Home ஆரோக்கியம் வெயில் காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது…!

வெயில் காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது…!

28

எல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்ற விரும்புகிறார்கள். அதோடு மற்றவர்கள் அருகில் செல்லும்போது, தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

அப்படி அவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர வைத்துவிடுகிறது, வியர்வை.

கோடையில் இந்த வியர்வையால் ஏற்படும் தொல்லை மிக அதிகம். இப்போது உஷ்ணம் அதிகரிப்பதால் உடலில் இருந்து வியர்வை மிக அதிகமாக வெளியேறுகிறது.

அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நாற்றம் உருவாகிறது.

நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ என்பது சாதாரண வியர்வை சுரப்பிகள்.

இவை உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ என்ற வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி, செயல்படத் தொடங்குகின்றன.

மேற்கண்ட சுரப்பிகள் லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. பொதுவாக அதற்கு தனிப்பட்ட மணம் எதுவும் கிடையாது.

நமது சருமத்தில் இருக்கும் பலவகை பாக்டீரியாக்கள் அதோடு சேர்ந்து செயல்படும்போது, அது ஒரு ரசாயனப்பொருளாக மாறி, கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது.

அதோடு சேர்ந்து சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து மற்றவர்களை முகம் சுளிக்கவைக்கும் வாடை வீச காரணமாகிவிடுகிறது.

இந்த நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது?

அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து சருமத்தில் வெளிப்படும் வியர்வைத் திரவம் சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து செயல்படத் தொடங்குகின்றது.

பாக்டீரியாக்கள் அதில் சேருவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடைவீசாது.

அந்த பகுதிகளை சுத்தம் செய்ய சாதாரண சோப்புகளைவிட வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தவேண்டும். இந்த சோப் மருந்துகடைகளில் கிடைக்கும்.

வியர்வை வாடையை போக்க இரண்டு வகை டியோடரண்டுகள் உள்ளன.

ஒன்று: டாக்டரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை.

இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. இது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை இல்லாமல் செய்கிறது.

அதோடு நல்ல மணத்தை உருவாக்கக் கூடிய சில பொருட்களும் அதில் இருக்கின்றன. ஆனால் வியர்வை உற்பத்தியை குறைக்க இவற்றால் முடியாது.

இரண்டு: ஆன்டி பெர்ஸ்பிரண்ட் வகை. இது சிலவகை மருந்துகள் அடங்கிய கூட்டுக்கலவை.

இதில் இருக்கும் ரசாயனங்கள் வியர்வை கட்டமைப்போடு செயல்பட்டு சுரப்பிகளில் இருந்து திரவம் வெளியே வருவதை தடுக்கிறது.

ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் டியோடரண்டுகள் உள்ளன.

ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை உருவாகாது. அதனால் அவைகளை டிரை டியோடரண்ட் என்று அழைக்கிறோம்.

ஸ்டிக் வகையை சருமத்தில் இரண்டு மூன்று முறை சுற்றிலும் தேய்க்கவேண்டும். கிரீம் டியோடரண்டுகளை கை விரலை பயன்படுத்தி உடலில் பூசவேண்டும்.

ரோல் ஆன் பயன்படுத்தும்போது, முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவத்தை சருமத்தில் பூசுகிறது.

ஸ்பிரே டியோடரண்ட் பயன்படுத்தும்போது சருமத்தில் மிக நெருக்கமாக அதனை பயன்படுத்தவேண்டாம். சிறிது இடைவெளிவிட்டு பயன்படுத்தினால் போதும்.

10 முதல் 15 செ.மீட்டர் இடைவெளி தேவை. சருமத்தில் நெருக்கமாக வைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடலில் தீக்காயம் போன்று ஒருவகை காயம் சிலருக்கு உருவாகிவிடும்.

டியோடரண்டுகள் ரசாயன பொருட்களின் கலவைதான். அதில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜி ஏற்படக்கூடும்.

சொறி, சிவப்பு நிற திட்டு போன்றவை ஏற்பட்டால் அந்த பிராண்ட் டியோடரண்டை உபயோகிக்கவேண்டாம்.