Home அந்தரங்கம் முதல் இரவு ஏன் முக்கியமானது?

முதல் இரவு ஏன் முக்கியமானது?

310

பருவ வயது வந்த ஆண், பெண் வாழ்க்கையில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது, முதல் சந்திப்பு. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவதற்கும், எதிர்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும் இருவரும் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு அடித்தளம் அமைத்து தருகிறது, இந்த முதல் சந்திப்பு. புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பையும் இந்த முதல் சந்திப்புதான் தருகிறது.

இந்த முதல் சந்திப்பை மூன்று விதமாக பிரிக்கலாம். அது வெறும் நட்பாக அமையலாம், அல்லது காதலாக மலரலாம். அதுபோய் கல்யாணத்திலும் நிறைவடையலாம். கல்யாணத்தில் அவர்கள் இணையும்போது, அந்த முதல் சந்திப்பு, மனோரீதியாக நெருங்கி, உடல்ரீதியாக நிறைவடைகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள், முதலிரவையும் திருமணத்தின் முக்கிய சடங்காக அங்கீகரிக்கிறார்கள். அதற்கு `முதல்’ என்ற அடைமொழியையும் கொடுத்திருக்கிறார்கள்.

முதலிரவு என்பது, திருமணத்தை முழுமைப்படுத்தும் சடங்காகவும், தம்பதிகளுக்கான சங்கமமாகவும் அமைகிறது.

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்விற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது மற்ற உயிரினங்களிலிருந்து பண்பட்ட மனிதனை பிரித்து காட்டவும், வாழ்க்கையை வகுத்து காட்டவும் உதவுகிறது.

திருமணத்தை பல சடங்குகளாக பிரித்து, நடத்திக்காட்டுவதன் மூலம் இந்திய திருமணங்கள் உன்னத நிலையை அடைந்திருக்கின்றன. அனைத்து சடங்குகளும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த பாதுகாப்பை பின்னணியாக கொண்டதாக இருக்கிறது.

நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் எதிர்கால பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் உயர்த்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் சாந்தி முகூர்த்தம் என்பதும் ஒரு பெண்ணின் தேவை, பாதுகாப்பு, எதிர்கால சந்ததியின் வளர்ச்சி போன்றவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் வாழ்ந்து, குழந்தைகளைப் பெற்று அவர்களை கடைசிவரை காப்பாற்றும் கடமை கணவருக்கு இருக்கிறது. அந்த கடமையில் இருந்து அவர் தவற முற்படும்போது இந்த சடங்குகள் அவரை கட்டுப்படுத்துகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு சமூகம் அவரை தட்டிக்கேட்கிறது. சடங்குகள் அப்போது மனைவிக்கு துணையாக வருகிறது. உறவுகளையும், சமூகத்தையும் சாட்சியாக வைத்து நடத்தப்படும் திருமண சடங்குகள் அனைைத்தும் அவர்களை ஒரு பாதுகாப்பான சமூக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. இந்த சமூக கட்டுப்பாடு வருங்காலத்தில் அவர்களை ஒரு ஒழுக்கமுள்ள பிரஜைகளாக வெளிப்படுத்துகிறது. இது அவர்களுக்கு தார்மீக பலத்தை அளிக்கிறது.

திருமணம் என்பதே இருவரின் வாழ்க்கையை நாலு பேரின் சாட்சியோடு ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு வருவதே ஆகும். இதில் சுற்றியுள்ள உறவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கற்பு என்ற விஷயத்தை குடும்ப கவுரவமாக மதிக்கும் நம் இந்திய திருமணத்தில் உள்ள சடங்குகள் அனைத்தும் அதை பாதுகாக்கும் விதமாகவே அமைந்து உள்ளது. அந்த விதத்தில் இந்த சாந்தி முகூர்த்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சடங்காக கருதப்படுகிறது.

இருமனம் சேர்ந்தால் திருமணம் என்ற தத்துவத்தை எல்லோரும் ஏற்று கொண்டாலும், திருமணத்திற்கு சாட்சியை தேடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு தேவை என்பதுதான் அதற்கான காரணம். சம்பந்தப்பட்ட யாருக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற மனிதாபிமானத்தோடு இந்திய திருமண சடங்குகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சடங்கும் ஒரு ஆழமான உட்கருத்துடன் இயற்றப்பட்டு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு செயல்படும்போது திருமணமும், அதன் மூலம் வாழ்க்கையும் புனிதம் அடைகிறது.

ஒரு கவிஞன் கவிதை வடிக்க பெண் காரணமாகிறாள். அற்புதமான சிலை வடிக்க பெண் தான் தூண்டுகோலாகிறாள். ஓவியமும், இலக்கியமும் பெண்ணின்றி தோன்றுவதில்லை. நம் இந்திய மண்ணில் சாஸ்திரங்கள் தோன்றவும் பெண்ணே முழு முதல் காரணமாக இருந்திருக்கிறாள்.

“மாத்ரு தேவோ பவ” என்கிற வேதத்தில் பெண்ணே போற்றுதலுக்குரிய முதல் இடத்தைப் பிடிக்கிறாள். அத்தகைய பெண்ணை போற்றவும், அவளின் உரிமைகளை பாதுகாக்கவும் எழுந்ததுதான் நம் இந்திய தர்ம சாஸ்திரங்கள். திருமண சடங்குகள் யாவும் இந்த சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்தே நடத்தப்படுகிறது. அந்த சாஸ்திரங்களில் முதலிரவும் இடம் பிடிக்கிறது. முதலிரவு என்பது வருங்கால சந்ததியினருக்கு உறவுகளும் சமூகமும் கொடுக்கும் அங்கீகாரமாகவும், பாதுகாப்பாகவும் அமைகிறது.