Home பெண்கள் உடல் கட்டுப்பாடு முதுகுவலியை தீர்க்கும் பயிற்சிகள்

முதுகுவலியை தீர்க்கும் பயிற்சிகள்

38

நேர்கொண்ட பார்வை…
நிமிர்ந்த நடை…
இது மனிதனின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

மனித உடலில் இதற்கான முக்கிய காரணியாக திகழ்வது முதுகெலும்பு.

இதில் வலி ஏற்பட்டால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லி மாளாது.

இன்றைய நவீன உலகில் பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு முதுகு வலி ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்கு நமது ஊரின் சாலைகளும், அதில் இருக்கும் குண்டு, குழிகளும் காரணமாகும்.

மனிதனின் முதுகெலும்பு தொடர் ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள் அனைத்தும் நேர்த்தியாக இணைக் கப்பட்ட சங்கிலி தொடராகும்.

உடலில் உள்ள முதுகெலும்பு தொடர் பார்ப்பதற்கு கரும்பு கனுக்களை போல காட்சி தரும். இது அடியில் பருமனாகவும், மேலே செல்ல செல்ல மெலிதாகவும் காணப்படும்.

அதாவது நமது கழுத்து பக்கம் உள்ள முதுகெலும்பு மிகவும் சிறியதாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் தண்டுவட நரம்பு பகுதி பெரிதாக காணப்படும். பிறகு கீழே வரவர தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மற்ற பாகங்களுக்கு பிரிய, பிரிய தண்டுவடம் மெலிந்து விடுகிறது.

தண்டுவட எலும்புகளுக்கு இடையிலேயே சவ்வு போன்ற ஒரு பொருளும் உள்ளது. பார்ப்பதற்கு பரோட்டா போன்று இருக்கும். இதன் காரணமாகத் தான் தண்டு வட அசைவுகள் ஏற்படுகின்றன. இது கிழியலாம். அடியோ, அழற்சியோ ஏற்படலாம். வலி, மரத்து போதல், பலம் குறைந்து போதல் போன்றவை இதன் குறிப்புகளாகும்.

குறிப்பாக இடுப்பு பகுதியில் இது போன்ற நிகழ்வு அதிகம் காணப்படுகின்றது. நடு முதுகுப்பகுதியில் அவ்வளவாக ஏற்படுவதில்லை. இவ்வாறு அழுத்தப்பட்ட சவ்வு, நரம்பு மண்டலத்தில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக காலில் வலி உருவாகிறது.

மேலே சொன்ன இரண்டு எலும்புகளுக்கு இடையில் இருக்கும் ‘சவ்வு விலகல்’ பிரச்சினையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. இவ்வாறு விலகிய சவ்வானது அருகில் இருக்கும் நரம்பு அல்லது தண்டுவடத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் சில நேரங்களில் பொருட்களை தூக்குவதற்குகூட முடியாத நிலை ஏற்படும். நடுத்தர வயது கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், கடுமையான வேலைகளில் ஈடுபடுவோருக்கும் அதிக வலி ஏற்படும். இடுப்பு பகுதியும், பின்பகுதியும் மரத்துப்போகும். இது தொடையின் ஆடு சதை வரை ஏற்படும். இது போல கழுத்தில் சவ்வு விலகினாலும் வலி ஏற்படும்.

இரவு நேரங்களில் தும்மினாலும் இருமினாலும் கூட வலி ஏற்படும். அதோடு சிரித்தால் வலி அதிகரிக்கும்.

வலிக்கான காரணம் :

இந்த வலிக்கான காரணம் என்ன? என்பதை சிறு பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கலாம். வலி இருக்கும் இடத்தில் உணர்ச்சி இருக்கிறதா? எவ்வளவு பலம் இருக்கிறது? எப்படி நடக்கிறார்கள்? நிற்க முடிகிறதா? உட்கார முடிகிறதா? படுத்துக் கொள்ள முடிகிறதா? நேராக படுத்தபடி காலை தூக்க முடிகிறதா? பின்னோக்கி வளைய முடிகிறதா? போன்ற சோதனைகளை செய்து வலி எங்கெங்கு ஏற்படுகிறது என்பதை கண்டு பிடிக்கலாம்.

இதில் முதுகு சிக்கலால் வலி ஏற்பட்டால் தொடையில் இருந்து கால் வரை ‘சுரீர்’என இழுக்கும் உணர்வு ஏற்படும். கணுக்கால் வரை இது பரவும். முதுகை சற்று திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ வலி அதிகரிக்கும். இருமினாலும், தும்மினாலும் கூட வலி கடுமையாகும். படுத்தவுடன் சற்று குறைந்தது போல் இருக்கும் வலி பின்னர் புரண்டு படுக்கும் போது மேலும் அதிகரிக்கும். பொருட்களை தூக்கும் போது கை பிசகினாலோ அதன் பாதிப்பு முதுகில் எதிரொலிக்கும். அப்போது தசை பிடிப்பும் ஏற்படும்.

இது போல தண்டுவடத்திற்கு இடையே அகச்சுருக்கம் ஏற்படும். இது சுருங்கினாலும் முதுகு வலி வரும். இம்மாதிரியான வலி வரும் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டு முதுகு வளைந்து காணப்படும்.

