Home ஜல்சா பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

26

பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றை படித்த ஒரு பெண், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார்.
பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது.

சில நாட்களுக்கு முன்னர் “ஸ்டெல்த்திங்” (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிபிசி வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது “ஸ்டெல்த்திங்” என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறாவிட்டாலும், இது பாலியல் வல்லுறவுக்கு ஈடானது என்றும், அனைவருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், இது போன்ற செயல்கள் அதிகரித்துவருவதாக அமெரிக்காவில் ஓர் அறிக்கை வெளியானதை அடுத்து இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.

நான் பாதிக்கப்பட்டேன்
பொதுவாக “ஸ்டெல்த்திங்” பற்றி வெளியில் யாரும் அதிகமாக பேசுவதில்லை. இதன் விளைவுகளையும் பெரிய அளவில் அறிந்திருப்பதில்லை. ஏனெனில் பரஸ்பரம் இருவரும் ஒப்புக்கொண்டுதான் உறவில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், பிபிசியின் இந்தக் கட்டுரையை படித்த லூயிஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 22 வயது பெண், கட்டுரையை படித்த பிறகுதான், தான் பாலியல் ரீதியாக வல்லுறவுக்கு உள்ளானதையும், இது சட்டரீதியாக குற்றம் என்றும் தெரிந்துக் கொண்டதாக கூறினார்.

தன்னுடன் உறவு கொண்ட நபர் ஆணுறையை கழற்றிவிட்டதை, அது கீழே கிடந்ததை பார்த்துத் தான் தெரிந்து கொண்டதாக கூறும் லூயிசா, அதுபற்றி கேட்டதற்கு, வேண்டுமென்றே தான் ஆணுறையை கழற்றியதாக ஆண் நண்பர் தெரிவித்ததாக கூறினார்.
ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதை அவன் பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது என்ன பெரிய விசயம்? நம் இருவருக்கும் இடையே இது ஒரு பிரச்சனையில்லை என்று அவன் கூறினான். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தோழியிடம் இதுபற்றி பேசியபோது, கருத்தரிக்கும் அபாயத்தை தடுக்க உடனே அவள் என்னை மருந்து சாப்பிடுமாறு சொன்னாள்.

ஆபத்துகள்
“ஸ்டெல்த்திங்” என்னென்ன பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. இதில் எதுபோன்ற ஆபத்துகள் ஏற்படலாம் என்பது கூட யாருக்கும் சரியாக தெரிவதில்லை. இதன் விளைவுகள் பற்றி வெளிப்படையாக யோசிக்கவேண்டும்.
இது உங்கள் பாலியல் சுகாதாரத்தை பாதிக்கும். தேவையற்ற கர்ப்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பாலியல் நோய்கள் ஏற்படலாம். இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் ஆணுறை பயன்படுத்தப்படுவதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆணுறை அணிவது போல் பாசாங்கு செய்து, பிறகு பெண் அறியாமல் அதை கழற்றுவது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? பிறரின் உரிமையையும், உணர்வுகளையும் மதிக்காத ஆணவப்போக்கு இது.

அந்த ஆண் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்” என்று சட்டம் தெளிவாக சொல்வதாக, லண்டனில் உள்ள சட்ட ஆலோசனை நிறுவனம் கிங்ஸ்லி நெப்லேயில் பணிபுரியும் வழக்கறிஞர் சாண்ட்ரா பெளல் கூறுகிறார். இவர் பாலியல் குற்றங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
பரஸ்பரம் ஒப்புக்கொண்டதை வேண்டுமென்றே மீறுவதால் இது பாலியல் பலாத்காரத்திற்கு ஒப்பானது. பாலியல் கூட்டாளியின் அனுமதியில்லாமல், அவருக்கு தெரியாமல் வேண்டுமென்றே செய்யும் எந்த செயலும் பலாத்காரம்தான்.

பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?

“ஸ்டெல்த்திங்” தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் நீதிமன்றம் வரவில்லை என்றாலும், இதையொத்த வேறொரு வழக்குடன் ஒப்பிடலாம் என்கிறார் சாண்ட்ரா பெளல்.
கருவுறாமல் தவிர்ப்பதற்காக, விந்தை வெளியேற்றுவதற்கு முன்னர் இருவரும் பிரிந்துவிடவேண்டும் என்று பரஸ்பரம் ஒப்புக் கொண்ட நிலையில் ஆண் அதை மீறியதான வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு வந்தது. இது பாலியல் வல்லுறவுக்கு சம்மானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்று சாண்ட்ரா பெளல் கூறுகிறார்.
பாலியல் கூட்டாளியின் ஒப்புதல் இல்லாமல் செய்யும் எதுவும் தவறுதான் என்றும் அவர் கூறுகிறார். இதுபோன்ற புகார்கள் இருந்தால் காவல்துறையை அணுகலாம் என்று அமெரிக்க காவல் துறை அறிவுறுத்தியிருக்கிறது.