Home பாலியல் மாதவிடாய் என்றால்…!!

மாதவிடாய் என்றால்…!!

37

மாதவிடாய் என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கருப்பை மடிப்புகளில் போதிய இரத்தம் நிரம்பி இருக்கிறது என்ற தகவலை பெண் ஓமோன் ஆன புறோ ஜெஸ் ரெறோன் உறுதி செய்து கொள்கிறது. கருப்பமானதும் கருக்கட்டிய முட்டை போதிய ஊட்டச் சக்தியைப் பெறுகிறது. தனக்கான உணவை கருப்பை மடிப்புகளிலிருந்து பெறுகிறது.

கர்ப்பம் தரியாத பட்சத்தில் இம் மடிப்புகளில் சேர்ந்த குருதியோடு மடிப்புகள் முறிவடையும் போது நுண்ணிய குருதிக்குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம். இந்த மாதவிடாய் வெளியேற்றம் மாதம் தோறும் யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது.

மாதவிடாய் மாதவிடாய்ச் சங்கிலியின் ஒரு பகுதியாகும். சங்கிலி என்பது மீண்டும் மீண்டும் நடைபெறும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 21 நாட்களிலிருந் 35 நாள் இடைவெளியில் இச்சங்கிலி நிகழ்கிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.

முதன் முறையாக எந்த வயதில் மாதவிடாய் ஏற்படுகிறது?

சாதாரணமாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே நடக்கிறது. இந்தத் தலைமுறையில் சற்று முன்பே ஏற்படுகிறது. மெல்லியவர்களுக்கும், உடற் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் பிந்தியே நடைபெறுகிறது.

கால இடைவெளி மிகவும் கூடுதலானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அநேக பெண்கள் கூறக்கேட்டிருக்கிறோம். தாம் தமது தாய்மாரிடமிருந்து தூர உள்ள போதோ, பாடசாலையிலோ, சுற்றுலாவில் உள்ள போதோ, உறவினர்; வீட்டில் உள்ள போதோ இடம்பெற்றது என்று. தூர இடங்களுக்கு பருவம் அடையாத பெண்களை அழைத்துப் போவோர் இந்நிலை ஏற்படக் கூடும் என்று தாய்மார்களை எச்சரித்து எதை எதை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிந்திருப்பர்.

ஆகவே தமக்கு ஏற்படக் கூடியதை முன்கூட்டியே அறிந்து உதவிக்கு வரத் தாய் அருகில் இருக்க மாட்டார் என்பதற்கு ஏற்ப என்ன செய்ய வேண்டிவரும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

முதல் மாதவிடாய் ஏற்படும் போது நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?

முதலில் உள்ளாடை கறைபடிந்து காணப்படும். முதன் முதலில் மிகவும் மங்கலாகவும் பின் கபில நிறமாகவும் (சிவப்பு நிறமாகவல்ல) வெளியேறும். அடுத்த முறையும் தொடர்ந்து ஏற்படும் அடுத்த நாள் சற்று சிவப்பு நிறமடையும். நீண்ட நாட்களுக்கு முன்பும், கிராமப் பகுதிகளில் பெண்கள் இன்றுங்கூட மாதவிடாய்க் குருதியை உறிஞ்சி விட துணித்துண்டுகளைப் பயன்படுத்துவார்கள். இத்துணித் துண்டுகளைக் பயன்படுத்திய பிறகு தோய்த்து எடுத்தல் வேண்டும். ஆனால் இந் நாட்களில் பலசரக்குக் கடைகளில் பயன்படுத்திய பின் வீசிவிடக்கூடிய சுகாதாரமான துண்டுகள் விற்கப்படுகின்றன. மாதவிடாய் ஏற்பட்ட பின் ஓடித்திரியாமல் முன் கூட்டியே ஒரு பொட்டலத்தை வீட்டில் வாங்கி வைத்திருப்பது புத்திசாலித்தனமான செயலாகும். ஆரம்ப கட்டத்திற்காவது வழமையான அளவினையே பயன்படுத்துவது உத்தமமானது. அடிப்புறத்தில் பிளாஸ்ரிக் படையுடைய பட்டைகளும் தற்போது கிடைக்கின்றன. இவை மாதவிடாய்த் திரவ வெளியேற்றங்களை உறிஞ்சி உள்ளாடைகளை நனைவதிலிருந்து தடுக்கிறது. சிலவிதப் பட்டைகளில் ஒட்டிப் பிடிக்கக்கூடிய நாடாக்கள் உள்ளாடைகளில் ஒட்டிவிட முடிவதால் உரிய இடத்திலேயே அமைந்து விடுகின்றன.

