Home சூடான செய்திகள் திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா?

திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா?

18

அந்தப் பையனுக்கு அடுத்த வாரம் திருமணமாக இருந்தது.
ஆயினும் முகத்தில் அதற்கான பூரிப்பைக் காண முடியவில்லை. ஏதேதோ சில்லறைப் பிரச்சனைகள், நோய்கள் பற்றியே பேசிக்கொண்டிருந்தான். இவன் மனத்தின் உள்ளே ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

திருமணமாக இருப்பதால் ஏதாவது பாலியல் பிரச்சனையா? அதனால்தான் சொல்ல வெட்கப்படுகிறானா? நேரிடையாகவே கேட்டேன்.

‘நான் சின்ன வயசிலை கெட்ட பழக்கம் பழகியிட்டன. இப்ப கைவிட்டிட்டன். அதான் அது அது …’ எனத் திணறினான்.

‘அது என்ன கெட்ட பழக்கம்?’

‘நான் என்ரை கையாலேயே …’ மீண்டும் திக்கினான்.

‘சுய இன்பமா?’ வினவினேன்.. தான் நினைத்ததை நான் சொல்லிவிட்டேன் என்பதில் அவன் முகம் மலர்ந்தது.

இவனைப்போல சுயஇன்பம் செய்ததையிட்டு குற்ற உணர்வூடன் வருபவர்கள் பலர். இரவில் தானாகவே ஸ்கல்தமாவதால் தனது ஆண்மை பாதிப்படையுமா என பயந்து வரும் இளைஞர்கள் தொகையும் அதிகம்.

உண்மையில் இவை எவையுமே பிற்காலத்தில் பாலியல் உறவில் பிரச்சனைகளை உண்டாக்கும் கெட்ட செயல்களல்ல. ஆபத்தான நோய்களுமல்ல. தன்னைத்தானே நொந்து கழிவிரக்கம் கொள்ள வேண்டிய ஈனச் செயல்களுமல்ல.

பதின்ம வயதுகளில் பையன்களின் ஆண் உறுப்பு வளர்ச்சியடைகிறது. விந்து உற்பத்தியும் தொடங்குகிறது. அது வெளியேற வேண்டும்தானே? பானை நிறைந்தால் நீர் வெளியே சிந்தும். இதுபோல உற்பத்தியாவது ஏதாவது வழியில் வெளியேறவே செய்யும்.

எனவே தூக்கத்தில் ஸ்கல்தமாவது என்பது இயற்கையான செயல்தான். அவ்வாறு வெளியேறும்போது ஒரு வகை இன்பத்தையும் உணர்கிறான். சற்று ஆராய்ச்சி மனமுள்ள பையன் தனது கையால் அதை வெளியேற்றிப் பார்க்கிறான். அதில் மேலும் ஆனந்தமடைகிறான்.

இதேபோல பெண்பிள்ளைகளும் தமது உறுப்புகளின் வளர்ச்சியை அவதானிக்கிறார்கள் தொட்டுப் பார்க்கிறார்கள். உறுப்பின் மொட்டை வருடுவதால் சுயஇன்பம் பெறுவதுண்டு.

இவை இயற்கையானவை, ஆபத்தற்றவை. எதிர்பாலத்தில் கணவன் மனைவி இடையேயான உடலுறவைப் பாதிக்கப் போவதில்லை.

மாறாக ஓரினப் பாலுறவு சர்ச்சைக்குரியது.

பலரும் தமது பதின்ம வயதுகளில் இதையும் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள். இதுவும் இயல்பானதுதான்.

ஆனால் ஆபத்தற்றது என்று சொல்ல முடியாது.

காரணம் ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ அங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. அதாவது ஹேர்பீஸ், கொனரியா, சிபிலிஸ் முதல் எயிட்ஸ்வரை எதுவுமே தொற்றக் கூடும். இது ஒரு சாத்தியம் மட்டுமே.

ஆயினும் எனக்கும் தொற்றியிருக்குமோ என மனத்துக்குள் மறுகி துன்பப்பட்டுக் கொண்டிருக்காது வைத்திய ஆலோசனை பெறுவது அவசியமாகும். இவற்றில் பலவற்றிற்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்கின்றன. வைத்தியரிடம் எதையும் சொல்ல தயங்கவோ, வெட்கப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை. அவர்கள் இரகசியம் காப்பவர்கள்.

வெளிப்டையாகப் பேசி ஆலோசனை பெறாது மனத்துக்குள் அடக்கி வைப்பதால்தான் பலர் திருமணத்தின் பின் குற்ற உணர்வுக்கு ஆளாகி பீதி, பதகளிப்பு, மனச்சோர்வு, உடலுறவில் சிக்கல் போன்ற நோய்களுக்கு ஆளாகி தமது திருமண வாழ்வின் மகிழ்ச்சியையே தொலைத்து விடுகிறார்கள்.

பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசாத எமது சமூகச் சூழலில் திருமணத்திற்கு முன்னான ஆற்றுப்படுத்தல் (Premarital Councilling) செய்வது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

திருமணமாக இருக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் இது அவசியம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து ஆற்றுப்படுத்துவதற்கு எமது சமுதாயம் தயாராகாத நிலையில் தனித்தனியாகவும் செய்யலாம்.

பாலியல் பிரச்சனைகளுக்கு மட்டுமே இது அவசியம் என்பதில்லை. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ விதம் விதமான பிரச்சனைகளை, சவால்களை இருவரும் எதிர்நோக்க நேரிடும். அவற்றை திடமாக எதிர்கொள்ள ஆற்றுப்படுத்தல் உதவும்.

வைத்தியர்தான் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை. மத நிறுவனங்கள் மேலும் பொருத்தமாக இருக்கலாம். மதகுருமார்களுக்கு அதில் சிறு பயிற்சி அளித்தால் போதுமானது.