Home ஆரோக்கியம் மசாஜ் செய்வது ஏன்? எப்படி? எப்போ? – ஒரு பார்வை

மசாஜ் செய்வது ஏன்? எப்படி? எப்போ? – ஒரு பார்வை

41

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.
இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.

மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு சில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும்.அதிலும் இயற்கை மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது இந்த மசாஜ். மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இந்தியா, சீனா, கிரீஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மசாஜ், நோய் தீர்க்கும் ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக காண்போமா?.
மசாஜ் செய்வதால், தோலில் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மசாஜ் செய்வதன் மூலம் தோலில் காணப்படும் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் தீய கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறி விடும். மசாஜ், தசைகளின் இறுக்கத்தை குறைத்து, தசை வலியை நீக்குகிறது. கடினமான வேலைகளால் உடல் தசைகளில், “லாக்டிக் ஆசிட்’ சேரும். மசாஜ், தசைகளில் சேரும், “லாக்டிக் ஆசிட்’களை நீக்கி, உடலை புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்துடன் இருக்க உதவும்.
ரத்த ஓட்டம்: மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் உறுப்புகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைப்பதுடன், அந்த உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், வீக்கம் போன்றவை ஏற்படுவது குறையும். மசாஜ் செய்வதால் ரத்தத்தில் அதிகளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறன் மற்றும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
நரம்பு: நரம்புகளில் குறைந்த அழுத்தத்துடன், மெதுவாக மற்றும் மிதமாக செய்யப்படும் மசாஜ், நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைத்து, அவற்றை மென்மையாக்கி. சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். நரம்புகளை இளக்கமடைய வைத்து அதன் ஆற்றலை அதிகரிக்கும்.
செரிமான மண்டலம்: வயிற்றில் மசாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும். மேலும் கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீர் மண்டலம்: மசாஜ் செய்வது, சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டுகிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம் உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகின்றன.
இதயம்: முறையாக செய்யப்படும் மசாஜ், இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன் செயல் திறனை அதிகரிக்கிறது.
பொதுவாக, மசாஜ் செய்வதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன்மை உடையதாக இருந்தால் அல்லது உடல் மிகவும் பலவீனமாக இருந்தால், ஈரத் துணி அல்லது மருந்து எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். மசாஜ் செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ் செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ்வாறு செய்வதால் தோலில் காணப்படும் துளைகள் அடைபடும்.
மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:

* காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் எவ்வித மசாஜும் செய்யக்கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதை தவிர்ப்பது நல்லது.

* வயிற்றுப் போக்கு வாயுப் பிரச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்னை உடையவர்கள் வயிற்றில் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

* தோல் வியாதி உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்தமற்றது.

 
உடலுக்கு தகுந்த மசாஜ் எண்ணெயை தேர்ந்தெடுப்பது எப்படி?

மசாஜ் செய்ய, மசாஜ் எண்ணெய் ஒரு முக்கிய தேவையாகும். பொதுவாக மசாஜ் எண்ணெய்கள் பூக்கள், கொட்டைகள், உணவு வகைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. எண்ணெயில் சேர்க்கப்படும் பொருட்களால் உடலுக்கும், மனதுக்கும் ஒரு புத்துணர்வு ஏற்படும். அனைத்து எண்ணெய்களும் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்காது. ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், திராட்சை விதை எண்ணெய், ஹாசில்நட் எண்ணெய் மற்றும் லாவண்டர் எண்ணெய் ஆகியவை முக்கிய மசாஜ் எண்ணெய்களாகும். ஆனால் அவரவர் உடலுக்கு ஏற்ற எண்ணெய் எதுவென்று அறிந்து உபயோகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தோல் அரிப்பு, தொற்று போன்றவை ஏற்பட்டு அவதியுறுவோம்.

மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் சில எண்ணெய் வகைகள் உடல் அசதி, வலி போன்றவற்றை போக்குவதில் மிகுந்த திறன் கொண்டவையாக இருக்கிறது. எல்லாவிதமான எண்ணெயிலும் பல நன்மைகள் உண்டு. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவற்றை உபயோகிக்க முடியாது. சரி, இப்பொழுது மசாஜ் எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பதில் சில வழிமுறைகளைக் காண்போமா!!!

1.முதலில் எந்த விதமான மசாஜை செய்யப் போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆலிவ் போன்ற எண்ணெய் வகைகள் குறைந்த அளவு மசாஜ் செய்தாலே சிறந்த பலனளிக்கும். இந்த எண்ணெய்கள் வழுக்கும் தன்மை அதிகம் பெற்றுள்ளதால், தோலினால் விரைவாக உறிஞ்சப்படுவதில்லை. திராட்சை விதை எண்ணெய், க்ரீம் போன்றவை குறைந்த அழுத்தத்தோடு கூடிய மசாஜிக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த வகை எண்ணெய்கள் தோலினால் சீக்கிரம் உறிஞ்சப்படுவதால், தோல் எரிச்சலை தடுக்கும்.
2. மசாஜ் செய்ய உகந்த நேரத்தையும், இடத்தையும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
3. தனிப்பட்ட விருப்பங்களைப் பார்க்கவும். மணம் மிகுந்த மசாஜ் எண்ணெயால் செய்யப்படும் அரோமாதெரபியின் நன்மைகளை சிலர் விரும்புவர். ஆனால் சிலரோ மணம் மிகுந்த எண்ணெய் வகைகளை விரும்ப மாட்டார்கள். மற்றும் சிலருக்கோ வலுவான நறுமணத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒரு தொழில் பயன்பாட்டிற்காக எண்ணெய்யை தேர்வு செய்தால், வாசனையற்ற எண்ணெய்களை தேர்வு செய்வது நல்லது. இதுவே தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எண்ணெயை தேர்வு செய்ய விரும்பினால், பிடித்த நறுமணத்துடன் கூடியதை தேர்வு செய்யலாம்.
4. எண்ணெயால் வரும் ஒவ்வாமையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு நறுமணத்தால் வரும் ஒவ்வாமை போக, குறிப்பிட்ட பூக்கள் மற்றும் கொட்டைகளிலிருந்து இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமை விஷயத்தில் அக்கறை கொண்டிருந்தால், அவை ஏற்படாத வண்ணம் எண்ணெய்களை தேர்வு செய்ய வேண்டும்.
5. எப்பொழுதும் சிகிச்சைக்குப் பின் வரும் பயனை கருத்தில் கொண்டு மசாஜ் எண்ணெய்களை வாங்க வேண்டும். சில எண்ணெய்கள் பச்சைக் கற்பூரம் மற்றும் பல்வேறு சாறுகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதனால் எரிச்சலும், வலியும் குறையும் வாய்ப்பு ஏற்படும்.