Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!

பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!

40

‘வாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப்பட்டுப் பழக்கப்படுத்தப்படுகிறது. அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவளது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன. இந்த வலிகள் போதாதென்று, காரணமற்ற ஏதோ ஒரு வலியால் அவதிப்படுகிற பெண்களும் ஏராளம். வலி நிவாரண மாத்திரை, மருந்துகள், வெளிப்பூச்சுக் களிம்புகள், கை வைத்தியம் என எதற்கும் கட்டுப்படாமல் எக்ஸ்ரே, ஸ்கேன் என எதிலும் காரணம் அகப்படாமல் தொடர்கிற வலிகள் அவை.

வலியை உணர்கிறவர்களுக்கு மட்டுமே தெரிகிற அந்த வேதனை, குடும்பத்தாருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் பொய்யாகவோ, நடிப்பாகவோ, மன நோயாகவோ தெரியும். இப்படியொரு வலி உண்மைதானா? வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு நிபுணர் குமார்.

‘‘பெண்களைக் குறி வைக்கிற இந்த விசித்திரமான வலிக்கு ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்று பெயர். 25 முதல் 60 வயதுப் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்து பேரை பாதித்தால், அதில் 9 பேர் பெண்களாகவும், ஒருவர் மட்டுமே ஆணாகவும் இருப்பார்கள். அந்தளவுக்கு இது பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். உலகளவில் 2 முதல் 4 சதவிகிதப் பெண்களுக்கு இந்த வலி இருக்கிறது.

பெண்களில் பலருக்கும் பரவலாக உடலில் வலி, கை, கால்களில் குத்தல், குடைச்சல், உடல் சோர்வு, மனத்தளர்ச்சி என ஏதோ ஒன்று இருக்கும். சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் இதற்குப் பலன் தராது. இது போன்று பலர், பலவித வலிகளால் வருடக் கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடலளவில், வெளிப்புறத் தோற்றத்தில் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால், வலி மட்டும் விடாமல் படுத்தும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது ஒரு மனநோயாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. மிகச் சமீபத்தில்தான், வலி நிர்வாகப் பிரிவில் இப்படியொரு நோய் இருப்பதும், அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்பது தசை சம்பந்தப்பட்ட வலிகளை ஏற்படுத்தக் கூடியது என்பதும், இன்றைய தேதியில் மக்களாலும் மருத்துவர்களாலும் சரியாக கவனிக்கப்படாத, சிகிச்சையளிக்கப்படாத, சிகிச்சை எடுக்கப்படாத ஒரு நோயாக இருப்பதும் கூட தெரிய வந்திருக்கிறது.

இந்த நோயைப் பற்றி மருத்துவர்களுக்கே கூட இன்னும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் மாதிரியான எந்தச் சோதனையின் மூலமும் இதைக் கண்டுபிடிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற அறிகுறிகளை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். அதற்குக் கட்டுப்படாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகள் பலன் தராத போது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வலி ஒரு பக்கமும், வலி குறையாத மன அழுத்தம் இன்னொரு பக்கமுமாக இரட்டை அவதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உடல் முழுவதுமான வலி, நாள்பட்ட வலி, சோர்வு, மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கழுத்து, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலி, சில நேரங்களில் மூட்டு வலி, அடிக்கடி ஏற்படுகிற தலைவலி, வயிற்றுவலி, வயிற்று உபாதைகள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வாய் உலர்ந்து போவது, கவனக்குறைவு, காலை வேளைகளில் உடல் விரைப்பு, கை, கால்களில் எரிச்சல், மறதி… இப்படி ஏதேனும் ஒன்றோ, எல்லாம் சேர்ந்தோ காணப்படும்.

மேற்சொன்ன அறிகுறிகளில் பலதும் ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, மூட்டு நோய்களின் அறிகுறிகளாகவும் தெரிவதால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்து, இவற்றில் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறதா என்பதையும் அதன் விளைவாகத்தான் வலிக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். உடலில் தசையும் எலும்பும் சந்திக்கிற 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருக்கும். அந்த இடத்து வலிக்கான காரணத்தைக் கண்டறியும் எல்லா பரிசோதனை முடிவுகளும் நார்மல் என்றே வரும். வலி நிர்வாக மருத்துவரை அணுகினால், காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார்.

ஃபைப்ரோமயால்ஜியா என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிறப்பு மருந்துகள், பயிற்சிகள், மன அழுத்தம் குறைக்கிற உத்திகள் போன்றவை பரிந்துரைக்கப்படும். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நடைப் பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள், வலியை சமாளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. இளஞ்சூடான நீரில் தினம் இரண்டு வேளைகள் குளிப்பதும் ஓரளவு நிவாரணம் தரும். மன அழுத்தமற்ற நிலைக்குப் பழக, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.காபி, டீ, சாக்லெட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

வேலைகளுக்கு இடையிடையே பிடித்த செயல்கள் அல்லது பொழுதுபோக்குகளில் சிறிது நேரத்தைத் திருப்பலாம். ஒப்புக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வும் உறக்கமும் உடற்பயிற்சியும் தினம் பின்பற்றப்பட வேண்டும்.’’