பைப் போலவும், காபியில் கலந்த சர்க்கரையைப் போலவும் இருப்பதுதான் காதல்.

இந்த காதலும் அன்பும் ஒன்றாக காமத்தில் இணையும் போது அது தனி ருசியைத் தரும். அடிக்கடி கூடல் மட்டுமே இருந்தால் அதில் என்ன சுவாரஸ்யம்? கொஞ்சம் ஊடலும் வேணுங்க அப்பத்தானே தயிர்சாதத்திற்கு ஏற்ற ஊறுகாய் மாதிரி உறவு சும்மா சுள்ளுன்னு ருசிக்கும் என்கின்றனர். எது எதற்கு ஊடல் கொள்ளலாம் என்றும் அதை எப்படி சமாதானமாக மாற்றலாம் என்றும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

சமையல் நல்லாயிருக்கா?
விடுமுறை நாளில் காலையிலேயே தொடங்கிவிடுங்கள். சண்டே சமையல் என்றால் கொஞ்சம் ஸ்பெசலாகத்தான் இருக்கும். கூடுதல் கவனத்தோடு சமையல் செய்து கொண்டு போய் கணவர் முன்பாக வைத்து அவரின் முகத்தைப் பாருங்கள். சாப்பிட்டு விட்டு ஒன்றும் சொல்லாமல் போனால் ஊடலை தொடங்குங்கள்.

இந்த டிரஸ் எப்படி இருக்கு?
வார விடுமுறை நாளில் வெளியே போகும் போது புதிதாக உடுத்தியிருக்கிறீர்களா? இந்த டிரஸ் எனக்கு நல்லாயிருக்கா? இதுக்கு மேட்ச் ஆ என்ன நகை போட்டுக்கலாம் என்று கேளுங்கள். கணவர் கண்டு கொள்ளாமல் கிளம்புகிறார் என்றார் சின்னதாக ஒரு சண்டையை ஆரம்பியுங்களேன்.

எவ்ளோ பிடிக்கும் உங்களுக்கு?
தன்னுடைய கணவருக்கு தன்னை மட்டுமே பிடிக்கவேண்டும் என்பது மனைவிகளின் விருப்பமாக இருக்கும். ஒரு மாலைப் பொழுதில் டீ அருந்தும் நேரத்தில் பொதுவாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, என்னை உங்களுக்கு பிடிக்குமா? எவ்ளோ பிடிக்கும் என்று சின்னதாய் கேளுங்கள். கொஞ்சமாய் பிடிக்கும் என்று மனிதர் கூறினால் போடலாமே செல்லச் சண்டையை.

நான் அழகா இல்லையா?
இருவரும் இணைந்து வெளியே போகும் தருணத்தில் கணவரின் கண்கள் உங்களைத் தவிர வேறு யாரையாவது பார்க்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் கவனியுங்கள். ஏன் நான் அழகா இல்லையா என்று ஆரம்பித்து வீட்டுக்கு வாங்க மிச்சத்தை வைச்சிக்கிறேன் என்பது வரை சும்மா போடுங்கள் ஒரு சண்டை.

ஊட்டி விடுங்களேன்
சண்டை போட்டாகிவிட்டது. உங்கள் கணவரை அல்லது காதலரை சமாதானப்படுத்த வேண்டுமே எப்படி என்று யோசிக்கிறீர்களா? புன்னகையுடன் அணுகுங்கள். சமையலில் ஆரம்பித்த சண்டையை மையலில் முடியுங்கள். முடிந்தால் ஊட்டி விடுங்களேன். அப்புறம் என்ன அந்த சமையலின் ருசியே தனிதான்.

நீங்கதான் ஹீரோ
நீங்கள் போட்டிருக்கும் உடையை கண்டுகொள்ளாமல் விட்டால் சண்டை போடுவது ஒருபுறம் இருக்கட்டும். அவர் என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். எப்படி தலை சீவியிருக்கிறார் என்று கவனித்து அவரை வர்ணியுங்கள் அப்படியே உருகிப் போய்விடுவாரே உங்களவர்.

உயிராய் நேசியுங்கள்
எவ்ளோ பிடிக்கும் என்று கேட்பதை விட அவரை எந்த அளவிற்கு நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள். ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். உயிர்வரை நேசிக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லுங்கள். தாயாய் மாறி தாலாட்டுங்கள். உங்கள் அன்பில் திளைத்துப் போவார் உங்களவர்

கொஞ்சம் இடைவெளி
சின்னச் சின்ன சண்டைகள்தான் அன்பின் ஆழத்தை உணர்த்தும் யார் சண்டை போட்டாலும் சரி எப்படி சமாதானம் ஆவது என்று யோசியுங்கள். ஒரு கோடி ரூபாய் கொடுக்காத சந்தோசத்தினை ஒரு முழம் மல்லிகை கொடுக்கும் என்பார்கள் அப்புறம் என்ன சாயந்திரம் வீட்டுக்குப் போகும் போது மறக்காமல் மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போங்களேன்.