Home பாலியல் இதுவும் தப்பில்லை – சுய இன்பம் ஒரு குற்றமல்ல

இதுவும் தப்பில்லை – சுய இன்பம் ஒரு குற்றமல்ல

37

open-uri20130417-21272-13lscyeஒரு பொண்ணோட அந்தரங்கமான விசயங்கள பத்தி பேசணும்னு நினச்சாலே அதெல்லாம் ரொம்பப் பெரிய தப்புன்னு கூச்சல் போடுற சமூகம் நம்மோடது. இந்த சூழ்நிலைல நான் ரொம்ப நாளாவே நான் பேசணும்னு நினைக்குற ஒரு தலைப்பு இது. சுய இன்பம் பற்றினது. இத வெளிப்படையா பேச இன்னும் இந்த சமூகம் ஒத்துக்குதான்னு தெரியல. ஆனா, அத பத்தி பேசிடலாம்னு இப்ப முடிவு பண்ணிட்டேன்.

அப்ப தான் நான் கல்லூரி முதல் வருடம் சேர்ந்துருந்தேன். கொஞ்ச நாள்லயே அங்க இருக்குற ரெட் ரிப்பன் க்ளப் உறுப்பினரா சேர்ந்தேன். தீவிர உறுப்பினர்கள்ங்குற முறைல எங்களுக்கு பல்கலைக்கழகத்துல வச்சு ஒரு கூட்டம் போட்டாங்க. அந்த கூட்டத்துல ஒரு துண்டு சீட்டு குடுத்தாங்க. பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துறது எப்படின்னும் சுய இன்பம் பாவமல்லன்னும் சொல்லி அதுக்கான விளக்கமும் குடுத்துருந்தாங்க. அந்த வயசுல அத பத்தின எந்த எதிர்பார்ப்பும் இல்ல, தெரிஞ்சுக்கணும்னு ஆவலும் இல்ல, அவசியமும் இல்ல. ஆனா அந்த விஷயம் தப்பில்லன்னு மட்டும் மனசுக்குள்ள பட்டுச்சு.

அதுக்கப்புறமா எனக்கு வந்த சில உடல்நிலை பாதிப்புனால மாதவிடாய் பிரச்சனை நிறையவே வந்துச்சு. வயித்த கிழிக்குற மாதிரியான வலி. அப்படியே கத்திய எடுத்து வயித்த கிழிச்சு போட்டுட்டா என்னன்னு தோணும். மாசக் கணக்குல ரெத்தப்போக்கு நீடிக்கும். நடக்கவே முடியாம தலைசுத்தி படுக்கைலயே விழுந்து கிடப்பேன். அப்படி எனக்கு என்னதான் பிரச்சனைன்னு பாத்தா, எல்லாமே சரியா இருக்குன்னு தான் மருத்துவமனை அறிக்கைகள் காட்டும். கர்ப்பப்பை முதற்கொண்டு சூல்ப்பை வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். தைராய்டு அளவுகள பாத்தா அதுவும் பிரச்சனைக்குரியதா இல்ல.

ஆனா மாதவிடாய் ஆரம்பிச்ச ரெண்டாவது நாள் பிரசவ வலி மாதிரியான ஒரு வலி உடம்பு முழுக்க பரவ ஆரம்பிக்கும். சுண்டுவிரல் அளவிலான ஒரு சதைப் பகுதி அறுந்துகிட்டு வெளில வந்தா மட்டும் தான் வலி குறைய ஆரம்பிக்கும். அந்த நான் ரொம்ப பயந்து போயிருந்தேன். இதென்ன கர்ப்பப்பை கிழிச்சு வெளில வருதோன்னு. அப்புறம் தான் என் அம்மா, சித்தி, பாட்டி எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்குறது தெரிய வந்துச்சு. அந்த சதைப் பகுதிய எடுத்து டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க பிரசவம் ஆனவங்களுக்கு தான இப்படி வரும், உனக்கு ஏன் இப்படி வருதுன்னு என் கிட்டயே திருப்பி கேப்பாங்க. அவங்க தான் இன்னொரு டாக்டர போய் பார்க்க சொன்னாங்க.

