Home இரகசியகேள்வி-பதில் “கர்ப்பம்” சில சந்தேகங்களும் தீர்வுகளும்

“கர்ப்பம்” சில சந்தேகங்களும் தீர்வுகளும்

38

20 முதல் 30 வயது பருவம் கர்ப்பத்திற்கு ஏற்றது. நிரந்தர நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்களும் நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெண்களும் கர்ப்பமாக விரும்பினால் அதுபற்றி முதலில் தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடக்கவேண்டும்.

கர்ப்பமான உடன் டாக்டரை சந்திக்கவேண்டுமா?
ஆமாம் அந்த சந்திப்பு முக்கியமானது.ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதற்காக எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கைகளை டாக்டர் கூறுவார். அதன் மூலம் கர்ப்பகுழந்தை ஊனமாவதை தடுக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை முதலிலே சாப்பிடத் தொடங்கிவிடலாம்.

எப்போது பிரசவம் என்பதை கர்ப்பிணி எப்படி கணக்கிட வேண்டும்?
கடைசியாக எந்த நாளில் மாதவிலக்கு ஏற்பட்டதோ அதிலிருந்து 9 மாதம் 7 நாட்களை சேர்க்கவேண்டும். அதன்படி பிரசவ திகதி தெரியவரும் மாதந்தோறும் சரியான திகதியில் மாதவிலக்கு ஏற்படும் பெண்களுக்கு மட்டுமே இந்த கணிப்பு சரியாக இருக்கும். மாதவிலக்கு சீரற்ற நிலையில் வருகிறவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்யவேண்டும். கர்ப்பமான முதல் வாரத்தில் ஸ்கேனிங் செய்தால் சரியாக பிரசவ திகதியை கணிக்க முடியும்.

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின்பு கர்ப்பிணி தன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்?
குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருந்தால் கர்ப்பிணி இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். நிறைய தண்ணீர் பருகவேண்டும். சத்துணவுகளை ஒரே நேரமாக சாப்பிடலாம். இடைவெளி விட்டு நாலைந்து முறையாக உண்ண வேண்டும். தேவையான ஓய்வு தேவையான தூக்கம் மனஅமைதி போன்றவையும் அவசியம். டாக்டரின் ஆலோசனையின்றி எந்த மருத்தும் சாப்பிட்டு விடக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, உயர்ந்த குதிக்கால் செருப்புகளை அணியக்கூடாது,வறுத்த பொரித்தஉணவுகள் பொதிசெய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானம் பருகக்கூடாது. தொடர்ச்சியாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ளக்கூடாது. இவைகளில் எல்லாம் கர்ப்பிணிகள் கவனம் செலுத்தவேண்டும்.

கர்ப்பிணிகள் செல்போன் பயன்படுத்தலாமா?
செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. ஆனாலும் கர்ப்பிணிகள் செல்போனை குறைவாக பயன்படுத்துவது நல்லது.

கர்ப்பகால தாம்பத்தியம் பற்றி…?
கர்ப்பிணி விரும்பினால் பத்து மாதங்களும் பக்குவமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.பிரச்சினை ஏதேனும் இருந்தால் கர்ப்பமான முதல்மூன்று மாதங்களும் 32 வாரங்களுக்கு பிறகு இறுதிவரையும் தாம்பத்திய தொடர்பை தவிர்ப்பது நல்லது. இந்த கால கட்டங்களில் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் கிருமித்தொற்று கருச்சிதைவு, நிறைமாதம் ஆகும் முன்பே பிரசவ வலி முழுமையடையும் முன்பே ஆம்னியோட்டிக் திரவம் வெளியேறுதல் போன்ற நெருக்கடிகள் தோன்றலாம்.

கர்ப்பிணிகள் அதிக தூரம் விமான பயணம் மேற்கொள்ளலாமா?
மிக அதி உயரத்தில் அதிக நேரம் பூமத்திய ரேகை அருகில் விமானம் பறந்தால் காஸ்மிக் கதிர்களின் தாக்குதல் ஏற்படும். அதனால் விமானப் பணிப்பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும்போது அத்தகைய விமானங்களில் அவர்களை வேலை பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். மேலே செல்லச் செல்ல ஒட்சிசன் பற்றாக்குறையும் ஏற்படும்.இதை எல்லாம் கர்ப்பிணிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

முப்பது வயதுக்கு பிறகு முதல் கர்ப்பம் ஏற்படுவது சிரமமானதா?
ஆம் முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். கர்ப்பப்பையின் சுவர்களில் பைப்ரோய்டு பருக்களும் 30 வயதுக்கு பிறகு தோன்றுகிறது. இதனால் கர்ப்பமடைவது தாமதமாகும். பிரசவத்திலும் நெருக்கடிகள் உருவாகும்.

நிறைய பிள்ளைகள் பெற்ற தாயின் உடல் பலவீனமாவது உண்மையா?
உண்மை தான் பெண் அதிகமுறை கர்ப்பமடையும்போது அவளது கருப்பை தசை பலவீனமாகும். ஐந்து தடவையும் அதற்கு மேலும் கர்ப்பமான பெண்களின் கருப்பையின் இயல்பு மாறும். அதனால் பிரசவ நேரத்தில் சுயமாக குழந்தையின் தலை கீழ்நோக்கி வருவதில் தாமதமும் நெருக்கடியும் ஏற்படும். பிரசவத்திற்குப் பிறகு கருப்பை இயல்பாக சுருங்கி உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மையும் குறைவாக இருக்கும். இதனால் நிற்காத உதிரப்போக்கு உருவாகும். பிரசவ நேரத்தில் வலிபலமாக வரும்போது கர்ப்பப்பையின் பலவீனம் காரணமாக அதில் சிதைவு ஏற்பட்டுவிடவும் செய்யும். அதனால் அதிக குழந்தைகள் பெறுவது அன்னையின் உடலுக்கு நல்லதல்ல.

பிரசவத்திற்குப் பிறகு எப்போது மீண்டும் தாம்பத்யம் வைத்துக்கொள்ளலாம்?
பிரசவத்திற்குப் பிறகு கருப்பை சுருங்கி இயல்பு நிலைக்குவர ஆறு வாரங்கள் தேவைப்படும். அதற்கு பிறகு செக்ஸ் தொடர்பு வைத்துக்கொள்ளலாம். பிரசவத்திற்கு பிறகு சில பெண்களுக்கு ரத்தப்போக்கு நிற்கவும் லோக்கியா என்ற திரவம் வெளியேறுவது நிற்கவும் அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும்.இவை இரண்டும் முழுமையாக நின்ற பிறகே தாம்பத்திய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.