Home ஆரோக்கியம் உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்

40

ஆண் அல்லது பெண், இருவரும் உடலை கட்டுகோப்புடன் வைத்து கொள்ளவே விரும்புகிறார்கள்.

உடல் பருமனாகி விட்டால் அதனை குறைக்க என்ன செய்யலாம்? என்று ஆலோசனையில் இறங்கி விடுகிறார்கள். உடல் பருமன் ஒருவருக்கு எதனால் வருகிறது? இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை தெரிந்து கொண்டால் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
குழந்தை கருவில் இருக்கும் போதும், பிறந்த பின்பும் சராசரி எடையுடன் இருக்க வேண்டும். பெரியவர்களுக்கு, அவர்கள் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். இதற்கு அதிகமான எடையுடன் இருந்தால் அதற்கு பெயர் தான் உடல் பருமன் என்பதாகும்.

இதனை பல பெரிய நோய்களை உண்டாக்கும் காரணிகளின் தொகுப்பாகவும் கூறலாம். கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் உணவு வகைகள், குறைந்த உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, ஜீன் மற்றும் ஹார்மோன் குறைபாடு போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படும்.

இந்தியாவில் உடல் பருமன் மற்றும் தொந்தி ஏற்படுவது இப்போது அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு ‘இது தான் காரணம்’ என்று மருத்துவர்களால் உறுதியாக குறிப்பிட்டு கூற இயலவில்லை. ஆனால் இதற்கான காரணிகள் எல்லாம் உடல் பருமனுக்கான காரணிகளுடன் சேர்ந்துள்ளன.

இதில் உடலின் நடுபகுதியில் அதிக ஊளைச்சதை போடுவதை முதல் காரணியாக கூறலாம். இது உடல் நடுவில் ஆப்பிள் போன்ற வடிவத்தில் காணப்படும். 2-வது இன்சுலினை உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையாகும். பாங்கிரியாஸ் என்ற கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினை பயன்படுத்து வதில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து இன்சுலினும் அதிகரிக்கிறது. கொழுப்பும் சேருகிறது.

மேலும் வயது, மரபணு, மனஅழுத்தம், உடற்பயிற்சி இன்மை போன்றவையும் ஒரு காரணமாக அமைகிறது. சில குடும்பங்களில் அடுத்தடுத்த வாரிசு குழந்தைகள் அனைவருமே குண்டாக இருப்பார்கள். உணவு உண்கிறார்களோ இல்லையோ, அவர்கள் உடல் எடை கூடுவது அதிகமாக இருக்கும். இதற்கு அவர்களின் மரபணுக்கள் இயற்கையிலேயே சக்தி குறைந்தவையாக இருப்பதே காரணமாகும்.

பொதுவாக உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடை தான். நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் அப்படியே உடலில் தங்கி விடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் எடை தான் பல்வேறு பிரச் சனைக்கு காரணமாகிறது. எனவே தான் உடல் பருமன் என்பதும் ஒரு நோயாக கரு தப்படுகிறது.

ரத்த அழுத்தம், இதய படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்த குறைபாடு, நீரிழிவு, மூட்டு வலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும். இதுவே பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
எண்ணெயில் பொரித்த உணவுகள், நொறுக்கு தீனி, இனிப்பு வகைகளை தவிர்ப்பது, மாவு சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுவது, மதுபானங்களை தவிர்ப்பது முக்கியமாகும். இத்தனையும் தாண்டி உடல் பருமன் ஏற்பட்டால் அதற்கு மருந்துகளால் மட்டுமே குறைக்க முடியும். அப்போது உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியமாகும்.

இதற்காக அளவுக்கு அதிகமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்க காரணமாகி விடும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும். 7 முதல் 8 சதவீதம் வரை எடையை குறைப்பது, 500 முதல் 1000 கலோரியை குறைத்து சாப்பிடுவது, ஒரு மணி நேரம் கையை வீசி நடப்பது, கொழுப்பை குறைக்கும் உணவு வகைகள், எடையை குறைக்கும் உணவு வகைகள் ஆகியவற்றுடன் தேவைப்பட்டால் கொழுப்பை குறைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகள் உப்பை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம். புகை பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும். இந்த நோய் பாதித்தவர்களுக்கு காலின் ரத்த ஓட்டம் குறைபடும்.

ஆயுர்வேத சிகிச்சைகள் :

ஆயுர்வேதத்தில் உணவை செரிக்கும் சக்திக்கு அக்னி, ஜாடராக்னி என்று பெயர். இந்த ஜாடராக்னி சரியாக வேலை செய்யாமல் மந்தமாக இருந்தால் உருவாகிற அன்னரசமானது ‘ஆமம்‘ என்ற நச்சுத்தன்மையை பெறுகிறது. சோம்பேறியாக படுத்துக் கொண்டிருப்பது, தயிர் சாப்பிடுவது, எப்போதும் தூங்குவது, பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவது ஆகியவற்றால் இந்த ரசமானது நீர் பதம் அடைந்து சரியான தாதுக்களாக உருவெடுக்காமல் கொழுப்பாக மாறி விடுகிறது.

