Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி பற்றி தெரிந்ததும்! தெரியாததும்!

உடற்பயிற்சி பற்றி தெரிந்ததும்! தெரியாததும்!

37

அன்றைய காலத்தில் நமது முன்னோர்கள் கடுமையான வேலைகளை செய்ததால் அவர்களில் சிலருக்கு உடற்பயிற்சியின் அவசியம் இருந்திருக்காது. ஆனால் இன்றைய நிலையில் நாம் அனைவருக்குமே உடற்பயிற்சி தேவையான ஒன்றாகிவிட்டது. உடற்பயிற்சியை துவங்கும் முன் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் தொலைகாட்சியில் காணும் சில விளம்பரங்கள் பத்தே நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம் என்றும், எங்களது உடற்பயிற்சியை தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும் என்றும் கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை களைந்து, தெளிவு பெற்று, அனைவரும் நோயற்ற வாழ்வு பெறவேண்டும் என்பதற்காக ஒரு சிறிய முயற்சியாகும்.
தொப்பையை குறைக்க வயிற்று பகுதியில் உடற்பயிற்சி செய்தால் போதுமா ?

நம்மில் பலர் தொப்பையை குறைக்க வயிற்று பகுதியில் சில பயிற்சிகளை தொப்பை குறைந்துவிடும் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.
உடற்பயிற்சி வாரத்துக்கு இரண்டு நாட்கள் செய்தால் போதுமா ?

எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
உடல் எடையை குறைக்க வியர்வை வரும் உடற்பயிற்சிகளை செய்தால் போதுமா ?

வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை தவிர்த்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் நடப்பது நல்ல உடற்பயிற்சியா ?

ஆம், ஏனென்றால் நாம் நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

தசைகளை விரிவுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்குமா?

இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி என்றால் என்ன? அப்படி செய்தால் என்ன விளைவு ஏற்படும்?

உடற்பயிற்சி முடிந்து ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள், இதுவே அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆகும். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாக செய்வது நல்லது.
ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம், ஏனென்றால் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.