Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கல்யாணத்துக்கு தேவையான கட்டுடலுக்கு…

கல்யாணத்துக்கு தேவையான கட்டுடலுக்கு…

36

திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் ஆணுக்குள்ளும், பெண்ணுக் குள்ளும் தங்கள் உடலைப் பற்றிய ஆவேசம் எட்டிப்பார்க்கிறது. அதுவரை கண்டதையும் தின்று உடல் பெருத்துப் போயிருந்தால் ரொம்பவே கவலைப் படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள்.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைவரும் தங்கள் உடலில் அக்கறை கொள்வது மிக அவசியம். திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர்கள் கவனம் செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, சுறு சுறுப்பு நீங்கி, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவை யான உடற்பயிற்சியையும் செய்யவேண்டும்.

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை யாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும். இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். கட்டுடல் கிடைக்கும். தசையும் பலமாகும். இரண்டு வகை உடற் பயிற்சி களையும் அவரவருக்கு தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

உடல் குண்டாக இருப்பவர்கள், `பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது’ என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், `நாளை பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

சிலர் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதிகரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் `வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோ சனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகி விடும்.

குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்துவிடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்து விடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும்.

ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவி கள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மன துக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், `காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்’ என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங் கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.