Home பெண்கள் தாய்மை நலம் 3 ல் ஒரு பெண்ணுக்கு… இந்த பிரச்னை இருக்காம்! அதிர்ச்சி தகவல்

3 ல் ஒரு பெண்ணுக்கு… இந்த பிரச்னை இருக்காம்! அதிர்ச்சி தகவல்

102

கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்னைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்னையினால் மாதவிடாயின் போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.

சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது

திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுக்கும் போது இப்பிரச்னை தெரிய வருகிறது.

கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும்.

இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின் போது வலி இருக்கலாம்.

இத்திசுப்படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம்.

அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தைப் பெற்றுக் கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது. மதுப் பழக்கம் போன்றவையும் இப்பிரச்னைக்குக் காரணங்கள்.

பாதிக்கப்பட்டவர் கூறும் உடல் ரீதியான, மாதவிடாய் தொடர்பான அறிகுறிகள் மற்றும் தாம்பத்திய உறவில் வலி போன்றவை இப்பிரச்னையைக் கண்டறிய உதவும். நேரடி பரிசோதனையின் போது வயிற்றின் மிருதுத் தன்மை, சினைப்பை வீக்கம் போன்றவை மூலமும் கண்டுபிடிக்கலாம்.

ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகயும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியமில்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.

லேப்ராஸ்கோப்பி, லேப்ரோட்டமி, ஹிஸ்டரெக்டமி போன்ற அறுவை சிகிச்சைகள் இப்பிரச்னைக்குத் தீர்வாக இருக்கின்றன. லேப்ராஸ்கோப்பி மற்றும் லேப்ரோட்டமி கருப்பை அகப்படலத்துக்கான தேர்வாக இருந்தாலும் இது நிரந்தர குணமளிக்கக் கூடியது இல்லை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு தற்காலிகமாக அறிகுறிகள் இல்லாமல் செய்யக்கூடியவை.

ஹிஸ்டரெக்டமி மூலம் கருப்பை, சினைப்பை மற்றும் கருக்குழாயை நீக்குவதன் மூலமாக மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்க முடியும்.