Home பெண்கள் அழகு குறிப்பு பொடுகுப் பிரச்னை,பொடுகு நீக்க உதவும் ஷாம்பு

பொடுகுப் பிரச்னை,பொடுகு நீக்க உதவும் ஷாம்பு

24

76629a4b-3586-485e-a558-e298d808e60b_S_secvpf.gifஅலை அலையான அழகுக் கூந்தல் இருக்கும். என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல் செய்து கொண்டாலும் அழகு அள்ளும். ஆனாலும், வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். காரணம், பொடுகு! உடையில் உதிர்ந்து வெள்ளை வெள்ளையாகக் காட்சியளித்து சம்பந்தப்பட்டவரை தர்மசங்கடப்படுத்துவதுடன், அடுத்த வரையும் முகம் சுளிக்கச் செய்கிற பிரச்னை இது. பெரும்பாலான மனிதர்களின் மண்டைப்பகுதியில் Malassezia என்கிற ஒரு வகையான பூஞ்சை இருக்கும். சில நேரங்களில் இந்தப் பூஞ்சைத் தொற்று அளவு கடந்து வளரும் போது, பொடுகாக மாறுகிறது. சருமத்திலுள்ள செபேஷியஸ் சுரப்பிகளில் உற்பத்தியாகிற சீபம் என்கிற எண்ணெய்தான் பொடுகுக்குக் காரணமான பூஞ்சைகளின் விருப்ப உணவு.

இப்படி வளர்கிற பூஞ்சையானது மண்டைப் பகுதி சருமத்தின் உள்ளே ஊடுருவி, ஒருவித வீக்கத்துக்கும், செதில் செதிலாக செல்கள் உதிர்வதற்கும் காரணமாகின்றன.செபோரியா என்கிற சருமப் பிரச்னையின் வெளிப்பாடாகவும் சிலருக்கு பொடுகு தோன்றலாம். இது அரிப்புடன் கூடிய செதில்களை உருவாக்கும். இந்த செதில்கள் அதிகமாகும்போது அவற்றை நாம் பொடுகு என்கிறோம். புருவங்கள், நெற்றி, காது மடல்கள், மூக்கு மற்றும் உதடுகளைச் சுற்றிய பகுதிகளிலும் சிவந்த தடிப்புகள் காணப்படும். இந்தப் பகுதிகள் மிகவும் வறண்டு காணப்படும்.

மண்டைப் பகுதி முழுவதும் வறண்டு, 2 நாட்களுக்கும் மேலாக அரிப்பு நீடித்தால் பொடுகுப் பிரச்னை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக அர்த்தம். பொடுகுப் பிரச்னையை குணப்படுத்திவிட முடியும் என்பது நல்ல செய்தி. ஆரம்ப நிலை பொடுகுக்கு வாரம் 2 முறை தலையில் தயிரைத் தடவிக் கொண்டு, மிக மைல்டான ஆன்ட்டி டான்டிராஃப் ஷாம்புவால் தலை குளித்தாலே போதுமானது. உள்ளுக்கும் ஒரு கப் தயிர் சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும். கூந்தல் பிரச்னைகளுக்குக் காரணமான மிக முக்கியமான ஒரு இன்ஃபெக்‌ஷன் Tinea Capitus.

இது வீங்கி, செதில்களாகக் காணப்படும். கூந்தல் உடைந்து, பூஞ்சைத் தொற்றும் இடங்களில் உள்ள முடி உதிர ஆரம்பிக்கும். பூஞ்சைத் தொற்றானது மிக மிதமானதாக இருந்தால் சிகிச்சையின்றியே குணப்படுத்திவிடலாம். மண்டைப் பகுதியில் செதில் செதிலாகக் காட்சியளித்தால், அது பிரச்னைக்கான அறிகுறி. கூடவே தாங்க முடியாத அரிப்பு, திடீர் முடி உதிர்வு, மண்டைப் பகுதியில் திட்டுத்திட்டான சொட்டைப் பகுதிகள் போன்றவையும் சேர்ந்து கொண்டால், உடனடியாக ட்ரைகாலஜிஸ்டை சந்திக்க வேண்டியது அவசியம்.

Scalp seborrhea என்கிற பிரச்னை நிரந்தர முடி இழப்பை ஏற்படுத்துமோ எனப் பயப்பட வேண்டியதில்லை. இந்தப் பிரச்னை பிறந்த குழந்தைகளைக் கூடப் பாதிக்கும். பிறந்த சில மாதங்கள் வரை நீடிக்கும். அது குழந்தைகளின் மண்டைப் பகுதியைக் கூடப் பாதிக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படுகிற பொடுகுப் பிரச்னைக்கு Cradle cap என்றே பெயர். பிறந்த குழந்தையின் மண்டையில் இப்படியொரு பிரச்னையைப் பார்க்கிற எந்தப் பெற்றோருக்கும் கவலையும் வருத்தமும் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அவர்களது பயம் அனாவசியமானது. குழந்தைக்கு உண்டாகிறஇந்த வகைப் பொடுகு, அவர்களது 3 வயதுக்குள் தானாகச் சரியாகி விடும்.

சிலருக்கு மரபுரீதியாகவே பொடுகுப் பிரச்னை தொடரலாம். அபூர்வமாக சிலருக்கு அவர்கள் கூந்தலுக்கு உபயோகிக்கிற கெமிக்கல் கலந்த தயாரிப்புகளின் விளைவாக ஒவ்வாமை காரணமாகவும் பொடுகு வரலாம். தட்பவெப்ப நிலையும், அதிகப்படியான வியர்வையும் கூட இதற்குக் காரணங்களாக சொல்லப்படுகின்றன.

சில தகவல்கள்

மண்டைப் பகுதியில் உள்ள சருமமானது அளவுக்கதிகமாக உரிவதன் விளைவாகவே பொடுகு ஏற்படுகிறது.தலைக்கு சரியான ஷாம்பு உபயோகித்துக் குளிக்காதபோது, ஏற்கனவே உள்ள பொடுகானது, தேங்கிப் பெருக ஆரம்பிக்கும். மண்டைப் பகுதி தொடர்பான வேறு சில பிரச்னைகளின் காரணமாகவும் பொடுகு வரலாம்.மன அழுத்தம் அதிகமாக இருந்தாலோ, உடல்நலமில்லாத போதோ கூட பொடுகு அதிகரிக்கும். அதிகப்படியான குளிர் மற்றும் வறட்சியும் கூட பொடுகை உருவாக்கும்.

மண்டைப் பகுதியை அதீத சுத்தமாகவைத்துக் கொள்வதன் மூலம் பொடுகு வராமல் காக்கலாம். அடிக்கடி தலை குளிக்காதவர்களுக்கு மண்டைப்பகுதியில் தூசு, அழுக்கு, எண்ணெய் பசை, இறந்த செல்கள் என எல்லாம் சேர்ந்து பொடுகை அதிகரிக்கச் செய்யும். ட்ரைகாலஜிஸ்ட் ஆலோசனையின் பேரில் ஆன்ட்டிஃபங்கல் க்ரீம்களைஉபயோகிக்கலாம். அது மண்டைப்பகுதியில் வசிக்கிற ஈஸ்ட் தொற்றைக் கட்டுப்படுத்தி, பொடுகையும் கட்டுப்படுத்தும்.