Home பெண்கள் தாய்மை நலம் இயற்கையான சுகப்பிரசவம் சாத்தியமே

இயற்கையான சுகப்பிரசவம் சாத்தியமே

33

Captureஇந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது. சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும்.

இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும், குறிப்பாக இத்தகைய விருப்பம் உழைக்கும் மகளிரிடம் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. அண்மையில் இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், மருத்துவ உலகுக்கு வெளியே இருப்போர் சொல்வது இதற்கு நேர் எதிரான ஒன்று. குழந்தை மிகவும் பெரிதாக இருப்பதால் சுகப்பிரசவம் மிகமிக அரிது. வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் மட்டுமே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொன்னதால் ஒப்புக்கொண்டோம் என்பதாகவும், குழந்தை தலை புரண்டு கிடக்கிறது என்றும், பனிக்குடம் உடைந்துவிட்டதால் இனி சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறித்தான் சிசேரியனுக்கு சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

உண்மைகளும் பின்னணிகளும் எதுவாக இருந்தபோதிலும் சிசேரியன் தேவைப்படும் நேர்வுகள் மிகவும் குறைவு என்பதும் இவற்றை முறையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பால் தவிர்த்துவிட முடியும் என்பதுமே நிஜம். இது ஒரு தாயின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகமிக இன்றியமையாதது.

உழைக்கும் மகளிர் சிசேரியன் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள் என்கின்ற ஆய்வு முடிவு நம்பும்படியாக இல்லை. சிசேரியன் செய்துகொண்டால், அந்தத் தாய் எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகும். அவர் அன்றாடப் பணிகளை தானே செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இவ்வளவு சிரமங்களை ஒரு கர்ப்பிணி விரும்பி ஏற்கிறார் என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை.

மேலைநாடுகளில், முடிந்தவரை இயற்கையான பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது தாய் சேய் நல மருத்துவருக்கு இழிவு என்பதாகவும், கர்ப்ப நேரத்தில் மருத்துவர் கர்ப்பிணித் தாயைச் சரியாக வழிகாட்டவில்லை என்பதாகவும் அங்கே கருதப்படுகிறது. இந்தியாவின் நிலைமை நேர் எதிராக மாறிக்கொண்டு வருகிறது. இது ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்திற்கு வழிகோலாது.

முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். முந்தைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இயற்கையான மக்கட்பேறு சாத்தியமே! அது வலியுறுத்தப்பட வேண்டும்.