அவர் ஸ்கேன் எல்லாம் எடுத்து பாத்துட்டு, கர்ப்பபைல கருப்பை உச்சளிப் படலத்தோட (Endometrium) அடர்த்தி அதிகமா இருக்கு, ஹார்மோன் அளவு கம்மியா இருக்கு, நீ சுய இன்பம் பண்ண மாட்டியான்னு கேட்டாங்க. “இல்ல மாட்டேன், எனக்கு அப்படினா என்னன்னு கூட சரியா தெரியாது, அதுல இஷ்டமும் இல்ல”ன்னு சொன்னதும், அம்மாவ கூப்ட்டு பொண்ணுக்கு சொல்லிக் குடுங்க, இல்லனா சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க.

மாதவிடாய் பிரச்சனை வர பல காரணங்கள் இருக்கலாம், அந்த காரணங்கள்ல இதுவும் ஒண்ணாம். அந்தந்த வயசுல அனுபவிக்க வேண்டியத அந்தந்த வயசுல அனுபவிக்கணும்ன்னு இதுக்கு தான் சொல்லியிருக்காங்க போல. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணி வைக்குறதும் இதுக்குதான். ஆனா, எல்லாராலும் நினச்ச மாதிரி கல்யாணமும் பண்ண முடியாது. எல்லோருக்கும் வெற்றிகரமான வாழ்க்கை அமைஞ்சுடுறதும் இல்ல. சரியான வாழ்க்கைக்கு சரியான வாழ்க்கை துணை அவசியம். அப்படி அமையாத பட்சத்துல சுய இன்பம் தப்பில்ல – இது என் அம்மா எனக்கு கத்துக் குடுத்தது.

இத பத்தி நான் எழுதணும்னு முடிவு எடுத்த உடனே இணையத்துல என் மாதிரியான அனுபவம் உள்ளவங்க இருக்காங்களான்னு தேடித் பாத்தேன். ரொக்சனா பென்னெட்ங்குற பெண் இந்த கருப்பை உச்சளிப் படலத்தோட பிரச்சனைனால எவ்வளவு தூரம் பாதிப்புக்கு உள்ளானாங்க, அவங்களால ஏன் இயற்கை உடலுறவு பண்ண முடியாம போச்சு, எதனால அவங்களுக்கு சுய இன்பம் அவசியமாச்சுன்னு சொல்லியிருக்காங்க. ஹார்மோன் சுரப்பு சரியில்லாதவங்க, எதிர்பாலினம் மேல ஈர்ப்பு இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை சர்வ சாதாரணமா வந்துடுது. அப்படியும் இல்லையா, சில நோய்களுக்கு மருந்து எடுக்கும் போது பக்க விளைவுகளாவும் வந்துடுது.

இந்த இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) வந்துடுச்சுனா, கல்யாணம் ஆகி குழந்தை உள்ள பெண்களா இருந்தா கர்ப்பப்பைய நீக்குறது தான் நிரந்தரத் தீர்வு. கல்யாணம் ஆகாத பெண்களா இருந்தா, அறுவை சிகிச்சை மூலமா இந்த கருப்பை உச்சளிப் படலத்த நீக்குறாங்க. அப்படி பண்ணினா ரெண்டுல இருந்து மூணு வருஷம் வரைக்கும் இந்த பிரச்சனை திரும்பி வராம இருக்கும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனாலும் அதுக்கு எந்த உத்தரவாதமும் குடுக்க முடியாது. இப்படி வலியும் வேதனையுமா அவஸ்தைப்படுறதுக்கு பேசாம சுய இன்பம் பண்ணிட்டு போய்டலாம். ஓரளவு இந்த பிரச்சனைல இருந்து தப்பிச்சிரவும் செய்யலாம்.
………………………………………….