6 வார சிகிச்சை :

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், கனமான பொருட்களை தூக்குபவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மருத்துவரிடம் நோயாளி சொல்லும் அறிகுறிகளை கொண்டே இந்த நோயை தெரிந்து கொள்ளலாம். அல்லது எக்ஸ்ரே சோதனை, எம்.ஆர்.ஐ.ஸ்கேன் போன்றவை எடுத்தும் அறிந்து கொள்ளலாம். இந்த சோதனைகள் மூலம் வலி சவ்வு விலகுதல், நரம்பு மண்டல அழுத்தம், தண்டுவட அகச்சுருக்கம் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

இவற்றை கண்டு பிடித்த பிறகு ஓய்வு கொடுத்தல் அல்லது டிராக்ஷன் கொடுப்பது மூலம் வலியை கட்டுப்படுத்தலாம். அதே நேரம் ஆயுர் வேதத்தில் இதற்கு அற்புதமான சிகிச்சைகள் உள்ளன. அபான வாயுவை சீர்படுத்தும் ஆமணக்கு வேர் கஷாயம், கருங்குறிச்சி வேர் சேர்ந்த சகசராதி கஷாயம், நொச்சியால் காய்ச்சப்பட்ட ஆமணக்கு எண்ணெய் சேர்த்து தசமூலம், உப்பு காடி சேர்த்த எண்ணெய் குளியல், வஸ்தி எனப்படும் ஆசன வாய் மூலம் செய்யப்படும் பீச்சங்குழல் சிகிச்சை போன்றவை அளிக்கும் போது அற்புதமான பலன் கிடைக்கும். அறுவை சிகிச்சை இல்லாமல் கூட நோயை குணப்படுத்த முடியும்.

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சில நேரங்களில் சவ்வு பிதுங்கி பாடாய் படுத்தலாம். உடற்பயிற்சிகள் மூலம் இதை குறைக்க முடியும். தசைகளை வலுவூட்டும் பயிற்சிகளை முதலில் செய்ய சொல்ல வேண்டும். பின்னர் மெதுவாக வேலைகளை செய்யச் சொல்லி நாள் ஆக ஆக கடுமையான வேலைகளை செய்ய தொடங்க வேண்டும். இதன் மூலம் 6 வாரத்தில் நோய் குணமாகும்.

முதுகுவலியால் கடுமையாக பாதிக்கப்பட்டால் 3 முதல் 4 நாட்கள் படுக்கையில் நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருக்க வேண்டும். இதுவே வலியைக் வெகுவாக குறைக்கும். நாற்காலியின் சாயும் பகுதி, பாதியாக உள்ள நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார வேண்டும். இடுப்பை விட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் வைத்துக் கொள்ளலாம்.
கால்மேல் கால் போட்டு உட்கார கூடாது. அது போல நாற்காலியில் சரிந்த நிலையிலும் அமரக்கூடாது. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளை தவிர்க்க வேண்டும். தேங்காய் நார் அடைக்கப்பட்ட மெத்தைகளில் தூங்குவது நல்லது. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில்களில் படுப்பது மிகவும் நல்லது.

படுக்கையில் இருந்து ‘திடும்’ என எழுந்திருக்க கூடாது. மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு சென்று கால்களை தரையில் ஊன்றி எழுந்து உட்கார வேண்டும். பொருட்களை தூக்கும் போதும், உயர்த்தி எடுக்கும் போதும் முழங்கால்களை வளைக்க வேண்டும். மாறாக முதுகை வளைக்க கூடாது.
நீண்ட நேரம் கார் ஓட்டுவதாக இருந்தால் முதுகுக்கு பின் சிறிய குஷன் வைத்து கொள்ளலாம்.

நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்யும் போது முதுகெலும்பு அதிக அழுத்ததிற்கு உள்ளாகிறது. இதனாலும் இடுப்பு வலி ஏற்படும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து பின்னர் அமர வேண்டும்.கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்போரும் முதுகுவலிக்கு ஆளாகிறார்கள். அவர்கள் கம்ப்யூட்டர் இருக்கும் மேஜையை வசதிக்கு ஏற்ப ஏற்றி இறக்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பணிமுடிந்ததும் இவர்கள் கண்டிப்பாக சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஹைகீல்ஸ் அணியும் இளம்பெண்களும் இடுப்பு வலிக்கு ஆளாகிறார்கள். அதிக உயரம் உள்ள குதிகால் செருப்புகளை அணிவதே இதற்கு காரணமாகும். அதனை தவிர்ப்பது நல்லது.

ஆயில் மசாஜ் :

கொட்டஞ்சுக்காதி தைலம் சிஞ்சாதி தைலம், போன்றவற்றைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உபநாக சிகிச்சை :

இஞ்சி, பிற மருந்துகளால் பொடிக்கப்பட்ட பொடியை, புளிச்சாறுடன் கலந்து முதுகில் பற்று போடுவது சிறந்தது. ஆமணக்கு இலை, ஊமத்தை காய் அல்லது ஆமணக்கு விதையுடன் எள் சேர்த்து அரைத்துப் பூச்சு போடுவது நல்லது.

கொள்ளு ரசம் :

முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டுத் தேநீர் செய்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

இது போல வலி இருக்கும் இடத்தில் தேய்த்துக் கொள்ள எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாம். இதற்கு வெற்றிலை, தேங்காய் எண்ணெய் ஆகியவை வேண்டும்.
முதலில் வெற்றிலைகளை எடுத்துச் சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி, முதுகு வலி குறையும்.

வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வரலாம். வாதநாராயணன் இலை இடுப்பு வலியைக் குணமாக்கும். கொள்ளு பல பிரச்சினைகளைத் தீர்க்கும் இயற்கை உணவுப் பொருளாகும். கொள்ளு ரசம் வைத்துக் குடிக்கலாம்.