Home பாலியல் மாதவிலக்கை பிற்போடுவதற்கு மாத்திரை பயன்படுத்த முடியுமா?

மாதவிலக்கை பிற்போடுவதற்கு மாத்திரை பயன்படுத்த முடியுமா?

23

முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம். இதுவோ…. “மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்� மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களையும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்! இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ� தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.

“மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.

விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல…

எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும். கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது.

இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை. இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.

அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம்.

சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது. இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது� மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை.

ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.

முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!’