சரி, முன்னப் பாத்தது உடல் ரீதியான பிரச்சனை. இதுல மனரீதியான பிரச்சனைகள் என்னென்ன வரும்?

பாலியல் உணர்வுங்குறது எல்லாராலும் சுலபமா கடந்து வர முடியாத விஷயம். இந்த உணர்வுகள் இல்லாத உயிரினமே கிடையாதுங்குறப்ப இத பத்தி பேச மட்டும் ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியல. ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இந்த உணர்வு இயற்கையானது. அடுத்தவங்கள குறை சொல்லிட்டு இருக்குறவங்க தனக்கும் இந்த உணர்ச்சிகள் இருக்கும், அதையும் தான் பூர்த்தி செய்துட்டுதான் இருக்கோம்ங்குறத ஏனோ சுலபமா மறந்துடுறாங்க. சுய இன்பம்ங்குற வார்த்தைய கேட்டாலே முகம் சுளிக்குற எல்லாருக்குமே கலவி தேவையா தான் இருக்கு. வித்யாசம் என்னன்னா, அவங்களுக்கு ஒண்ணு அவங்களோட பாலியல் ஆசை நிறைவேற வழி இருக்கு, அதனால அத பூர்த்தி செய்ய முடியாதவங்கள பாத்தா என்னமோ தீண்டத்தகாதவங்கள பாக்குற மாதிரி தோணுறது, இன்னொரு வகை மனுசங்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள நிறைவேற்ற வழி இருந்திருக்காது, அதனால அடுத்தவங்கள திருத்துறேன்ங்குற பெயர்ல அவங்களே வார்த்தை பலாத்காரம் செய்துகிடுவாங்க. ஒரு பொதுவான விசயத்த, அதாவது நாம பண்ற விசயத்த அடுத்தவங்க பண்ணினா ஐயோ அம்மா, தப்புன்னு குதிக்குரத முதல்ல நிறுத்தினாலே போதும்.

ஆண்கள பொருத்தவரைக்கும் இந்த உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியாதவங்க தான் தீவிர விளிம்புநிலைக்கு போய் அஞ்சு வயசு பொண்ணுன்னு கூட பாக்காம தூக்கிட்டு போய் கற்பழிக்குறான். ஐம்பது வயசு பெரியம்மாவையும் நாசம் பண்றான். நாம இங்க உக்காந்து அவனோட அத வெட்டணும், இத வெட்டணும், அவன் வீட்டு பொம்பளைங்கள இப்படி செய்தா தான் அவனுக்கு புத்தி வரும்னு நம்ம மனசுல இருக்குற வக்கிரங்கள கொட்டிகிட்டு இருக்கோம். யாராவது ஒருத்தர் அவன் இப்படி பண்ணக் காரணம் என்ன, அவன் மனசுல படிஞ்சு இருக்குற அழுக்க நீக்க நாம என்ன செய்துருக்கோம்ன்னு யோசிச்சிருக்காங்களா? சரி, அதெல்லாம் விடுங்க, கற்பழிக்கப்படுற பொண்ணையும் சேர்த்து இன்னும் இன்னும் கற்பழித்தவன் வீட்டு பெண்களும் வார்த்தை கற்பழிப்பு செய்யப்படுவாங்க நம்ம சமூகத்துல. இதெல்லாம் ரொம்ப தெளிவா கூச்சமே இல்லாம செய்வோம், ஆனா இந்த மாதிரியான பாலியல் உணர்வு தப்பு இல்லன்னும் அத எப்படி கட்டுப்படுத்துறதுன்னும் சொல்லிக் குடுக்க மட்டும் தயங்குவோம். கேட்டா அதப் பத்தி பேசினா அசிங்கமாம், ஆபாசமாம். சொல்லிக் குடுக்கலாம் தானே நம்ம வீட்டு பசங்களுக்கு, இந்த பாலியல் உணர்வு இயற்கையானது. உன்னால கட்டுப்படுத்த முடியலனா சுய இன்பம் பண்ணிட்டுப் போ, எந்த பொண்ணையும் நாசம் பண்ணாதன்னு.

