Home சூடான செய்திகள் மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

24

எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி.

மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது.

அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களும் முத்தமிடுபவர்களாக இருந்திருப்பார்கள்.

எல்லா மிருகங்களும் முத்தமிடாதது ஏன் என்பதை ஆராய்ந்தால், ஏன் சிலர் மட்டும் முத்தமிடுகிறார்கள் என்பது விளங்கும்.

முத்தமிடுதல் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 168 பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

வெறும் 46 பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்களே காதலைத் தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள்.

மனிதர்கள் அனைவருமே முத்தமிடுகிறார்கள் என்ற எண்ணத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்திருக்கிறது.

முந்தைய ஆய்வுகளில் 90 சதவீதம் பேர் முத்தமிடுவதாகத் தெரியவந்தது. ஆனால், இந்தப் புதிய ஆய்வில், பெற்றோர் குழந்தைகளை முத்தமிடுவது போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக்கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

பெரும்பாலான வேட்டைச் சமூகங்களில் இம்மாதிரி முத்தம் என்பதே கிடையாது. அம்மாதிரி விருப்பமும்கூட அவர்களுக்குக் கிடையாது. பிரேசிலில் இருக்கும் மஹினகு என்ற இனத்தினர் முத்தமிடுதலை மிக மோசமான செயலாகக் கருதுகிறார்கள்.

நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இப்போதும் வாழ்வது இப்படியான வேட்டைச் சமூகங்கள்தான். ஆகவே, நம் மூதாதையர்களும் முத்தமிட்டிருக்காமல் இருந்திருக்கக்கூடும்.

முத்தமிடுவது எல்லா மனிதர்களிடமுமே இருக்கும் வழக்கம் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு புரட்டிப்போட்டிருக்கிறது என்கிறார் லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான்கோவியாக் தெரிவித்திருக்கிறார்.

நாம் இப்போது முத்தமிடுவதைப் போல முத்தமிடுவது என்பது ரொம்பவுமே சமீபத்திய பழக்கம்போலத் தெரிகிறது என்கிறார் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஃபேல் வ்லோடார்ஸ்கி. முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை ஆராய்வதற்காக அவர் பல ஆவணங்களை ஆராய்ந்தார்.

3,500 வருடங்களுக்கு முந்தைய, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரின் ஆன்மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், எகிப்திய சித்திர எழுத்துகளில் ஆட்கள் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதே தவிர, உதட்டோடு முத்தமிடும் காட்சிகள் இல்லை.

மிருகங்கள் முத்தமிடுகின்றனவா?
மிருகங்களைப் பொருத்தவரை, பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிம்பன்ஸி, பொனபோ போன்ற குரங்குகள் முத்தமிடுகின்றன.

ஆனால், சிம்பன்ஸிகளைப் பொறுத்தவரை முத்தமிடுவது என்பது, ஒரு சமாதான நடவடிக்கை. பெண்களைவிட ஆண் சிம்பன்ஸிகளிடம்தான் இது அதிகம் இருக்கிறது. ஆக, இந்த முத்தம் என்பது காதல், பாலுறவு சார்ந்த முத்தமில்லை.

பொனபோ மனிதக் குரங்குகள் இன்னும் அதிகமாக முத்தமிடுகின்றன. தவிர, அவை நாக்குகளையும் அதற்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றன. காரணம் அந்தக் குரங்குகள், பாலுறவில் அதிக நாட்டமுடையவை.

இரண்டு மனிதர்கள் சந்தித்துக்கொண்டால் கைகொடுத்துக் கொள்வதைப் போல இரண்டு பொனபோக்கள் சந்தித்தால், உடனே பாலுறவு வைத்துக்கொள்ளும். ஆகவே, பாலுறவுக்கு முந்தைய நடவடிக்கையாக முத்தம் இருப்பதாகச் சொல்ல முடியாது.

சிம்பன்ஸி, பொனபோ ஆகிய இந்த இரண்டு மிருகங்களைத் தவிர, வேறு எந்த மிருகமும் முத்தமிடுவதில்லை. இவையும்கூட, முகத்தை அருகில் கொண்டு வருகின்றன, உதட்டால் தொட்டுக்கொள்கின்றன என்பதைத் தவிர, வேறு ஏதும் செய்வதில்லை.

மனிதர்களைப் பொறுத்தவரை வாசனையின் மூலம் துணையைப் பற்றி அறிவதில்லை. இருந்தபோதும், உடலிலிருந்து வரும் வாசனை இதில் முக்கியப் பங்கு வகிக்கவேசெய்கிறது.

2013ல் முத்தமிடுதல் குறித்து வ்லோடர்ஸ்கி விரிவாக ஆராய்ந்தார். ஒருவரை முத்தமிடும்போது, எது முக்கியம் எனப் பலரிடம் அவர் கேட்டார். அவர்களிடமிருந்துவரும் வாசனைதான் மிக முக்கியமான விஷயமாக இருந்தது.

கரடிகள் துணையை ஈர்க்க பெரோமோன் என்ற வாசனையை வெளியிடுவதைப் போல, ஆண்களின் வியர்வையிலும் அம்மாதிரியான வாசனை இருக்கிறது. பெண்கள் இந்த வாசனையை நுகரும்போது, அவர்களுடைய பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது.

ஆக மற்றொருவரின், வாசனையை உணர முத்தம் என்பது பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வழிமுறையாக இருக்கிறது.

ஆக, சரியான துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முத்தமிடுதலை விட்டுவிட்டு, வாசனையை நுகர்ந்து பார்த்து சேரலாம். சரியான துணையும்கூட கிடைக்கலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள்தான் சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.