Home ஜல்சா சமூகவலை தளங்களில் கொட்டிகிடக்கும் அந்தரங்க தகவல்கள்

சமூகவலை தளங்களில் கொட்டிகிடக்கும் அந்தரங்க தகவல்கள்

44

நல்ல பழக்க வழக்கங்கள், செயல்கள் கசப்பு மருந்தை போன்றவை. கசப்பு மருந்தை யாரும் விரும்புவதில்லை; ஆனால் உடலுக்கு நல்லது. உண்மையே பேசவேண்டும் என்று உறுதி எடுத்து அதன்படி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து காட்டுவது சிரமம்.

கெட்ட விஷயங்கள்-பழக்கங்கள் இனிப்பு மருந்தை போன்றவை. அவை எளிதில் நம்மை ஒட்டிக்கொளம்.

சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்ததற்கு சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகை இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இந்த போன்கள் இல்லாத இளைய சமுதாயத்தை இப்போது பார்க்க முடியாது. பஸ், ரெயில் பயணங்கள், பூங்கா போன்ற பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் தலைகுனிந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு-தேடிக்கொண்டு இருப்பதை காணலாம். எங்கிருந்தபடியும் உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலம் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த வரப்பிரசாதம் இது.

அறிவுக்களஞ்சியமான இணையதளங்களில் எண்ணிலடங்கா தகவல்கள், படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. ஆனால் பலர் பாலுணர்வை தூண்டும் ஆபாச தளங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் செய்யும் சேட்டையால் சிறுவர்கள், விடலைப்பருவ பையன்கள், இளைஞர்கள் பலர் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் தூண்டப்படும் சிலர் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள், சிறுமிகள் என்றுகூட அந்த கயவர்கள் பார்ப்பது இல்லை.

சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாலியல் தொடர்பான விஷயங்களை பேசுவது, படிப்பது, படங்களை பார்ப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்று குதிரை கொம்பாக இருந்த விஷயம் இப்போது தண்ணீர்பட்ட பாடாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் கைங்கர்யத்தால் ஆபாசங்கள் இப்போது கைக்குள் வந்து, வயது வித்தியாசம் இன்றி எளிதாகிவிட்டது. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் மற்றவர்கள் அதிலேயே லயித்து விடுகிறார்கள். சிறுவர்கள் கூட ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டதால் சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக சமீப காலங்களில் அடிக்கடி வெளியாகும் செய்திகள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பிஞ்சிலே பழுத்தால் காய் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவைக்காது.

பாலியல் குற்றசெயல்களில் ஈடுபடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்துவதில் சட்டத்துக்கு மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது.