Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை பிறப்புக்குப் பிறகு மார்பக இரத்தநாள வீக்கம்

குழந்தை பிறப்புக்குப் பிறகு மார்பக இரத்தநாள வீக்கம்

24

குழந்தை பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மார்பக இரத்தநாள வீக்கம் என்றால் என்ன?

பிரசவித்த தாய்மார்கள் பலருக்கு, அவர்களின் மார்பகத் திசுக்களில் பால் அளவுக்கு அதிகமாக நிரம்பும்போது மார்பக இரத்தநாள வீக்கம் என்பது ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டால் அதிக வலியாக இருக்கும், இயல்பாக இது தற்காலிகமானது.

காரணங்கள்

பால் உற்பத்தியில் உள்ள சமநிலையின்மையே இதற்கு முக்கியக் காரணம். அதாவது இவர்களுக்கு குழந்தைக்குத் தேவையானதை விட அதிக அளவில் பால் சுரக்கும். வழக்கமாக, பால் உற்பத்தி ஆவதற்கு முன்பு, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த சீம்பால் சுரக்கும்.பால் உற்பத்தி தொடங்கும்போது, மார்பகங்கள் வீங்கும், கூச்சம் ஏற்படும், பெரிதாகும். வழக்கமாக, ஓரிரு நாட்கள் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டினாலே மார்பக இரத்தநாள வீக்கம் சரியாகிவிடும்.

அறிகுறிகள்

பொதுவாக, பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக இரத்தநாள வீக்கம் இருந்தால் பின்வரும் பிரச்சனைகளாக அது வெளிப்படும்:

மார்பகங்கள் நிரம்பியுள்ளது போன்ற உணர்வு
மார்பகங்களில் வலி, வீக்கம்
கக்கத்தில் வலி, வீக்கம்
முலைக்காம்புத் தோல் தடித்தல்
மார்பகங்களைத் தொட்டுப்பார்த்தால் கட்டி போன்று இருப்பது
நோய் கண்டறிதல்

இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்து உறுதிப்படுத்த சிறப்பு சோதனைகள் எதுவும் தேவையில்லை. அறிகுறிகளை வைத்தே இதனை உறுதிப்படுத்தலாம்.

சிகிச்சை

பொதுவாக, பால் உற்பத்தி தொடங்கிய சில நாட்களிலேயே குழந்தையின் தேவையைப் பொறுத்து அது தானாகவே உற்பத்தி சமநிலைக்கு வரும். இந்த அறிகுறிகளிளிருந்து நிவாரணம் பெற கீழ்க்கண்ட எளிய குறிப்புகள் உதவும்:

பாலூட்டும் முன்பு, இரண்டு மார்பகங்களுக்கும் வெப்ப ஒற்றடம் கொடுக்கலாம், அழுத்தி விடலாம் அல்லது மசாஜ் செய்யலாம்.
குழந்தைக்கு பால் தேவைப்படவில்லை என்றால், பாலைப் பீய்ச்சி வெளியே எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு (72 மணிநேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும்) பயன்படுத்தலாம்.
வலியைக் குறைக்க, குளிர் ஒற்றடம் கொடுக்கலாம்.
தாய்ப்பாலூட்டாத சமயங்களில், மார்பகங்களை வெப்பப்படுத்துவதோ அழுத்தித் தூண்டுவதோ கூடாது, மார்பகங்களை நன்கு தாங்கிப் பிடிக்கும் வகையிலான பிரா பயன்படுத்தவும்.
வலி தாங்க முடியாத அளவுக்கு இருந்தால், மருத்துவர் அதற்கு வலி நிவாரண மருந்துகளையும் அழற்சி எதிர்ப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.

தடுத்தல்

பாலூட்டும் செயலை கவனமாகக் கண்காணித்து சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இரத்தநாள வீக்கத்தைத் தடுக்கலாம். குழந்தைக்கு பால் தேவையா என்பதை குழந்தையின் சமிக்ஞைகளைக் கொண்டு சரியாகப் புரிந்துகொண்ட, எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் குழந்தைக்குப் பாலூட்டவும். ஒவ்வொரு முறை பாலூட்டும்போதும் மார்பகங்களில் பால் இல்லாதபடி காலியாக்கவும். இதன் மூலம் பால் சுரப்பு சீராக இருக்கும், குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

சிக்கல்கள்

முலைக்காம்புத் தோல் தடிப்பதாலும், மார்பகங்கள் அதிக பாலால் நிரம்பிவிடுவதாலும் குழந்தை சரியாகப் பாலருந்த முடியாமல் போகலாம், இதனால் சீக்கிரமே குழந்தை தாய்ப்பாலை விடுத்து புட்டிப் பாலுக்கு மாறக்கூடும்.
பால் குறைவாக வருதல்: தொடர்ந்து சரியாக பாலூட்டாமல் போனால், பால் முழுதும் காலியாகாது, இதனால் பால் உற்பத்தி குறையும்.
மார்பகப் பிரச்சனைகள்: இந்தப் பிரச்சனையால் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படலாம், முலைக்காம்பில் வலி ஏற்படலாம், மார்பக அழற்சி ஏற்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை

மார்பக இரத்தநாள வீக்கம் என்பது தற்காலிகமான பிரச்சனைதான். இதனைச் சமாளிக்க மேலே கூறிய வழிமுறைகளை நீங்களே வீட்டில் பின்பற்றிப் பார்க்கலாம். இவற்றைச் செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், மருத்துவரைச் சந்திக்கவும்.