Home ஜல்சா கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

39

shutterstock_135403295கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை
ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.

அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!

கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.

கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.

‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.

இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.