தற்போது மேல் நாடுகளில் பெண்கள் துணித் துண்டுகளையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அவற்றைத் தோய்த்து உலர்த்தி மீண்டும் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இத்துணிகள் தாம் பயன்படுத்திவிட்டு வீசிவிடும் பட்டைகளைக் காட்டிலும் சுற்றாடலுக்குச் சிநேகமானவை.

பட்டைகளை கழுவுக்குழிக்குள் போட்டு நீரைப் பாய்ச்சாதீர்கள். ஏன் எனில் அவை குழாயை அடைத்துவிடும். அவற்றை ஒன்று சேர்த்து அழுக்கு கூடையில் போடுங்கள்.

உங்கள் உள்ளாடையில் கசிவு படிந்து விடின் படிந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இத்தினங்களில் கறுப்பு நிற உள்ளாடை அணிவது புத்திசாலித்தனமானது. குறிப்பிட்ட பகுதியில் உள்ளாடை படும் இடத்தில் பட்டையைச் சுற்றி பொலித்தீனால் சுற்றிவிடுவது பாதுகாப்பானது.

தம்பன்களைப் பயன்படுத்தலாமா?

ஆம். ஆனால், அவை மிகவும் இளம் பெண்களுக்கு சிபார்சு செய்யப்படவில்லை.

தம்பன்கள் இறுக்கப்பட்ட றேயன் நூலாலானது. மாதவிடாய் வெளியேற்றத்தை உறிஞ்சும் போது விரிவடைகிறது. தம்பனைப் பயன்படுத்தும் போது அதன் வட்ட வடிவ முனையை யோனியின் மேற்பகுதிக்கு விரல் ஆழத்திற்குத் தள்ளிவிடுங்கள். சரியாக உள்ளே தள்ளப்பட்டு இருக்கும் போது இருப்பதே உபயோகிப்போருக்குத் தோற்றாது. போதிய ஆழத்தில் வைக்கப்படாவிட்டால் வெளியே வரப்பார்க்கும். வெளியே நாடாவொன்று தொங்கும். இதனை இழுப்பதனால் தம்பனை வெளியே எடுக்கலாம். ஆரம்ப கட்டத்தில் சிறிய அல்லது சாதாரண அளவானதையே பயன்படுத்த வேண்டும்.

மிகவும் இளமையான பெண்களுக்கு தம்பன்கள் ஏன் சிபார்சு செய்வதில்லை?

இளம் பெண்களுக்கு யோனித்துவாரத்தில் மென்சவ்வு ஒன்றுண்டு. இதனை ‘ஹைமன்’ (ர்லஅநn) என்பர். இது தெறிக்காமல் இருப்பது பெண்ணின் கன்னித் தன்மைக்கு ஊறு ஏற்படவில்லை என்பதற்கு அறிகுறியாகக் கொள்ளப்படுவதனால் தம்பன் பாவிக்கும் போது ஹைமன் தெறிப்படைய ஏதுவாகிறது. ஹைமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தம்பனைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

சில பெண்களுக்கு தம்பனை உள்ளே செருகுவதில் சிரமம் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் அபாயமும் ஓரளவு உள்ளது. இது மரணம் சம்பவிக்கவும் ஏதுவாகும். 25,000க்கு ஒன்றைவிட குறைவானவர் இதற்கு இலக்காகின்றனராம்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் யோனி முகிழில் பக்hPறியா தொற்றுநோய் பரவுவதால் ஏற்படுகிறது. உடலில் தோலெங்கும் சிவப்பு சிரங்குத் தன்மை அடைந்து சொடுகுபோல உதிர்ந்து விடுகிறது. இதன் பிறகு இரத்த அமுக்கம் வீழ்ச்சியடைகிறது. பெண்ணிற்கு அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

அதிர்ச்சி நச்சுத்தன்மை தொகுப்பு நோய் காணப்படின் உடனடியாக வைத்தியர் ஒருவரை அணுக வேண்டும்.