இந்த விசயத்த இன்னும் கொஞ்சம் ஆழமா போய் உணர்வு ரீதியா பாத்தோம்னா, ஆண்களை போல தான் பெண்களுக்கும் இந்த பாலியல் ஆசைகள் இருக்கு. சில நேரத்துல எதோ ஒரு காட்சி, இல்லனா நினைவு மனசுக்குள்ள பாலியல் ஆசைய தூண்டி விடும். அத அடக்கி வச்சுட்டு அடுத்த வேலைய பாத்துட்டு இருந்தா, அத பத்தின நியாபகத்துலயே சகஜமா இருக்க முடியாது. பதற்றம், பயம், கோபம் விரக்தி எல்லாம் இதுனாலேயும் தான் வருது. ஆண்கள் எப்படி அடக்க முடியாத காமத்த கற்பழிப்புல காட்டுறாங்களோ, அப்படி பெண்கள் தங்களோட பாலியல் ஆசை நிறைவேறாத தருணங்கள கோபத்துல காட்டுறாங்க. எதைப் பாத்தாலும் கோபம், என்ன செய்தாலும் கோபம். இதனால அவங்கள சார்ந்து உள்ளவங்க தான் பாதிக்கப்படுறாங்க. இந்த மாதிரியான ஆசைகள உள்ளயே வச்சுட்டு கோபமும் பதற்றமுமா திரியுறது பதிலா அடுத்தவங்கள பாதிக்காத, அடிமையாகாத, எல்லை மீறாத மாற்று வழி தப்பே இல்ல. சுய இன்பம் பண்ணி முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம்.

ரொம்ப சமீபத்துல முகநூல்ல ஒரு சண்டைய பாத்தேன். ஒரு ஆணும் பெண்ணும் அசிங்க அசிங்கமா திட்டி மாத்தி மாத்தி நிலைத் தகவல் போட்டுகிட்டே இருந்தாங்க. பாக்குறதுக்கே அத்தன அருவெறுப்பு. ஒருத்தர் மேல இன்னொருத்தர் சேறை வாரி இறைஞ்சதோட இல்லாம, அவங்கவங்க குடும்பத்து பெண்களையும் வார்த்தை கற்பழிப்பு செய்துட்டு இருந்தாங்க. இத எல்லாம் வேடிக்கைப் பாத்தவங்க அதுக்கும் மேல. அந்த ஆள தூண்டி விட கொஞ்ச பேர், இந்த பொண்ணை தூண்டி விட கொஞ்ச பேர். அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்ததன்னு அந்த பொண்ணுக்கு சொல்ல யாரும் இல்ல. எல்லாருமே விடாதீங்க, நாங்க இருக்கோம்ன்னு உசுப்பேத்திட்டு இருந்தாங்க. அதுவே அந்த பொண்ணுக்கு பெரிய பிரச்சனைன்னு வந்தா ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சு, தனியா அந்த பக்கம் போய் இன்னொரு பொண்ணை பத்தி பேசிட்டு இருப்பாங்கங்குறது தான் நிதர்சனமான உண்மை. கெட்ட கெட்ட வார்த்தை ப்ரயோகத்துக்கு வக்காலத்து வாங்குறவங்க, உணர்வுப்பூர்வமா விளக்கம் குடுக்க நினச்சா ஆபாசம்னு சொல்லுவாங்க.

