Home பெண்கள் தாய்மை நலம் பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

30

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். அவர்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

* சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால், வேலை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கும். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.

* பிரசவத்திற்கு பிறகான உடல் பராமரிப்பில் பிறந்த குழந்தையின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் உணவு தாய்ப்பால்தான் என்பதால், தாய்மார்கள் தங்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனத்துடன் இருக்க வேண்டும். கிடைத்த உணவுகளை எல்லாம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்து புரத, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதால், கால்சியம் மற்றும் புரதச் சத்து அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும். அதனால், பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் ஆகிய அதிக கால்சிய சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

* தினமும் குறைந்தபட்சம் 2 டம்ளர் பால் குடிப்பது அவசியம். புரதச் சத்துக்கள் அதிகம் கொண்ட பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டை ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொண்டு வந்தால், அவை சீராக பால் சுரக்க உதவும்.

* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் முடிந்தவரை நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.

* கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம்.

* சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பு அதிகம் இல்லாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.