இதனால் எலும்புகள், மஜ்ஜை போன்றவை ஆரோக்கிய மானதாக உருவாகாது. இவர்களுக்கு உடலில் அதிக வேர்வை ஏற்படுவதுடன் துர்நாற்றமும் காணப்படும்.
பெண்களுக்கு ஒழுங்கற்ற அல்லது சமநிலையற்ற மாதவிடாய் ஏற்பட தொடங்கும். இதனால் பெண்களுக்கு இயற்கையாக கருவுறும் நிலை பாதிக்கும். சில நேரம் கருவுறும் வாய்ப்பே இல்லாமல் போகும்.

இந்த நோயை தணிக்க குரு அபதர்ப்பணம் என்ற முறையில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் பசி அடங்க வேண்டும். அதே நேரம் அந்த உணவால் சர்க்கரையின் அளவு கூடக்கூடாது. இதற்கு சிறுதானிய உணவு வகைகள் மிகுந்த பலன்அளிக்கின்றன. அரிசியை குழைத்து வடிப்பதற்கு பதில் முக்கால் பாகம் வெந்தவுடன் வடிக்கவேண்டும்.

சம்பா, கேப்பை, கம்பு, பயறு, கேழ்வரகு போன்றவை மிக்க பலனளிக்கின்றன. கொள்ளுப் பொடியைத் தேய்த்துக் குளித்தல், தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகிறது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூரணம் 10 கிராம் எடுத்துத் தினமும் இரண்டு நேரம் தேனுடன் சேர்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். வேங்கையின் நடுப்பகுதியைக் கஷாயம் வைத்து 60 மி.லி. வீதம் எடுத்து, அதில் திரிபலா மாத்திரை 4 சேர்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மலையில் இருந்து உருகி வரும் 81 சத்துகளைக் கொண்ட பல்விக் ஆசிட் என்ற சிலாஜித், கொழுப்பை அகற்றுவதில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் லோகப் பஸ்பம், லோகாஸவம் போன்றவை கொழுப்பை அகற்றுகின்றன. கோரைக்கிழங்கு சூரணம் கொழுப்பை அகற்றுவதில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் கோரைக்கிழங்கு, கொட்டம், மஞ்சள், மரமஞ்சள், வசம்பு, அதிவிடயம், கடுகரோஹிணி, கொடுவேலி, ஆவில் என்ற புங்கம் வேர், கடுக்காய் எனும் கூட்டு சேர்ந்த லேகனீய கணம் மிகச் சிறப்பான மருந்து.

கொழுப்பைக் குறைப்பதில் குக்குலு மரத்தின் பிசின் சிறந்து விளங்குகிறது. வாயுவிடங்க சூரணம் 3 கிராம் இரண்டு நேரம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும். காலை வேளையில் குளிர்ந்த நீரில் தேன் சேர்த்துச் சாப்பிடுவதும் கொழுப்பைக் குறைக்கப் பயன் படுகிறது. சித்த மருத்துவத்தில் நத்தைச்சூரி சூரணம் என்ற மருந்து இதற்கு நல்ல பலனைத் தருகிறது. அளவைக் குறைத்துச் சாப்பிடுதல், பழங்களைச் சாப்பிடுதல், குறைந்த அளவில் நான்கைந்து முறையாகச் சாப்பி டுதல், மூச்சுப் பயிற்சி செய்தல், சூரிய நமஸ்காரம் செய்தல், நடைப்பயிற்சி போன்றவை நல்ல பலன் அளிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் நல்லெண்ணெய்க்கு, மெலிந் தவரை பருக்கச் செய்யும் தன்மையும், பருமனாக உள்ளவரை மெலியச் செய்யும் தன்மையும் உண்டு. திப்பிலி சேர்த்த நீர் மோர் தேவையற்ற கொழுப்பை அகற்றுவதில் தலைசிறந்து விளங்குகிறது.

எடையைக் குறைக்கும் கை மருந்துகள் :

முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை, மாலை சாப்பிடலாம். துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
சாப்பாட்டில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். இலந்தை மர இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடிக்கவும்.

சிறிதளவு கொள்ளைச் சுத்தம் செய்து ரசம் வைத்து, அதனுடன் இந்துப்பு (பாறை உப்பு) கலந்து தினமும் 3 வேளை குடித்து வரலாம். உடல் மெலிவதுடன் உடல் பலமும் அதிகமாகும். ஓமத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும். அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கித் தேனில் குழைத்துத் தினமும் சாப்பிட்டு வரலாம்.

கல்யாண முருங்கைப் பொடியைத் தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும். சிறிதளவு மோர், கேரட் ஆகியவற்றை அரைத்துத் தினமும் குடித்துவந்தால் உடல் இளைக்கும். வாழைத் தண்டுசாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில், ஏதாவது ஒன்றைக் குடித்துவர உடல் எடை குறையும்.