அதிர்ச்சி நச்சுத்தன்மைத் தொகுப்பு நோய் வெளிநாடுகளில் விற்கப்படும் அதி உயர் உறிஞ்சுத்தன்மை கொண்ட தம்பன்களோடு தொடர்புடையது. ஏனெனில் இத் தம்பன்கள் நீண்ட நேரம் உள்ளே இருப்பது தான். இந்நோய் வராமல் தடுக்க வேண்டுமாயின் சிறிய அளவினதான தம்பன்களையே பாவிக்க வேண்டும். நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறைமாற்ற வேண்டும். அதனால், இரவு வேளைகளில் பட்டைகளைப் பயன்படுத்துவது நல்லது.

மாதவிடாய் சிலவேளைகளில் நோவை உண்டு பண்ணுவதேன்?

யோசித்துப் பாருங்கள். முதலில் ஏற்படும் மாதவிடாய் நோவை உண்டுபண்ணுவதில்லை. இரண்டாண்டுகளுக்குப் பின்பே நோவு ஏற்படுகின்றது அல்லவா?

மாதவிடாய் நோவுகள் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்கள் இரத்தக் குழாய்க்குள் புறஸ்ரோ கிளான்டின்களிலிருந்து பாய்வதால் ஏற்படுகிறது. இது கருப்பையைப் பலமாக சுருக்குவதால் உண்டாகிறது. குழந்தை பிறக்கும் போது குழந்தையை வெளியே தள்ள கருப்பை சுருங்குவதை ஒத்திருக்கும். இது முட்டை உருவாகி கருக்கட்டக் கூடிய தகுதி பெறும்போது ஏற்படுகிறது. முதல் சில மாதவிடாயின் போது முட்டை உருவாகாது. அப்போதெல்லாம் சுருக்கம் ஏற்படாது.

இப்படியான தசைச் சுருக்கம் மாதவிடாய்க்கு முதல் நாள் ஆரம்பமாகி மாதவிடாய் நின்ற மறுநாள் முடிவுறும்.

மாதவிடாய் நோவை நிறுத்துவது எப்படி?

ஒரு சுலபமான வழி நோவுகொல்லியான அஸ்பிறினையோ பரசிட்ரமோலையோ உட்கொள்வது.

மற்றவழி வெந்நீர்ப் போத்தலை வயிற்றின் மீது வைப்பது. இது சுருங்கிய தசையை ஓய்வுபெறச் செய்கிறது.

சாதாரண வழி, தேகப்பியாசம் தேவையாயின், வழமையான காரியங்களையே செய்யுங்கள். இது தசைச் சுருக்கலிலிருந்து திசைதிருப்பி விடுகிறது. தேகப்பயிற்சி மூளையிலிருந்து நோவு கொல்லி பதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இது இயற்கையான நோவுகொல்லியாகும்.

தசைச்சுருக்கம் காரணமாக நோவு கூடுதலாக ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து வாந்தியும் கண்ணொளி இருண்டும் இருப்பின் வைத்தியர் ஒருவரை நாடவேண்டும். அவர் உங்கள் உடல் உருவாக்கும் புறஸ்ரா கிளான்டின்களின் இரசாயனப் பதார்த்த சுரப்பைத் தடைசெய்யும் மருந்தைக் குறிப்பிடுவார். நீங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தவர்களாயின் உங்களை மாத்திரைக்கு (கருத்தடை மாத்திரை) உட்படுத்த வைத்தியருக்கு முடியும். கருத்தடை மாத்திரை தசைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். புறஸ்ராகிளான்டின் சுரப்பை முற்றாகத் தடைசெய்யும். ஏனெனில் மாத்திரை கருமுட்டை உருவாக விடாது. மாத்திரையை பயன்படுத்துமுன்பு நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து விட்டீர்கள் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏனெனில் மாத்திரை பாவிக்க ஆரம்பித்தால் வளர்ச்சிக்கு நிரந்தர முற்று ஏற்பட்டுவிடுகிறது.

