Home பாலியல் கள்ளப் புணர்வு – உங்களுக்கே தெரியாமல் உங்களை ஒருவர் வன்புணர்வு செய்ய முடியுமா?

கள்ளப் புணர்வு – உங்களுக்கே தெரியாமல் உங்களை ஒருவர் வன்புணர்வு செய்ய முடியுமா?

48

நெருக்கமான எந்த உறவுக்கும் அடிப்படை அன்பும் நம்பிக்கையும் மரியாதையும் தான்! இந்த மூன்று விஷயங்களே இருவருக்கு இடையிலான பாலுறவில் திருப்தி கிடைப்பதற்கு அடிப்படையாக உள்ளன. ஆனால் தற்காலத்தில் இதில் நடக்கும் அத்துமீறல் பிரபலமாகிவருகிறது.

கள்ளப் புணர்வு என்பது என்ன? (What is stealthing?)
ஆணுறை அணிந்திருக்கும் ஒரு ஆண் உடலுறவின்போது, பெண் இணையரின் சம்மதம் இல்லாமல், அவருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக ஆணுறையைக் கழற்றிவிட்டு உடலுறவில் ஈடுபடுவதை கள்ளப் புணர்வு என்கிறோம்.

இதனால் பாதிக்கப்படும் பெண் கர்ப்பமாகும் ஆபத்து மட்டுமின்றி, பால்வினை நோய்களை அடையும் ஆபத்தும் உள்ளது, இதனால் மிகுந்த உணர்வு சார்ந்த சிக்கல்களும், உடல் மற்றும் நிதி சார்ந்த இழப்பும் அவருக்கு ஏற்படலாம். இந்தக் காரணங்களால், இப்படிச் செய்வதை சில நிபுணர்கள் ‘கள்ள வன்புணர்வு’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது பாலியல் அத்துமீறலா? (Is stealthing a sexual assault?)
ஆம், இணையரின் சம்மதமின்றி, ஆணுறையைக் கழற்றிவிட்டு உறவில் ஈடுபடுவது ஒருவகை பாலியல் அத்துமீறலே. ஏனெனில் இதன் மூலம் பெண் சம்மதிக்காத ஒரு வகை உடலுறவை ஆண் நிறைவேற்றிக்கொள்கிறார்.

இதன் ஆபத்துகள் என்னென்ன? (What are the health risks associated with stealthing?)
ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளின் பட்டியலை UK-வின் தேசிய சுகாதாரச் சேவை அமைப்பு (NHS) வெளியிட்டுள்ளது. அதில் இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் அக்கி நோய், கிளாமிடியா நோய்த்தொற்று, கொனோரியா, இனப்பெருக்க உறுப்பில் தோன்றும் மருக்கள், HIV மற்றும் சிபிலிஸ் போன்ற பல நோய்கள் இடம்பெற்றுள்ளன.

NHS-இன் கூற்றுப்படி: “ஆணுறை அணியாத நிலையில், ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் முழுவதுமாக உள்ளே செல்லாவிட்டாலும், ஆண் விந்தை வெளியிடாவிட்டாலும் கூட, நோய்த்தொற்றுகள் பரவக்கூடும். ஏனெனில் விந்து வெளியேறுவதற்கு முன்பு ஆணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவங்களின் மூலமும் நோய்த்தொற்றுகள் பரவும். ”

ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் சிறிதளவு உள்ளே நுழைந்தாலும், இருவருக்கும் நோய்த்தொற்று வரும் ஆபத்து உள்ளது. ஆணுறை என்பது, எல்லாவகையான பால்வினை நோய்த்தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

எதிர்பாராத கர்ப்பம் உண்டாகவும் வாய்ப்புள்ளது. இதனால் ஆணுறையை தனக்கு தெரியாமல் ஆண் கழற்றிவிட்டு உடலுறவில் ஈடுபடும்போது எதிர்பாராத கர்ப்பம் ஏற்பட்டால், கருத்தடை சாதனமாக ஆணுறையை நம்பியிருக்கும் பெண்ணுக்கு, அது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக, நிதி ரீதியாகவும் பல்வேறு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.