Home உறவு-காதல் புதுசா கல்யாணமான பொண்ணுங்க இந்த 7 விஷயம் மிஸ் பண்ணுவாங்களாம்…

புதுசா கல்யாணமான பொண்ணுங்க இந்த 7 விஷயம் மிஸ் பண்ணுவாங்களாம்…

41

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான சொற்றொடர் இருக்கிறது… கேம் சேஞ்சிங் மொமன்ட்… அதாவது ஒரு ஆட்டத்தில் திருப்புமுனையாக, முடிவை மாற்றும் விதமாக அமையும் ஒரு கட்டம்.

இது எல்லாருடைய வாழ்விலும் அமையும். ஆம்! அதுதான் திருமணம். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் எனும் கேம் சேஞ்சிங் மொமன்ட் உருவாகும். அது பலருக்கும் நல்ல மாற்றமாக அமையும், சிலருக்கு கொஞ்சம் சறுக்கல்களை ஏற்படுத்தலாம்.

ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு இந்த கேம் சேஞ்சிங் மொமன்ட் கொஞ்சம் கடுமையானது. அதாவது இந்த மொமண்டில் இருந்து அணி மாறி விளையாட வேண்டும்., புதிய வீரர்களுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுடன் நல்லுறவு பேண வேண்டும். இப்படி பெண்கள் வாழ்வில் கொஞ்சம் சிக்கல்கள் உண்டாகும். அப்படியான தருணத்தில் தனது பழைய அணியின் கேப்டனான அம்மாவிடம் இருந்து மகள்கள் மிஸ் செய்வதாக வருந்தும் விஷயங்கள் ஏழு இருக்கின்றன. அவற்றை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.

உணவு! மாமியார், நாத்தனார், கணவர், ஏன் அவர்களே ருசியாக சமைத்தாலும் கூட அம்மாவின் அந்த கைப்பக்குவம் மற்றும் ருசியை பெரிதும் மிஸ் செய்கிறார்கள் புதியதாக திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போன பெண்கள். பெண்கள் புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்த பிறகு ஓரிரு நாட்கள் சமையல் கொஞ்சம் மந்தமாக செய்வார்கள். அவர்களது பழைய கைப்பக்குவம் கொஞ்சம் குறைந்திருக்கும். இதை நீங்கள் உணர்ந்ததுண்டா. புதிய சமையலறை, எந்த பொருள், எங்கே வைத்தோம் அல்லது இருக்கிறது என்ற கவன சிதறல் என சிலவன அவர்களது சமையலை கொஞ்சம் தடுமாற செய்யும். இதே போல தான், அம்மாவின் சமையலும். உலகின் சிறந்த சமையல்காரர் சமைத்து கொடுத்தாலும் கூட அம்மாவின் கைப்பக்குவம் மிஸ் செய்கிறார்கள் பெண்கள். ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனையே இல்லையே.

எங்கே? பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. இது அம்மா – மகள் உறவுக்கு மட்டுமே தெரிந்த பிரச்சனை, சண்டை என்றும் கூறலாம். மகள்கள் அவர்களது பொருட்களை எங்கே வைத்தாலும், அதை எடுத்து சரியான இடத்தில் வைக்கும் பழக்கம் அம்மாவிற்கு உண்டு. ஆகையால், தினமும் காலையில் தங்களது ஹேர் கிளிப்பில் இருந்து இதர பெண்கள் சமாச்சார பொருட்கள் வரை அம்மா தான் எடுத்து தர வேண்டும். இதை தங்கள் அம்மாவிடம் இருந்து பிரிந்த புதியதாக திருமணமான பெண்கள் பெரிதும் மிஸ் செய்கிறார்கள். ஆனால், பாருங்களேன்… இவர்கள் அம்மாவான பிறகு, இதே வேலைகளை தங்கள் மகள்களுக்கு செய்கிறார்கள். பெண்கள் நிச்சயமாக ஒரு விசித்திரமான சக்தி தான்.