மாதவிடாய் நாட்களில் தொடர்ந்தும் வயிற்றுவலி, வாந்தி, கண்ணொளி இருண்டும் வேறேதும் காரணங்களுக்காக இருப்பின் நரம்பு வைத்தியர் ஒருவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் ஒழுங்காக ஏற்படாவிட்டால்?

இது முதல் சில வருஷங்களுக்குச் சாதாரணமாகவே இருக்கும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மாதவிடாய் வருவது ஒழுங்கு முறைப்படி இல்லாவிட்டால் வைத்தியரின் ஆலோசனை பெறுவது நல்லது. அவர் ஒழுங்காக வரச் செய்வார். மூன்று மாதங்களுக்கு (கருத்தடை) மாத்திரைகளை உபயோகிக்க வேண்டியிருக்கும். இது எப்படி மாதவிடாயை ஒழுங்கு படுத்துகிறது என்றால் தினமும் ஒரு மாத்திரை வீதம் 23 நாட்களுக்குப் பயன்படுத்திய பின் ஐந்து தினங்களுக்கு மாத்திரையை உபயோகியாமல் இருக்க வேண்டும். அப்பொழுது மாதவிடாய் ஏற்படும். ஐந்துநாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாத்திரைப் பாவனையை ஆரம்பிக்க வேண்டும். இது உடலில் ஒரு சீரான அமைப்பை ஏற்படுத்துகிறது.

உங்கள் வளர்ச்சி முழுமையாகிவிட்டது என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட பின்பே மாத்திரையைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது வளர்ச்சியை நிரந்தரமாக நிறுத்தி விடும்.

சில நேரங்கள் வித்தியாசமான சமயங்களில மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணம் பெண்கள் சேர்ந்து இருக்கும் போது ஒரே அறையில் இருந்தால் ஒரே சமயத்தில் மாதவிடாய் ஏற்படுகிறது. மற்றவரின் மாதவிடாய் வரும் திகதி தெரியாதிருந்த போதிலும் அவர்களுடைய உடல்கள் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்துள்ளது போலுள்ளன.

எல்லாப் பெண்களும் தங்களுடைய மாதவிடாய்த் திகதியைக் கணக்கிட்டுக் கூற இயலுமா?

முடியாது.

சில பெண்கள் தமது முழுவாழ்நாளையும் ஆராய்ந்த போதிலும் சரியான மாதவிடாய் திகதியைக் கணித்துக் கொள்ள இயலாது இருக்கின்றனர். மாதவிடாய் வந்ததும் ஆம், இது வரவேண்டிய நாள் என்று கூறுகின்றனர். அப்படி வராவிட்டால் கர்ப்பமாகிவிட்டார் என்ற செய்தி வெளிவருகிறது. இதனால் பிரச்சினை ஏதும் ஏற்படுவதில்லை.

மாதவிடாய் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்டால்…..

அநேக பெண்களுக்கு முதல் நாள் அவ்வளவு கடுமையான போக்கு இராது. அதனால் உள்ளாடைகளில் படிவதில்லை. ஆனால் பெண்கள் ஒரு பாதுகாப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஒரு பட்டையை தம்முடன் வைத்திருக்க வேண்டும். அதனை தமது பாடசாலைப் பையில் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்ரிக் சுற்றப்பட்டது சிறந்தது. இல்லாது போனால் பாடசாலைப் பையில் பட்டை உருக்குலைந்துவிடும்.