இப்படி இந்த நிறைவேறாத பாலியல் ஆசைகளால ஆண்கள நம்பி ஏமாந்து போற பெண்கள் எத்தனையோ பேர். ஆண்களும் சரி, பெண்களும் சரி, மாறிப் போன காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய இணையத்த பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதேநேரம் இன்றைய சூழ்நிலைல இந்த மாதிரி வேறு ஆண்களோட உறவு வைக்குற பெண்கள் அவங்களுக்கே தெரியாம பல விதத்துல பலருக்கும் பயன்படுறாங்க. அலைபேசி மூலமா நம்பிக்கையான ஒருத்தன் கூட தான் பாலியல் பேச்சுகள் வச்சுக்குறோம்ன்னு நினச்சா அவன் அந்த பக்கம் சத்தமா போட்டு அவ பேசிட்டு இருக்குறத நண்பர்கள் கூட உக்காந்து கூட்டமா கேட்டுட்டு இருப்பான். அத பதிவு செய்து இணையத்துல உலவ விடுவான். அதுக்கப்புறம் அந்த பெண்ணோட நிலைய நினைச்சுக் கூட பாக்க முடியாது. அத்தனை பேரும் அவங்கவங்க நிலை மறந்து அந்த பெண் மட்டுமே தப்பு செய்தவள்ன்னு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. வார்த்தை பலாத்காரம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. கேலிகளும் கிண்டல்களுக்கும் நக்கல்களுக்கும் குறைவே இருக்காது. அதே மாதிரி தான் இணையத்துல முகநூல், ஜி-டாக் வகையறாக்களும். உள்டப்பியில பதிவு செய்யப்படுற வார்த்தை பிரயோகங்கள் அப்படி அப்படியே எத்தனை பேருக்கு வெட்டி ஒட்டப்படும்ன்னு சொல்ல முடியாது. இன்னும் விதவிதமான பிரச்சனைகள சந்திச்சவங்க எத்தனையோ பேரு.

எல்லாம் சரியா போயிட்டு இருக்குற வரைக்கும் தப்பில்ல, ஆனா பிரச்சனைன்னு வந்துட்டா பதிவு செய்யப்பட்ட பாலியல் பேச்சுகளும், பாலியல் உரையாடல்களும் (sex chatting) மிரட்டுறதுக்கு பயன்படும். பெண்கள் நிம்மதிய, வாழ்க்கைய தொலைக்குறது இந்த மாதிரி நேரங்கள்ல தான். ஒண்ணு அந்த பெண் விருப்பமே இல்லாம அவங்க மிரட்டலுக்கு பணிஞ்சு போகணும், இல்லனா தங்களோட வாழ்க்கைய முடிச்சுக்கணும். குடும்பத்த எதிர்க்கொள்ள முடியாம, மான அவமானம் தாங்க முடியாம இந்த மிரட்டல் தற்கொலைல வந்து முடிய வேண்டியதா இருக்கு.

உனக்கெதுக்கு இந்த அக்கறை, யாருக்குமே இல்லாத அக்கறைன்னு கேள்விகள் கேட்டா, பெண் என்பவள் வெறும் போதை பொருள் இல்ல, எல்லாரையும் போல் சிந்திக்கவும், சுதந்திரமா இருக்கவும் அவளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமைய புரிய வச்சுட்டாலே குற்றவுணர்ச்சில இருந்து அவ தப்பிச்சிடுவா. அதுவும் இல்லாம கல்யாணம் ஆகி கணவனை இழந்தவங்க, கணவனை பிரிஞ்சி இருக்குறவங்க, சந்தர்ப்ப சூழ்நிலையான கல்யாணம் ஆகாதவங்க, குடும்ப பிரச்சனைகள்ல ரொம்ப பெரிய மன அழுத்தத்துல இருக்குற பெண்களுக்கு இது பெரிய ஆறுதல். உடனே எல்லா பெண்களும் சுய இன்பம் பண்ணனும்னு சொல்றீங்க, அதெப்படி நீங்க சொல்லலாம்னு சண்டைக்கு வந்துடாதீங்க, நான் எல்லாரும் கண்டிப்பா சுய இன்பம் பண்ணனும்னு சொல்லவே இல்ல. அதே நேரம், அப்படி பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா தப்பில்லன்னு தான் சொல்ல வரேன். அதென்னவோ கொலை குற்றம் பண்ற மாதிரி கூனி குறுகி போக வேண்டிய அவசியம் இல்லன்னு தான் திரும்ப திரும்ப சொல்ல வரேன்.