உடல்நலம்… உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால் நாம் தேடும் முதல் நபர் மருத்துவர் அல்ல, அம்மா தான். எல்லா குழந்தைகளுக்கும் அவர்களுக்கான சிறந்த மருத்துவராக இருப்பது அம்மாக்கள் தான். வீட்டில் இருக்கும் வரை அம்மாவிடம் எத்தனை வேண்டுமானாலும் குழந்தைத்தனமாக அடம் பிடிக்கலாம். ஆனால், இதையே மாமியார் அல்லது நாத்தனாரிடம் எதிர்பார்க்க முடியுமா? கெட்டப்பெயர் தான் வாங்கிக் காட்டிக் கொள்ள வேண்டும்

அலார்ம்! வீட்டில் கடிகாரம், மொபைல் என எதில் அலார்ம் வைத்தாலும், குழந்தைகளை எழுப்புவது அம்மாவின் குரல் எனும் அலார்ம் தான். அந்த அலாரத்தின் சப்தம் கொஞ்சம் கேட்டாலும் போதும் துள்ளி எழுந்துக் கொள்வார்கள். ஏனெனில் அதற்கு அடுத்து அந்த அலார்ம் திட்டும், அடிக்கும், தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் ஊற்றும். மற்ற அலாரங்கள் இவற்றை எல்லாம் செய்யாதே. மேலும், இந்த அலாரத்திடம் ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று கெஞ்சிக் கேட்டு கூடுதலாக தூங்க முடியும். பெண்கள் தங்கள் அம்மாவிடம் இதை அதிகம் மிஸ் செய்வார்களாம்.

சண்டித்தனம்! அப்பாவும் மகனும் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு போன்றவற்றை தான் பேசுவார்கள். ஆனால், அம்மா – மகள் ஊர் கதை, கிசுகிசு, ஷாப்பிங், பிடித்த உணவு சமைப்பது, ஸ்நாக்ஸ் என்ன வேண்டும், படத்திற்கு போகலாமா? பிக்னிக் போகலாமா என்று பலவற்றை பேசுவார்கள். இதில் இவர்களுக்கு இடையே பல சண்டைகள் ஏற்படும். ஆனால், கடைசியில் இவர்களது கூட்டாச்சி எடுக்கும் முடிவை தான் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இது எல்லாம் புகுந்த வீட்டில் நடக்குமா?

மேலாண்மை! உலகின் எந்தவொரு சிறந்த மேலாண்மை கல்லூரியும், திருமணத்திற்கு பிறகு வீட்டை எப்படி கையாள வேண்டும், பொறுப்புகள் எப்படி எடுத்து செய்ய வேண்டும் என்பதை கற்பிப்பது அல்ல. இவை எல்லாம் அவரவர் குடும்பத்தை பொருத்து, அவரவர் அனுபவத்தில் பெற வேண்டிய திறன். திருமணமான பிறகு ஒவ்வொரு இளம்பெண் தனது தாயிடம் இருந்து மிஸ் செய்யும் பெரிய விஷயம் இந்த வீட்டு மேலாண்மை தான். எப்படி அம்மா தனி ஆளாக இத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டு இந்த வேலைகளை எல்லாம் செய்தார் என்று வியந்துப் போகிறார்கள்.

மோசமான நாள்… அனைவரின் வாழ்விலும் ஒரு மோசமான நால் வரும். ஆனால், பெண்களின் வாழ்வில் அது ஒவ்வொரு மாதமும் வரும். அந்த நாட்களில் பெண்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அவர்களது அம்மாக்கள் தான். அந்த நாட்களில் அவர்களுக்கு அம்மாவின் மடிவில் படித்து, அந்த இதமான அணைப்பு மற்றும் வருடுதல் போதுமானதாக இருக்கும். எல்லா வலியையும் மறந்து உறங்கி விடுவார்கள். ஆனால், இது கணவனிடமோ, மாமியாரிடமோ கிடைப்பது கொஞ்சம் அரிது. கணவனுக்கு அந்த வலி புரியவே கொஞ்ச காலமாகும்.